Saturday, December 30, 2017

அன்புச் சகோதரர்கள்

"நான் அரசியலில் ஈடுபடுபவன். யார் என்ன கேள்வி கேட்டாலும் ஏதாவது பதில் சொல்லிடுவேன். மத்தவனுக்கு புரிஞ்சுதா இல்லையான்னு கவலைப்படமாட்டேன்." இப்படத்தில் இதைப் போல பல அரசியல் வசனங்கள் சோ வரும் காட்சிகளில். சுமாரான படத்தில் இப்படிப்பட்ட வசனங்கள் அவருடைய சொந்த வசனங்களாகவே இருக்க முடியும்; வசனகர்த்தாவுடையதாக இருக்க முடியாது. சில காட்சிகளே என்றாலும் சோ வரும் காட்சிகள் படத்தில் கலகல. கோபி என்ற கல்லூரி மாணவன் பாத்திரம்; நாயகியுடைய அண்ணன்; நாயகனுக்கு நண்பன். அவருக்கு ஜோடியாக வரும் நடிகையின் பெயர் தெரியவில்லை. பல படங்களில் சோவுக்கு ஜோடியாக நடித்த மனோரமா இப்படத்தில் அவருக்குத் தாயாராக வருகிறார்.

சோ தோன்றும் காட்சிகள், முத்துக்கு முத்தாக பாடல் காட்சி தவிர படத்தில் ரசிக்கும்படி எதுவும் இல்லை. நான்கு சகோதரர்களின் கதை. ரங்காராவ், மேஜர் சுந்தர்ராஜன், ஏ.வி.எம்.ராஜன், ஜெய் சங்கர் ஆகியோரே ஆண்ட நால்வர். மேஜர் ஒரு காலத்தில் ஜமுனாவைக் காதலித்து, அவரைத் தாயாக்கி விடுகிறார். சந்தர்ப்ப சூழ்நிலையில் அவரைத் திருமணம் செய்யாமல் முறைப் பெண்ணான தேவிகாவை மணந்து கொள்கிறார். பின் உண்மையறியும் ரங்காராவ் ஜமுனாவைத் தேடிப் போகிறார்; ஆனால் அவருக்கு ஜமுனா பெற்றெடுத்த குழந்தையே கிடைக்கிறது. அதை அவர் வளர்த்து வருகிறார். இந்த உண்மைகைகள் எதையும் அறியாத ஜமுனா மிகப் பணக்காரியானவுடன் இக்குடும்பத்தைப் பழி தீர்க்கிறார். மேஜருக்கு வேலை போகிறது. குடும்பம் வறுமையில் வாடுகிறது. குழந்தை ஒன்று இறக்கிறது. கடைசியில் உண்மை அறிந்து பகை மறந்து ஜமுனா இக்குடும்பத்துடன் ஒன்று சேர்கிறார்.

நியாயமாகப் பார்த்தால் மேஜர் தான் இக்கதையின் நாயகன். ஆனால் டூயட், சண்டைக்காட்சிகள் எனப் புகுத்தி ஜெய் சங்கரை ஹீரோ ஆக்கிவிட்டார் இயக்குனர். அவருடைய ஜோடி என்பதால் வெண்ணிறாடை நிர்மலாவை  நாயகி எனலாம். மற்றபடி ஜமுனா தான் முக்கிய பாத்திரத்தில் வருகிறார் - எதிர் நாயகியாக. மனோரமா, வி.கே.ராமசாமி, வெண்ணிறாடை மூர்த்தி, நாகையா, பிரமிளா, ஸ்ரீ காந்த், ஜுனியர் பாலையா எனப் படம் முழுக்க நட்சத்திரப் பட்டாளம். யாருக்கும் பெரிதாக ஸ்கோப் இல்லை.

கதை சுமார். திரைக்கதை சுத்த மோசம். வசனங்கள் வேஸ்ட். ஜெய், ராஜன் போன்றோர் ஓவர் ஆக்டிங். மொத்தத்தில் மிகச் சுமாரான படம்.

லட்சுமி தீபக் இயக்கிய இப்படம் 4 மே 1973 யில் வெளியானது. 

Saturday, December 23, 2017

கங்கா கௌரி

சோ நடித்த முதல் புராணப் படமிது. பி.ஆர். பந்துலு இயக்கத்தில் 14 ஏப்ரல் 1973யில் வெளியான படம். சோ நாரதராக நடித்துள்ளார். அரசியல் வசனங்களை மறைமுகமாகப் புகுத்தி நையாண்டி செய்கிறார். ரசிக்கும்படியான நடிப்பு. ஒரு பாட்டில் இவருக்குச் சீர்காழி கோவிந்தராஜன் குரல் கொடுத்துள்ளார்.

சோ, மனோரமா, ஜெயலலிதா, ஜெயந்தி போன்றோர் நிறைவாக நடித்திருந்தாலும் சோ தோன்றும் காட்சிகளைத் தவிர மற்ற இடங்கள் ரசிக்கும்படியாக இல்லை. பல புராண கதைகளின் கலவை தான் இப்படத்தின் கதை. சிரிக்கும்படியான தோற்றத்தில் நவக்கிரகங்கள், தொந்தியுடன் சிவன் (ஜெமினி கணேசன்), வாடி போடி எனச் சண்டையிட்டுக் கொள்ளும் கங்கா - கௌரி, பயந்த சுபாவத்தில் கௌரி, போக்கிரித்தனமான கங்கா எனப் படம் முழுவதுமே அபத்தங்கள்.

ஓ.ஏ.கே. தேவர், அசோகன், சிவகுமார், பூர்ணம் விஸ்வநாதன், சி.கே.சரஸ்வதி, தேங்காய் சீனிவாசன் எனப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே வீணடிக்கப் பட்டுள்ளது.

Sunday, December 10, 2017

வந்தாளே மகராசி

மனோரமாவுக்கும் சச்சுவுக்கும் இதுவரை ஜோடியாக நடித்து வந்த சோ ஜெயலலிதாவுடன் ஜோடி சேர்ந்த படம். ஜம்பு என்ற கதாபாத்திரத்தில் சண்டைக்கார அக்காளுக்குப் பயந்த அப்பாவியாக வருகிறார். சிறிய வேடம்; ஓஹோ என்று சொல்லும்படியான காமெடி இல்லை; ஆனால் நிறைவாகச் செய்துள்ளார்.

14 ஏப்ரல் 1973யில் வெளியான இப்படத்தை கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கியுள்ளார்.

எம்.என்.ராஜம் எதிர் நாயகி. அவருக்கும் ஜெயலலிதாவுக்கும் தான் படம் முழுக்க ஸ்கோப். ஜெய்சங்கர் உட்பட மற்ற எல்லாருக்கும் படத்தில் அவ்வளவாக காட்சிகள் இல்லை.

பணக்காரரான வி.எஸ்.ராகவன் சபல புத்தியில் இளவயது ராஜத்தைத் திருமணம் செய்து கொள்கிறார். தந்தைக்காக புஷ்பலதா சொத்தைத் தியாகம் செய்கிறார். ராஜமும் அவருடைய அம்மாவும் (சி.கே.சரஸ்வதி) எல்லாருடனும் சண்டை பிடித்து தங்கள் கட்டுப்பாட்டுக்குள் சொத்தை வைத்துக் கொள்கின்றனர். கணவனை இழந்து வரும் புஷ்பலதாவையும் அவருடைய குழந்தைகளையும் ராஜம் படுத்துகிறார். ஒரு சிறு சண்டை காரணமாக அப்பாவியான ஜெயலலிதாவைத் தம்முடைய தம்பியான சோவுக்குத் திருமணம் செய்து வீட்டுக்கு அழைத்து வந்து கொடுமைப்படுத்துகிறார். அதைத் தாங்க முடியாத பக்கத்து வீட்டு ஜெய்சங்கர் கில்லாடியான இன்னொரு ஜெயலலிதாவை ஆள் மாறாட்டம் செய்கிறார். இந்த ஜெயா எப்படி ராஜத்தை வழிக்குக் கொண்டு வந்து நல்லவர்கள் அனைவரையும் காப்பாற்றினார் என்பதே மீதி கதை.

Wednesday, November 29, 2017

பிரார்த்தனை

2 பிப்ரவரி 1973யில் வெளியான இப்படத்தை இயக்கியவர் கௌசிகன். ஏ.வி.எம்.ராஜன், சௌகார் ஜானகி, நிர்மலா, மனோரமா, தேங்காய் சீனிவாசன், சுருளி ராஜன், ஸ்ரீ காந்த், சசிகுமார் ஆகியோருடன் சோவும் நடித்துள்ளார்.

இப்படத்தைப் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டாததால் மேல் விபரங்கள் தர இயலவில்லை.

Monday, November 27, 2017

பெத்த மனம் பித்து

14 ஜனவரி 1973யில் வெளி வந்த இப்படம் எஸ்.பி.முத்துராமன் இயக்கிய இரண்டாவது படம்.

எதிலும் கௌரவம் பார்க்கும் பணக்காரரான மேஜர் சுந்தர்ராஜனுடைய மகள் ஜெயா வாட்ச் மேன் முத்துராமனைக் காதலித்துத் திருமணம் செய்து கொள்கிறார். அதனால் அவர்களை ஒதுக்கி வைக்கிறார் மேஜர். கடைசியில் அவருடைய மகன் ஸ்ரீகாந்த் தவறான வழியில் போவதாலும், இன்னொரு மகளுடைய கணவரான வி.கோபாலகிருஷ்ணன் லஞ்சம் வாங்கி சிறைக்குப் போவதாலும், மனம் திருந்துகிறார். ஆனால் அதற்குள் அவருடைய மனைவி சாவித்ரி உயிரை விட்டு விடுகிறார்.

யதார்த்தமான நடிப்பு; நல்ல கதை; சிறந்த திரைக்கதை எனப் படம் நன்றாகவே உள்ளது. மிகச் சிறிய குறைகளே உள்ளன. இப்படத்தில் ஜெயசுதா அறிமுகமானார்.

சோ, சுருளி ராஜன், மனோரமா ஆகியோர் நகைச்சுவைக்கு; நகைச்சுவை சுமார் ரகமே. சோ ஜீப் டிரைவர்; அவருடைய மனைவியாக மனோரமா. 

நல்ல முடிவு

இப்படம் திரைப்படக் கல்லூரிகளில் பாடமாக வைக்கப்பட வேண்டிய படம். ஒரு படம் எப்படி மோசமாக இயக்கப்படக் கூடாது என்பதை எடுத்தக்காட்டும் விதமாக இப்படத்தைப் பாடத்தில் சேர்க்கலாம்.

23 ஜனவரி 1973யில் வெளிவந்த இப்படத்தை இயக்கியவர் சி.என்.ஷண்முகம். இப்படத்தில் சோவுக்கு பாலு என்ற அசட்டுப் பாத்திரம். தேவையற்ற படம். நகைச்சுவை படத்தைப் போலவே சகிக்கவில்லை. மனோரமா ஜோடி. அவரும் வீணடிக்கப்பட்டுள்ளார்.சோ பெண் வேடமிட்டு தேங்காய் சீனிவாசன் கையால் தாலி கட்டிக்கொள்கிறார். தம்முடைய தம்பிக்கு மகளைத் தர வேண்டுமென முன்பே பேசி வைத்து விடுகிறார். அக்காள், தம்பி இருவருமே சோ தான் எனத் தெரியாமல் தேங்காயும் ஒப்புக் கொள்ள, அவரை ஏமாற்றி மனோரமாவைத் திருமணம் செய்து கொள்கிறார் சோ.

ஜெயந்தி, நிர்மலா இருவரும் சகோதரிகள். நிர்மலாவை மனோகர் மானப்பங்க படுத்த முயலும்போது, அவர் கொல்லப்படுகிறார். அவரை ஜெயந்திதான் கொன்றார் என நினைத்து அவரைப் பிடிக்க போலீஸ் வருகிறது. அவர் நீரில் விழுந்து தப்பிக்கிறார். அவர் இறந்து விட்டார் என எல்லாரும் நினைக்கிறார்கள். தம்முடைய அண்ணனைக் கொன்றவளின் தங்கை வாழ்க்கையைக் கெடுக்க வேண்டுமென்பதற்காக முத்துராமன் நிர்மலாவைத் திருமணம் செய்து கொண்டு கொடுமைப்படுத்துகிறார்.

ஜெயந்தி ஜெமினியால் காப்பாற்றப் படுகிறார். வடநாட்டு இளவரசி எனப் பொய் சொல்லி, ஜெமினி அவரைத் திருமணம் செய்து ஊருக்கு கொண்டு வருகிறார். ஜெமினி முதலில் முத்து ராமனையும், பின் ஜெயந்தியையும் கொலையாளி எனச் சந்தேகிக்கிறார். ஜெயந்தி ஜெமினியையும், நிர்மலா முத்துராமனையும், சோ மனோகரின் மனைவியையும் சந்தேகிக்கின்றனர். கடைசியில் பைத்தியமாக வேடமிட்டு அலையும் சுகுமாரியே கொலையாளி எனத் தெரிகிறது.

கொலையாளியைக் கண்டுபிடிக்க கொலை நடந்த இடத்தில் கிடைக்கும் மோதிரத்தை ஊரில் உள்ள ஒவ்வொருவர் கையிலும் மாட்டிப் பார்த்து பொருந்துகிறதா என சோவும் மனோரமாவும் வேவு பார்ப்பது சுத்தப் பைத்தியக்காரத்தனம். அதைப் போல ஜெமினி முத்துராமனிடம் அவர் கொலையாளியா என வினவ, அவர் மறுத்தவுடன் அதை ஜெமினி நம்பி விடுவார். அதே பாணியில் பல காட்சிகள். எப்படி இவ்வளவு மோசமாக ஒரு இயக்குனரால் படமெடுக்க முடிந்தது. 

Friday, November 10, 2017

தேரோட்டம்

1971யில் வெளியான இப்படத்தை வி.டி.அரசு இயக்கியுள்ளார். ஜெமினி கணேசன், பத்மினி, சிவகுமார், மனோரமா, டைப்பிஸ்ட் கோபு ஆகியோருடன் சோவும் நடித்துள்ளார்.  

சீனா தானா என்பது கேரக்டர் பெயர். தெலுங்கும் தமிழும் கலந்த மொழியில் பேசும் வக்கீலாக வருகிறார் சோ. மனோரமா ஜோடி. நகைச்சுவை சுமார் ரகம்தான். 

தரிசனம்

1 பிப்ரவரி 1970யில் வெளியான இப்படத்தை  இயக்கியவர் வி.டி.அரசு. பில்டிங் காண்ட்ராக்டர் நல்லதம்பி என்ற பாத்திரத்தில் சோ தனி காமெடி டிராக்கில் கலக்கியுள்ளார். அவருக்கு ஜோடியாக மனோரமா. தம்முடைய தங்கைக்குச் சங்கீதம் கற்றுத் தர வரும் மனோரமாவைக் காதலித்து மணமுடித்துக் கொள்கிறார் சோ. அதன்பின் எதற்கெடுத்தாலும் பாட்டு பாடும் மனோரமாவைப் பாடாமல் நிறுத்தி வைக்க அவர் படாத பாடு படுவது சூப்பர் காமெடி. மனோரமாவும் போட்டி போட்டு மிகச் சிறப்பாக நடித்துள்ளார். இவர்கள் இருவரும் தனி டிராக்கில் காமெடி செய்வதே படத்தின் மிகப் பெரிய பலம்.

ஏ.வி.எம்.ராஜன் இரட்டை வேடத்தில் வருகிறார். பெரும்  பணக்காரரான அவர், தம்முடைய கவனமின்மையாலும் நடத்தையாலும் பணம் நஷ்டப்பட்டு அவதிப்படுகிறார். இரவோடு இரவாக வீட்டை விட்டு வெளியேறுகிறார். அவருடைய நண்பனான இன்னொரு  ராஜன் அவர் இடத்தில் வந்து, நொடிந்து போன வணிகத்தை நிலை நிறுத்தி, ஊதாரித்தனமாகச் செலவழிக்கும் குடும்பத்தினரைத் திருத்தி, தங்கைக்குத் திருமணமும் செய்து வைக்கிறார். ஓடிப் போன ராஜன் திரும்பி வருகிறார் - மனம் திருந்துகிறார்.

புஷ்பலதா ராஜனுக்கு ஜோடியாகவம், ஸ்ரீகாந்த் அவருக்குத் தம்பியாகவும் நடித்துள்ளனர். 

Sunday, November 5, 2017

டெல்லி மாப்பிள்ளை

13 செப்டம்பர் 1968யில் வெளிவந்த இப்படத்தை இயக்கியவர் தேவன்; தயாரித்தவர் வி.கே.ராமசாமி. சோவுக்கு சின்னத்தம்பி என்ற கதாபாத்திரம். நாயகனுக்கு இணையான பாத்திரம். அசடாக நடித்து மற்றவர்களை வசனங்களால் மடக்கும் சுவாரசியமான கதாபாத்திரம். சோ தோன்றும் காட்சிகளில் கலகலப்புக்குக் குறைவில்லை. சோவுடைய அரசியல் வசனங்கள் இல்லை என்றாலும், அவருடைய நகைச்சுவை சிறப்பாக அமைந்துள்ளது. இது அவருடைய சிறந்த படங்களில் ஒன்று.

பெரும் பணக்காரரான வி.கே.ராமசாமி எதிலும் அந்தஸ்து பார்ப்பவர். அவரைத் திருத்த அவருடைய மகன்களான ரவிச்சந்திரனும் சோவும் முயல்கிறார்கள். வி.கே.ராமசாமியுடைய தங்கை  முத்துலட்சுமி. அவருடைய மகளுடன் ரவிச்சந்திரனுக்குத் திருமணம் செய்து வைக்க திட்டமிடுகிறார் வி.கே. ஆனால் ரவியும் சோவும் சேர்ந்து பல திட்டங்கள் தீட்டி ஆள் மாறாட்டம் செய்து, கடைசியில் முத்துலட்சுமி மகளான சச்சுவை சோவும், முத்துலட்சுமியின் ஏழை தோழியான வரலட்சுமியுடைய மகளான ராஜஸ்ரீயை ரவியும் மனக்கின்றனர். என்ன திட்டங்கள், அதற்குரிய காட்சிகள், ஆள் மாறாட்டம் எல்லாம் நகைச்சுவையாக நகர்கின்றன. சுருளி ராஜனும் அவருக்கு ஜோடியாக மனோரமாவுக்கு சிறு வேடத்தில் நடித்துள்ளனர்.

Saturday, November 4, 2017

கன்னிப் பெண்

செப்டம்பர் 1969யில் வெளியான இப்படத்தை சத்யா மூவிஸ் தயாரித்துள்ளனர். . காசிலிங்கம்  இயக்குனர். ஜெய்சங்கர் நாயகன். வாணிஸ்ரீயும் லட்சுமியும் நாயகிகள். சோ துரைசாமி என்ற கதாபாத்திரத்தில் தோன்றுகிறார். வில்லன் வி.கே.ராமசாமியுடைய டிரைவர் சோ. வி.கே.ஆருடன் மனோகர், சுருளி ராஜன், தேங்காய் சீனிவாசன் எனப் பலரும் இருப்பார்கள். அவர்கள் மிகவும் சீரியஸாக பேசும் போது நடுவில் புகுந்து எதிர் வசனம் பேசி அவர்கள் காலை வருவதே படம் முழுக்க சோவின் வேலை. கடைசியில் வில்லன்களிடம் மாட்டிக் கொள்ளும் சிவகுமாரைக் காப்பாற்ற ஜெய்க்கு சோ உதவுகிறார்.


படம் ஓரளவுக்கு நன்றாக இருந்தாலும் நிறைய இடங்களில் லாஜிக் இடிக்கிறது. மேஜர் சுந்தரராஜன் நேர்மையான  போலீசுக்காரர். அவர் சுடப்பட்டு இறக்கிறார். அவர் இறக்கும் தறுவாயில் தம்முடைய மகனான ஜெய் போலீசில் சேர வேண்டுமென விருப்பம் தெரிவிக்கிறார். அவர் போலீசில் சேர்ந்ததால் அவருடைய தாய் மாமனான செந்தாமரை அவரைக் காதலிக்கும் தம்முடைய மகளான லட்சுமியை அவருக்குத் திருமணம் செய்து வைக்க மறுக்கிறார். வில்லன் மனோகரிடமிருந்து வாணிஸ்ரீயைக் காப்பாற்றுவதற்காக ஜெய் அவரைத் திருமணம் செய்து கொள்கிறார். மருமகளை மாமியாரான வரலட்சுமி கொடுமைப்படுத்துகிறார். ஜெய்யின் தங்கை நிர்மலா சிவகுமாரைக் காதலித்துத் திருமணம் செய்து கொள்கிறார். கோவில் நகைகளைத் திருடும் வி.கே.ஆர். கூட்டத்தாரின் சூழ்ச்சியால் சிவகுமார் கைது செய்யப்படுகிறார். கடைசியில் எல்லா உண்மைகைகளும் வெளியாகி, வில்லன்கள் கம்பியெண்ண, நாயகனும் அவரைச் சேர்ந்தவர்களும் மகிழ்ச்சியாக இருக்கும்படி சுபமாக முடிகிறது படம்.

Saturday, October 28, 2017

கற்பூரம்

1967யில் வெளிவந்த இப்படத்தைப் பார்க்கும் வாய்ப்பு எனக்கு இதுவரை கிட்டவில்லை.

இப்படத்தில் ஏ.வி.எம்.ராஜன், புஷ்பலதா, பாலையா, மணிமாலா, அசோகன், ஸ்ரீகாந்த், மனோரமாவுடன் சோவும் நடித்துள்ளார். சோவுடைய ஜோடி மனோரமா. சி.என்.ஷண்முகம் இயக்கம்.

Saturday, October 21, 2017

உனக்கும் எனக்கும்

இப்படம் 1972யில் வெளியானது. என்.எஸ்.மணியம்  இயக்கத்தில், ஜெய்சங்கர், பாரதி , ஸ்ரீ வித்யா , வாசு, எம்.என்.ராஜம், மனோரமா, சுகுமாரி, தேங்காய் சீனிவாசன் ஆகியோருடன் சோவும் நடித்துள்ளார். நல்ல தம்பி என்ற கேரக்டரில் சோ நடித்துள்ளார். ஜெய்சங்கருக்கு வேலையாளாக வருகிறார். மனோரமா சோவுடைய ஜோடி.

திமிர் பிடித்த நாயகியிடம் சவால் போட்டு, அவர் வீட்டிலேயே டிரைவராக வேலை பார்த்து அவரைக் கரம் பிடித்து, அதன் பிறகு அக்குடும்பத்தில் நடக்கும் சில பிரச்சினைகளைத் தீர்க்கும் நாயகனின் கதை.

சோவின் நகைச்சுவை படத்தைப் போலவே சுமார்ரகம். 

ஆசீர்வாதம்


இப்படம் 1972யில் வெளியானது. ஆர். தேவராஜன் இயக்கத்தில், சுமாரான கதை; சுமாரான படம். ஆனால் முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ள எஸ்.வி.சுப்பையா மிகவும் அருமையாக நடித்துள்ளார். சோவின் நகைச்சுவை ரசிக்கும்படியாக இருந்தாலும், அவர் சில காட்சிகளிலேயே தோன்றுகிறார். வேணு என்ற பெயரில் நாயகனுக்கு நண்பனாக வருகிறார்.

அநாதைப் பையனைச் செலவு செய்து படிக்க வைக்கிறார் ஆசிரியர் சுப்பையா. அச்சிறுவன் வளர்ந்த பின் ஜெய்சங்கர். நன்றாகப் படித்து பட்டம் வாங்குகிறார். படிக்காத ஆசிரியர் மகன் வாசு அவர் மீது பொறாமை கொள்கிறார். சந்தர்ப்ப வசத்தால் முதலாளி வி.எஸ். ராகவன் மகளான லட்சுமியைத் திருமணம் செய்து கொள்கிறார் ஜெய். தாம் ஏழை என்ற உண்மையை சில காரணங்களால் சொல்லாமல் மறைக்கிறார். அதைப் பயன்படுத்தி பணம் பறிக்கிறார் வாசு. அவர் எப்படி மனம் திருந்தினார், ஏழைகளை வெறுக்கும் லட்சுமி எப்படி திருந்தினார் என்பது மீதி கதை.

தேங்காய் சீனிவாசன், சி.ஐ.டி.சகுந்தலா, எம்.பானுமதி, சுருளிராஜன் போன்றோரும் படத்தில் உண்டு.

மிஸ்டர் சம்பத்

சோ இயக்கிய படம். ஆர்.கே.நாராயணின் நாவலைத் தழுவி எழுதப்பட்ட கதை. திரைக்கதை வசனமும் சோவுடையவை. இப்படம் 13 ஏப்ரல் 1972யில் வெளியானது.


மற்றவர்களை ஏமாற்றியே வாழும் சோவும், மிகவும் நல்லவரான மேஜர் சுந்தர்ராஜனும் தத்தம் வழியே சிறந்தது எனச் சவாலிட்டுக் கொள்கிறார்கள். ஒரு வருடம் கழித்து தங்கள் தங்கள் வழியிலேயே பயணித்து வாழ்க்கையில் யார் முன்னேறுகிறார்கள் என்பதைப் பார்ப்பதே அந்தச் சவால்.

ஜிப்பா கண்ணாடி அணிந்து கொண்டு, ஒரு வெத்தலைப் பாக்குப் பெட்டியைக் கையில் வைத்துக் கொண்டு, நக்கலாக அனைவரின் பலவீனத்தையும் அறிந்து கொண்டு ஏமாற்றுபவராகக் கலக்கியுள்ளார் சோ. மனோரமா அவருக்கு ஜோடி.

முத்துராமன், ஜெயா, நீலு, பூர்ணம் விஸ்வநாதன், மாலி, வெண்ணிறாடை மூர்த்தி, சுகுமாரி, செந்தாமரை ஆகியோரும் நடித்துள்ளனர். எம்.எஸ்.விஸ்வநாதன் ஒரு காட்சியில் தோன்றுகிறார்.

வசனங்களும் சோவுடைய அட்டகாசமான நடிப்பும் நாடகப் பாணியில் அமைந்த இப்படத்தின் மிகப் பெரிய பலம். நடிகர்கள் அனைவரும் நிறைவாக நடித்துள்ளனர். 

புது முக நடிகையான ஜெயாவைத் தமக்குத் தெரியும் என எல்லாரையும் நம்ப வைத்து, இலவசமாக இருக்க இடமும், சாப்பிட உணவும், நல்ல மரியாதையையும் சாமர்த்தியமாக ஏற்படுத்திக் கொள்கிறார் சோ. பிறகு ஜெயாவையும் நம்ப வைத்து, அவருடைய அக்காவான மனோரமாவை மயக்கி, அவர்களை முத்துராமன் இயக்கும் படத்திலிருந்து விலக வைக்கிறார். தம்மை நம்பி ஏமாறும் பூர்ணம் விஸ்வநாதனையும் மாலியையும் வைத்துப் பணத்தைத் தயாரித்து நஷ்டப்பட வைக்கிறார். கடைசியில் செய்யாத குற்றத்துக்குக் கைதாகிச் சிறை செல்கிறார்.




Friday, October 20, 2017

தெய்வ சங்கல்பம்

21 ஜூலை 1972யில் வெளியான இப்படத்தை பி.ஆர்.சோமு இயக்கியுள்ளார். .வி.எம்.ராஜன், விஜயகுமாரி, முத்துராமன், பாலையா, பண்டரிபாய், வி.எஸ்.ராகவன், எஸ்.வரலட்சுமி, ஜி.சகுந்தலா, மேஜர் சுந்தர்ராஜன், சச்சு ஆகியோருடன் சோவும் நடித்துள்ளார். சோவுக்கு அநாதை ஆசிரம நிர்வாகி வேடம்; மணி என்று பெயர். படம் நன்றாக இல்லாததால் சோவின் நகைச்சுவையும் அவ்வளவாகச் சோபிக்கவில்லை. சச்சு அவருக்கு இணை.

கதை சுமார்; திரைக்கதை சுத்த மோசம். மேஜர் சுந்தர்ராஜனுடைய தங்கையான சகுந்தலாவை ஏமாற்றி விடுகிறார் வி.எஸ்.ராகவன். அதற்குப் பழிவாங்க ஒரு விபத்தில் சுய நினைவின்றி இருக்கும் ஏ.வி.எம்.ராஜனை ராகவன் மகளான விஜயகுமாரிக்குத் தாலி கட்ட வைக்கிறார் மேஜர். கண்கள் கட்டப்பட்டிருந்ததால் தந்தைக்கும் மகளுக்கும் மணாளன் யாரெனத் தெரியவில்லை. ஒரு கட்டத்தில் குணமாகும் ராஜன் தாம்தான் விஜயகுமாரிக்குத் தாலி கட்டியவர் எனப் பொய் சொல்ல, ஏன் எதற்கு எனக் கேட்காமல் அதை அப்படியே நம்பி விஜயகுமாரி அவர் வீட்டுக்குப் போய் விடுகிறார். பின் அது பொய் எனத் தெரிந்து வெளியேறுகிறார். சில குழப்பங்களுக்குப் பிறகு உண்மை தெரிந்து, பிரிந்தவர்கள் சேர்ந்து, இறந்தவர்களாகத் தெரிந்தவர்கள் உயிருடன் வந்து, எல்லா உண்மைகளும் எல்லாருக்கும் தெரிந்து, கதை சுபமாக முடிகிறது.


சோவின் நகைச்சுவை போல பாலையாவின் நடிப்பும் எடுபடவில்லை. அவர் தம்முடைய அக்காளான வரலட்சுமிக்குப் பயந்தவராக வருகிறார். அவருக்கு இணை பண்டரிபாய்; மகன் ராஜன். அக்காள் மகளாக சச்சு. எல்லா நடிகர்களும் இயக்குனரால் வீணடிக்கப்பட்டுள்ளனர். 

Thursday, October 19, 2017

புகுந்த வீடு

சோவுக்கு இரட்டை வேடம்; அம்பலம் என்ற வேடத்திலும், அவருடைய தந்தையாகவும். தந்தையாக வரும் சோ என்ன காரணத்தினாலோ முழுக்க முழுக்க பாலையாவைப் போல பேசி நடித்துள்ளார். சில காட்சிகளிலேயே இந்தப் பாத்திரம் தோன்றுகிறது. மகன் கேரக்டர் நாட்டுப்புறமாக உள்ள மனைவியை விரும்பாமல், மனைவியே மாடர்ன் உடையணிந்து யாரைப் போலவோ வர, அது தெரியாமல் அவர் மீது சபலப்படும் கேரக்டர்.

பட்டு இயக்கிய படம். படத்தில் திரைக்கதையும் வசனமும் வீக். அதனால் சோ-மனோரமா காம்பினேஷன் ரசிக்கும்படியாக இருந்தாலும் எப்போதும் நினைவு கூரும் வகையில் அமையவில்லை.

நாயகன் ரவிசந்திரன்; அவரைப் பணக்கார ஏ.வி.எம்.ராஜனுடைய தங்கையான லட்சுமி காதலித்து மணம் செய்து கொள்கிறார். ஓர் ஏற்பாட்டின்படி ஏ.வி.எம். ரவிசந்திரன் தங்கையை (சந்திரகலா) மணமுடிக்கிறார். லட்சுமிக்கு சதா இருமும் மாமியாரான சாவித்ரியைக் கண்டால் பிடிக்கவில்லை. அதனால் தம்பதியரிடையே மனக்கசப்பு ஏற்பட்டு பிரிகின்றனர். அது ராஜன் தம்பதியருடைய வாழ்க்கையையும் பாதிக்கிறது. கடைசியில் லட்சுமி மனம் திருந்தி எல்லாரும் ஒன்று சேர்கின்றனர். வி.எஸ்.ராகவன், சி.ஐ.டி.சகுந்தலா போன்றோரும் நடித்துள்ளனர்.

நடிகர்கள் நிறைவாக நடித்துள்ளனர். ஆனால், சுமாரான பட்டுவின் இயக்கம் படத்தை ரசிக்கும்படி செய்யவில்லை.

இப்படம் வெளியான ஆண்டு 1972.

Saturday, October 14, 2017

தாய்க்கு ஒரு பிள்ளை

ஒரு காட்சியில் மகிழ்ச்சியால் சிரிக்கும் ஏழை ஒருவரைப் பார்த்து, கன்னத்தில் போட்டுக் கொண்டு கும்பிடுவார் சோ. அருகிலிருப்பவர் காரணத்தைக் கேட்க, சோ சொல்வார் - "ஏழையின் சிரிப்பில் நான் இறைவனைக் காண்கிறேன்."

இப்படி படத்தில் பல தருணங்களில் சோவின் வசனங்கள் தி.மு.க.வையும் இந்திரா காந்தியையும் தாக்குகின்றன. எம்.ஜி.ஆர். கணக்கு கேட்ட விவகாரம், கருணாநிதி பாணியில் மேடைப் பேச்சு, இந்திரா காந்தி காரணமின்றி மாநில ஆட்சியைக் கலைப்பது என பல அரசியல் சமாச்சாரங்கள் கிண்டலடிக்கப் படுகின்றன. இயக்குனர் பட்டு சோவுக்கு இப்படத்தில் நிறைய சுதந்திரம் கொடுத்துள்ளார் எனத் தெரிகிறது.

சோவுடைய சொந்த வசனங்களைத் தவிர இப்படத்தில் எதுவுமே ரசிக்கும் படியாக இல்லை. சோ மனோரமா தோன்றும் காட்சிகளும் சுமார் ரகமே. சுமாரான கதை; தொய்வெடுக்கும் திரைக்கதை; சத்தில்லாத வசனங்கள்; மிகையான நடிப்பு; மொத்தத்தில் மோசமான படம்.

ஜெய் ஷங்கர் நாயகன்; அவருடைய வளர்ப்புத் தந்தை ஏ.வி.எம்.ராஜன். பாலாஜியால் வஞ்சிக்கப்பட்ட சாவித்ரிக்குத் தஞ்சம் தருகிறார் ராஜன். அவர்தாம் தம்முடைய தாய் என்ற உண்மை தெரியாமலேயே வளர்கிறார் ஜெய். சாகும் தறுவாயில் ராஜன் உண்மையைச் சொல்ல, தாயை வஞ்சித்த பாலாஜியையும், அதற்கு உதவிய தேங்காய் சீனிவாசனையும் பழி வாங்கப் புறப்படுகிறார் ஜெய். அவருக்கு உதவுகின்றனர் அவருடைய நண்பர்களான சோ, மனோரமா, அவருடைய காதலியும் சீனிவாசனுடைய மகளுமான வெண்ணிறாடை நிர்மலா. பாலாஜியுடைய மகன் சசிகுமாரும் ஒரு வில்லன். முடிவு சுபம். வெற்றி நாயகனுக்கு.

சோவுடைய கதாபாத்திர பெயர் முனியப்பா. மனோரமா அவருக்கு ஜோடி. சோ ஒரு காட்சியில் பெண்பிள்ளை வேடத்திலும் வருகிறார்.  நீலு சோவுடைய தந்தையாக வருகிறார் இப்படத்தில். அவர் வில்லன்களின் கணக்குப் பிள்ளையாக நடித்துள்ளார்.

இப்படம் வெளியான ஆண்டு 1972. பட்டு இயக்கிய படம். 

Sunday, October 8, 2017

உறவுகள் இல்லையடி பாப்பா

சோ எழுதி இயக்கிய இந்நாடகம் 1975யில் முதலில் மேடையேறியது. 1980களின் இறுதியில் தொலைக்காட்சித் தொடராகவும் வெளிவந்தது.

இது அரசியல் நாடகம் இல்லை. பெயருக்குக் கூட அரசியல் பற்றி மறைமுக வசனம் கூட கிடையாது. ஆனால் எப்படி சோவுடைய அரசியல் நாடகங்கள் 50 வருடங்கள் கழித்தும் இன்றைக்கும் ஏற்புடையதாக உள்ளனவோ, அதைப் போல இச் சமூக நாடகமும் இன்றைய காலக்கட்டத்துக்கும் பொருந்தக் கூடியதாக உள்ளது.

புண்ணியகோடி என்ற வயோதிகர் வேடத்தில் சோ. அவருடைய மகனாக நீலு; பேரனாக அம்பி. ஒற்றுமையாக இருக்கும் குடும்பத்தில் ஒரு பானை நிறைய தங்கக் காசுகள் கிடைத்தவுடன் அந்த ஒற்றுமை சீர் குலைகிறது. ஒருவர் மற்றவர் மீது சந்தேகம் கொள்கின்றனர்; பரஸ்பரம் துரோகம் செய்ய முயல்கின்றனர். குடும்பத்தில் நடக்கும் சில சாவுகளும் அலட்சியப்படுத்தப் படுகின்றன. கடைசியில் எல்லாருமே இறக்க, சோ பைத்தியம் பிடித்து அலைவதாக நாடகம் முடிகிறது.


பணத்தாசையின் தீமையையும், அதன் அசுர பலத்தையும் சோ நகைச்சுவையாக அதே சமயத்தில் அழுத்தமாகவும் கூறியுள்ளார்.

Wednesday, October 4, 2017

தவப் புதல்வன்

முக்தா சீனிவாசன் இயக்கிய இப்படம் 26 ஆகஸ்ட் 1972யில் வெளியானது. கதாநாயகன் சிவாஜியுடைய நண்பனாக ஜேம்ஸ் என்ற கதாபாத்திரத்தில் சோ நடித்துள்ளார். அசட்டுப் பாத்திரம்; மனோரமா ஜோடி. நாயகனுக்கு உதவ சோ போடும் திட்டங்கள் எல்லாம் நாயகனுக்குத் தொல்லைகள் தரும். ரசிக்கும்படியான நகைச்சுவை; ஆனால் சோவின் ஆகச் சிறந்த படம் எனச் சொல்ல முடியாது.


சிவாஜி பணக்காரர். பண்டரிபாயுடைய மகன்; இசைக்கலைஞர். அவருடைய முறைப் பெண் கே.ஆர்.விஜயா. வி.கோபாலகிருஷ்ணன்-காந்திமதி தம்பதியினருடைய மகள்; டாக்டர். இருவரும் திருமணம் செய்து கொள்ளும் தறுவாயில் சிவாஜிக்கு மாலைக்கண் நோய் வந்து விடுகிறது. அதை நோயாளியான தாயிடம் இருந்து மறைக்க, அதைப் பயன்படுத்தி ஹோட்டலில் நாட்டியமாடும் சகுந்தலாவும் அவருடைய குடிகார அண்ணன் வாசுவும் சதி செய்கின்றனர். பல சோதனைகளுக்குப் பிறகு சதியிலிருந்தும் நோயிலிலுருந்தும் சிவாஜி விடுபடுவதே மீதி கதை.

Thursday, September 28, 2017

சங்கே முழங்கு

ப.நீலகண்டன் இயக்கம். 4 பிப்ரவரி 1972 யில் வெளியான படம். சோ எம்.ஜி.ஆருடன் இணைந்து நடித்த கடைசிப்  படம். 1968யில் எம்.ஜி.ஆருடன் முதல் படம். மொத்தம் நான்கு வருடங்களே இருவரும் இணைந்து நடித்துள்ளனர். 13 படங்களில் இணைந்துள்ளனர்.

இப்படத்தில் சிந்தாமணி என்ற எம்.ஜி.ஆருடைய நண்பனாக வருகிறார் சோ. மிகச் சில காட்சிகளிலேயே வருகிறார். இதுவும் சோ தவிர்த்திருக்க வேண்டிய படம்.

எம்.ஜி.ஆரும் அவருடைய தங்கையும் அனாதைகள். அவர்களை பணக்காரரான வி.எஸ்.ராகவன் வளர்க்கிறார். அவருடைய மேனேஜர் அசோகன் வக்கீல் வி.கே.ராமசாமியுடன் சேர்ந்து அவரைக் கொன்று விடுகிறார். பழி எம்.ஜி.ஆர். மீது விழுகிறது. அதை அவர் தம்முடைய காதலியான லட்சுமி மற்றும் அவருடைய தந்தை பகவதி உதவியுடன் பொய் என்பதை நிரூபிப்பதே மீதி கதை. வழக்கம் போல காதில் பூவைச் சுற்றும் கதைக்களம்.

Monday, September 25, 2017

இன்பக் கனா ஒன்று கண்டேன்

1971யில் மேடையேறிய இந்நாடகம் சென்னையில் 100 முறைக்கு மேல் மேடையேறியது.

மந்தைவெளி மன்னாரு என்ற கதாபாத்திரம் காணும் பகல் கனவே இந்நாடகத்தின் கதை. ஓர் உலகில் நூறு பேர்; தங்களுக்குள் வேலைகளையும் வசதிகளையும் சரி சமமாகப் பிரித்துக் கொண்டு சமூக வாழ்க்கை வாழ்கின்றனர். அந்த நூறு பேரில் இருவருக்கு மட்டும் கொடுக்க வேலையில்லை. அதனால் அவர்கள் மற்றவர்கள் செய்யும் வேலையைக் கண்காணிக்கும் புது வேலையை உருவாக்குகிறார்கள். யார் அந்தப் பதவியைப் பிடிப்பது என்பதில் இருவருக்கும் போட்டி ஏற்படுகிறது. அது தேர்தலில் போய் முடிகிறது. தேர்தலால் ஊழல் உருவாகிறது. தேர்தல் முடிந்து வென்றவனுக்கு உதவியவர்கள் சில சலுகைககளை எதிர்பார்க்கின்றனர். அத்தகைய ஊழலைக் கண்டு பிடிப்பவர்களுக்கும் சலுகைகள் கிடைக்கின்றன. இப்படியே படிப்படியாக குடியாட்சியின் அனைத்துக் கேடுகளும் அறிமுகமாகி, பணமும் புழக்கத்துக்கு வந்து, அடிதடி கொலை என முடிகிறது.


தேர்தல் முறை ஒரு சமூகத்தை எப்படிச் சீரழிக்கிறது என்பதைச் சோ தமது பாணியில் அழகாகக் காண்பிக்கிறார்.

Sunday, September 24, 2017

சூதாட்டம்

1971யில் வெளியாகிய இப்படத்தை இயக்கியவர் மதுரை திருமாறன். ஜெய்சங்கர், கே.ஆர்.விஜயா, முத்துராமன், சுருளிராஜன்  ஆகியோருடன் சோவும் நடித்திருந்தார்.

சோவுடைய ஜோடி மனோரமா; மாமனாராக தேங்காய் சீனிவாசன். மனைவிக்குப் பயந்த கணவனாக சோ. ரசிக்கும்படியான நகைச்சுவை; ஆனால் அரசியல் வசனங்கள் கிடையாது.

சூதாட்டத்தை மையமாக வைத்து பின்னப்பட்ட கதை.



Friday, September 22, 2017

ஒரு தாய் மக்கள்

ப.நீலகண்டன் இயக்கிய இப்படம் 9 டிசம்பர் 1971யில் வெளியானது. எம்.ஜி.ஆர். நாயகன்; ஜெயலலிதா நாயகி. முத்துராமனும் நம்பியாரும் வில்லன்கள். பண்டரிபாய், அசோகன், வி.கே.ராமசாமி ஆகியோருடன் சோவும் நடித்துள்ளார். பணக்கார அசோகனிடம் வேலை செய்பவராக வருகிறார் சோ. அவருடைய கேரக்டர் பெயர் சிகாமணி. அவரும் வி.கே.ஆரும் சேர்ந்து ஓரளவு நகைச்சுவையாக நடித்துள்ளனர். ஆனால் இருவருக்குமே அவ்வளவாக வாய்ப்பு இல்லை.

குழந்தைகளாக இருக்கும் போது பிரிந்த சகோதரர்களான எம்.ஜி.ஆரும் முத்துராமனும் பெரியவர்கள் ஆனவுடன் ஒன்று சேர்வதே கதை. இருவரும் ஜெயலலிதாவைக் காதலிப்பதும் அதனால் அவர்களுக்குள் பகை ஏற்படுவதும், பின் வழக்கம் போல் எம்.ஜி.ஆர். வெல்வதும் முத்துராமன் மனம் திருந்துவதுமாக கதை முடிகிறது.

Thursday, September 14, 2017

நீரும் நெருப்பும்

18 அக்டோபர் 1971யில் வெளியான இப்படமும் சோவுக்குத் தேவையில்லாத படம். இதில் கௌரவ வேடம் போல ஒரே காட்சியில் தோன்றுகிறார். எம்.ஜி.ஆர். ஒரு காட்சியில் மேஜிக் செய்வார். அவருடைய உதவியாளராக சோ வருகிறார். இவர் கேரக்டருக்குப் பெயர் கூட கிடையாது.

படம் வழக்கமான . நீலகண்டனின் மசாலாப் படம். பழைய அபூர்வ சகோதரர்கள் படத்தின் ரீமேக். எம்.ஜி.ஆர் ரசிகர்களைத் தவிர மற்றவர்களுக்குப் பிடிக்க இப்படத்தில் எதுவுமில்லை. எம்.ஜி.ஆருக்கு ரசிகர்கள் அதிகம் என்ற காரணத்தால் படம் மிகப் பெரிய வெற்றி அடைந்தது.


எம்.ஜி.ஆர். இரு வேடங்கள். ஜெயலலிதா நாயகி. அசோகன் வில்லன். ஆனந்தன் அவருடைய கையாள். மனோகர் எம்.ஜி.ஆரின். காட் ஃபாதர். இதைத் தவிர தேங்காய் சீனிவாசன், மனோரமா, டி.கே.பகவதி என நிறைய நட்சத்திரங்கள். தந்தையைக் கொன்ற வில்லனை இரு சகோதரர்களும் பழி வாங்கும் கதை.

யானை வளர்த்த வானம்பாடி மகன்

22 ஜூலை 1971யில் வெளிவந்த இப்படத்தை பி.சுப்ரமணியம் இயக்கியுள்ளார். தமிழிலும் மலையாளத்திலும் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்ட படம் எனத் தெரிகிறது.


ஜெமினியும் ஆனந்தனும் நாயகர்கள். வி.எஸ்.ராகவன், மனோகர், ராஜஸ்ரீ, விஜயநிர்மலா, பேபி ஸ்ரீதேவி  போன்றோர் நடித்திருந்த இப்படத்தில் சோவும் நடித்துள்ளார். முழுக்க முழுக்க காட்டில் நடப்பது போன்ற கதை. நகைச்சுவையும் மிகச் சுமார் ராகம். கதையும் நன்றாகயில்லை. சோ தவிர்த்திருக்க வேண்டிய படம். அவர் வி.எஸ்.ராகவனிடம் வேலை செய்கிறார்; அவர் பெயர் பாலு. ராகவன் குழு தந்தத்துக்காக காட்டுக்கு வருகின்றனர். அவர்களிடம் தந்தம் விற்க ஒப்பந்தம் போடும் மனோகர் வில்லன். அவருடைய சதியால் சில குழப்பங்கள் நடக்க, அவற்றில் வென்று காட்டுவாசிகளின் தலைவனாகிறார் ஜெமினி. அவர் விஜயநிர்மலாவைத் திருமணம் செய்து கொள்கிறார். அவருடைய முயற்சிகளில் உதவும் யானை வளர்த்த ஆனந்தன் ராகவன் மகளான ராஜ்யஸ்ரீயைத் திருமணம் செய்து கொள்கிறார். அவர் படம் முழுக்க ஏதாவது மிருகங்களுடன் சண்டை போட்டுக் கொண்டு இருக்கிறார். சோவுக்கு  ஜோடி மனோரமா.

Monday, September 11, 2017

ரிக்ஷாக்காரன்

29 மே 1971யில் வெளியான ரிக்ஷாக்காரன் படத்தில் பிச்சுமணி என்ற சபலம் பிடித்த வயதான பிராமணர் வேடம். தேவையில்லாத படம். காட்சிகள் அதிகம் இல்லை. நகைச்சுவையும் சுமார் ரகம் தான். வயதான மேஜர் சுந்தர்ராஜனுக்கே மாமாவாக வருகிறார். முகமது பின் துக்ளக் என்ற வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த படம் வெளிவந்த சில மாதங்களிலேயே இப்படிப்பட்ட முக்கியத்துவம் இல்லாத படத்தில் நடிப்பதைத் தவிர்த்திருக்க வேண்டும் சோ.

எம்.ஜி.ஆர். நாயகன். அவருக்குத் தேசிய விருது வாங்கிக் கொடுத்த படம். எம்.கிருஷ்ணன் நாயர் இயக்கம். எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் அருமையான பாடல்கள். வழக்கமான மசாலாக் கதை. அனாதைப் பெண்ணான மஞ்சுளாவும் ரிக்ஷாக்காரனாக வரும் எம்.ஜி.ஆரும் காதலிக்கிறார்கள். பத்மினியுடைய பெண்தான் மஞ்சுளா என நம்பும்படி கதை நகர்கிறது. கடைசியில் மஞ்சுளா மேஜருடைய மகள் என்ற உண்மை தெரிகிறது. வழக்கம் போல் அசோகன், மனோகர், கண்ணன் என நிறைய வில்லன்கள் எம்.ஜி.ஆரிடம் அடி வாங்கிப் போகிறார்கள். மேஜர் இறக்க அப்பழி மஞ்சுளா மீது விழ, கடைசியில் யார் உண்மையான குற்றவாளி என்பதை எம்.ஜி.ஆர். கண்டுபிடிக்கிறார். முடிவு சுபம். தேங்காய் சீனிவாசன் தான் முக்கியமான நகைச்சுவை நடிகர். இவரைத் தவிர ஐசரி வேலன், உசிலை மணி, குண்டு கருப்பையா எனப் பலரும் உண்டு. பூர்ணம் விஸ்வநாதன் ஒரு காட்சியில் தோன்றுகிறார்.

Thursday, September 7, 2017

முகமது பின் துக்ளக் திரைப்படம்

"முகமது பின் துக்ளக்" திரைப்படத்துக்கு 1971யில் ஆனந்த விகடனில் வந்த விமர்சனம் -

"எதையும் கேலி செய்வதற்கு விஷயத் தெளிவு வேண்டும்; அதையும் நகைச்சுவையோடு கேலி செய்வதற்கு புத்திசாலித்தனம் வேண்டும்; அதுவும், பிறர் மனம் புண்படாமல் கேலி செய்வதற்குப் பக்குவமான அறிவு வேண்டும்; அத்துடன், சிந்தனையையும் தூண்டுவதற்கு தெளிந்த ஞானம் வேண்டும். இவற்றில் நான்காவது வரிசைக்கு வந்து நிற்கிறார் சோ என்பதற்குச் சாட்சி, முகமது பின் துக்ளக். அரசியலைக் கேலி செய்யத் துணிந்தவர்களில் பெரும்பாலோருக்கு ஏதாவது ஒரு குறிப்பிட்ட கட்சியைத்தான் கேலி செய்ய வரும். ஆனால், ஒரு சமுதாயத்தின் பலவீனத்தையே, கட்சிப் பாகுபாடின்றி, முதிர்ந்த ஞானத்துடன் கேலி செய்திருக்கும் சாமர்த்தியத்தால் முகமது பின் துக்ளக் தரத்தில் உயர்ந்து நிற்கிறான்."

1968யில் மேடையேறி பெரும் வெற்றியடைந்த நாடகத்தின் திரைப்பட ஆக்கமே 5 மார்ச் 1971யில் வெளியான இப்படம். இரு பெரும் திராவிடக் கட்சித் தலைவர்கள் இப்படம் வெளி வருவதை முடிந்த வரை தடுத்தனர் எனக் கேள்வி. முதலில் ஒப்புக்கொண்ட சில நடிகர்கள் பின்பு நடிக்க மறுத்தனர். கேமராமேன்கள் தொடர்ந்து மிரட்டப்பட்டு, 26 முறைகள் மாறினார்கள். மனசாட்சிக்குப் பயந்த எம்.எஸ்.விசுவநாதன் யாருக்கும் பணியாமல் இப்படத்துக்கு இசை அமைத்தார்.  

சென்ஸார் சான்றிதழ் வாங்குவதிலும் சிக்கல். பத்தாயிரம் பேர்களைத் தந்தி கொடுக்க செய்து சான்றிதழ் வாங்கினார் சோ. இருந்தாலும் 22 இடங்களில் வெட்டு. தயாரிப்பாளர் வேண்டுகோளால் சோ அதற்கு மட்டும் ஒப்புக் கொண்டார். 

இப்படம் சோ இயக்கிய முதல் படம். இது சோ நாயகனாக நடித்த முதல் படம். படம் முடியும் தறுவாயில் அவருடைய கேரக்டர் வில்லத்தனமாகவும் மாறும். மஹாதேவன் மற்றும் துக்ளக் என இரு வேடங்கள் சோவுக்கு. கதை வசனமும் சோ.

இப்படத்தின் கதை, வசனம், நையாண்டி, நடிகர்களின் நடிப்பு, அரசியல் கருத்து போன்ற அனைத்து விஷயங்களையும் ஏற்கனவே நாடகத்தின் விமர்சனத்தில் எழுதி விட்டேன். அதனால் அவற்றைப் பற்றி மீண்டும் இதில் எழுதப் போவதில்லை.

நாடகத்தை விட படம் சற்று நீளம். இரண்டு தேவையற்ற பாடல்கள் படத்தில் உண்டு. மகாதேவனும் அவருடைய நண்பனும் ஒரு தேசப் பக்தரின் தூண்டுதலாலேயே துக்ளக்காகவும், இபுன் பதூதாவாகவும் வேடம் போடுவதும், அந்த தேசப் பக்தருடைய பேராசை பிடித்த மகளாக மனோரமாவின் காட்சிகளும் நாடகத்தில் கிடையாது. கடைசியில் இபுன் பதூதா மக்களிடம் கல்லடிப்பட்டு இறக்கும் படி துக்ளக் மக்களைத் தூண்டுவதும் படத்தில் வரும் புது காட்சி. சில வசனங்கள் நாடகத்தில் கிடையாது. ஈ.வெ.ராவைப் பற்றியும் வெங்காயத்தைப் பற்றியும் நாடகத்தில் வரும் வசனங்கள் படத்தில் இல்லை.

நாடகத்தில் நடித்த கேரக்டரிலேயே சோ, சுகுமாரி, அம்பி, நீலு ஆகியோர் நடித்துள்ளார்கள். இபுன் பதூதாவாக பீலிசிவம், ஒரு காட்சியில் வெண்ணிறாடை மூர்த்தி, கனமான பாத்திரத்தில் மனோரமா ஆகியோரும் நடித்துள்ளனர். 

தமிழ்த்  திரைப்பட வரலாற்றில் இது ஒரு வித்தியாசமான தைரியமான முயற்சி. தமிழில் பார்க்க வேண்டிய நூறு படங்களை வரிசைப்படுத்தினால் இப்படத்துக்கு கண்டிப்பாக ஓரிடம் உண்டு.

Monday, August 28, 2017

அருணோதயம்

முகத்தை மறைத்தபடி துக்ளக் பத்திரிகை. உடனே ஒரு வசனம் - "இதுலே எல்லாரையும் திட்டி எழுதியிருக்காங்களே. நாம இதைப் படிச்சா நம்மளையும் எல்லாரும் திட்டுவாங்க. " பத்திரிகை தூக்கி எறியப்படுகிறது. இப்படித் தான் சோவின் கேரக்டர் படத்தில் அறிமுகமாகிறது. 5 மார்ச் 1971யில் வெளியான இப்படத்தை முக்தா சீனிவாசன் இயக்கியுள்ளார். டாக்டர் சிரஞ்சீவி என்ற கேரக்டரில் சோ நடித்துள்ளார்.

சிவாஜி படத்தின் நாயகன். அவருடைய அம்மா அஞ்சலி தேவி; தங்கை லட்சுமி. சிவாஜியுடைய மேலதிகாரிகளாக வி.எஸ்.ராகவனும் அவருடைய மகன் முத்துராமனும். முத்துராமனை லட்சுமி காதலிக்க, முத்துராமன் தங்கை சரோஜாதேவியை சிவாஜி காதலிக்கிறார். முத்துராமனுக்குத் தங்கையை மணமுடிக்க சம்மதிக்கிறார் சிவாஜி. அப்போது முத்துராமனைப் பற்றிய ஒரு ரகசியத்தைக் கண்டுபிடிக்கிறார். அது அவர் குடிகாரர் என்பதாகும். நண்பன் சோவின் யோசனையால் தாம் பெரிய குடிகாரராகவும், குடியால் தமக்குப் பெரிய வியாதி இருப்பதாகவும் நடிக்கிறார். அதை உண்மையென நம்பி முத்துராமன் குடியை விடுகிறார். ஆனால் இந்தப் பொய் படிப்படியாக சிவாஜிக்குக் கொலைகாரன் பட்டத்தையும், திருடன் பட்டத்தையும் வாங்கிக் கொடுக்கிறது. எல்லாரும் இவரை வெறுக்கின்றனர். ஒரு கட்டத்தில் இவர் முதலாளியின் வாரிசாகிறார். பல சம்பவங்களுக்குப் பிறகு எப்படி உண்மையை நிலை நாட்டுகிறார் என்பதே மீதி கதை.

சிவாஜி ஓவர் ஆக்டிங். சரோஜா தேவி குண்டாக ஆடாமல் அசையாமல் வருகிறார். அவர் சிவாஜிக்கு ஜோடி; நாயகி இல்லை. சோ மனோரமா மற்றும் நீலுவுடன் தனி டிராக்கில் காமெடி செய்கிறார். ரசிக்கும்படியாக இருந்தாலும் ஓஹோவென இல்லை. நீலு ரௌடியாக நல்ல நடிப்பு. சோவுக்கு முக்கிய வேடம்; ஆனால் அவர் எழுதிய கதை இல்லை; அவருடைய பலம் வசனங்கள். அது இதில் சொல்லிக் கொள்ளும்படி இல்லை.


இதைத் தவிர வி.கோபாலகிருஷ்ணன், குல தெய்வம் ராஜகோபால், வெண்ணிறாடை மூர்த்தி, கண்ணன், தேங்காய் சீனிவாசன் எனப் பெரிய நட்சத்திரப் பட்டாளம் படத்தில்.

Thursday, August 24, 2017

குமரிக் கோட்டம்

26 ஜனவரி 1971யில் வெளியான எம்.ஜி.ஆரின் வெற்றிப் படம். . நீலகண்டன் இயக்கம். சோவுக்கு முக்கியத்துவம் இல்லாத பாத்திரம். தவிர்த்திருக்க வேண்டிய படங்களில் ஒன்று.

கதை வழக்கமான மசாலா கதை. எம்.ஜி.ஆருடைய தந்தையும் வி.கே.ராமசாமியும் நண்பர்கள். பணம் வந்தவுடன் நட்பை மறந்து நண்பனை அவமானப்படுத்துகிறார் வி.கே.ஆர். எம்.ஜி.ஆர் அவரை மீண்டும் ஏழையாக்கி புத்தி புகட்டுவது தான் கதை.

வி.கே.ஆருடைய மகளாகவும், ஆட்டக்காரியாகவும் இரு வேடங்களில் ஜெயலலிதா. வில்லனாக மனோகர். எம்.ஜி.ஆருக்கு உதவும் பணக்காரராக அசோகன். அவருடைய மகளாக லட்சுமி. சோவுக்கு ஜோடியாக சச்சு. எல்லாரும் வந்து போகிறார்கள் இந்த வலுவில்லாத கதையில்.


எம்.ஜி.ஆருடைய நண்பனாக சோ. பாலு என்ற கதாபாத்திரம். சில காட்சிகளில் தோன்றி நம்மைச் சிரிக்க வைக்க முயற்சிக்கிறார். அவ்வளவு தான்.

Friday, August 18, 2017

என்று தணியும் இந்த சுதந்திர தாகம்?

நாடக உலகத்தில் முதன்முதலாக காலைக் காட்சி வைத்தது விவேகா பைன் ஆர்ட்ஸ் தான். 1970யில் முதலில் மேடையேறிய "என்று தணியும் இந்த சுதந்திர தாகம்" ஒரே நாளில் மூன்று வெவ்வேறு ஆடிட்டோரியத்தில் நான்கு காட்சிகள் நடந்து சாதனை படைத்தது. இக்கால கட்டத்தில், சஃபையர்  தியேட்டரில் ஒரு வருடம் முழுவதும் இந்த நாடகமும் சோவின் ஏனைய நாடகங்கள் மட்டுமே காலைக் காட்சிகளில் இடம்பெற்றன.

"முகமது பின் துக்ளக்கை" விடவும் பெரும் வரவேற்பைப் பெற்ற இந்நாடகத்துக்கு பிளாக்கில் டிக்கெட் விற்றன. சிவாஜி கணேசன் இந்நாடகத்தில் வரும் யமன் கேரக்டரில் நடிக்க ஆசைப்பட்டார்.

இந்திரா காந்தியையும், அவருடைய சோஷலிச கொள்கைகளையும் நையாண்டி செய்த இந்நாடகம், அக்கால கட்டத்தில் இந்திராவுடன் கூட்டணியில் இருந்த தி.மு.. தலைவர் கருணாநிதியைக் கோபம் கொள்ள வைத்தது. அவர் சோவைத் தாக்கி "நானே அறிவாளி" என்ற நாடகத்தை எழுதினார் எனக் கேள்வி.

ராஜா அண்ணாமலை மன்றத்தில் ஒரு முறை இந்நாடகம் அரங்கேறியது. அப்போது வேலை நிமித்தமாக சோவால் நேரத்துக்கு வர முடியவில்லை. அதனால் அவர் நடித்த நாரதர் வேடத்தை இன்னொரு நடிகர் ஏற்றார். ஆனால் ரசிகர்கள் ஒப்புக் கொள்ளவில்லை. கடைசியில் இரவு 8:30 மணிக்குச் சோவே வந்து நாடகம் திரும்பவும் ஆரம்பிக்கும் வரை எல்லா ரசிகர்களும் பொறுமையாகக் காத்திருந்தனர். நாடகம் முடியும் போது மணி இரவு 11. அது தான் சோவின் சக்தி. யார் ஒப்புக் கொண்டாலும் கொள்ளாவிட்டாலும், நாடக உலகின் முடி சூடா மன்னன் சோதான்.

இந்நாடகத்து எவ்வளவு இடையூறுகள் செய்ய முடியுமோ அத்தனை இடையூறுகளைச் சில காட்சிகள் செய்தன. மேடையில் முட்டை வீசப்பட்டது. அரங்கத்துக்குள் கலாட்டா நடந்தது. ஆனால் அவை எல்லாவற்றையும் மீறி இந்நாடகம் பெரும் வெற்றி பெற்றது.

இந்நாடகம் அந்தக் காலகட்டத்து அரசின் கொள்கைகளைக் கண்டித்து எழுதப்பட்டது என்றாலும் எந்தக் காலகட்டத்திலும் அதை ரசிக்கும்படியும் புரிந்து கொள்ளும்படியும் வைத்திருக்கும் நம் நாட்டு அரசியல்வாதிகளுக்கு நன்றி.

ஓர் அரசியல்வாதி தேவ லோகம் சென்று மக்களாட்சிக் கொள்கையைப் பரப்பி அனைத்து மேலுலக மக்கள் அறிவையும் மயக்கி அவர்களுக்குள் கலகத்தை உண்டு செய்து ஆட்சியைக் கைப்பற்றுவது தான் கதை. ஒரே அரசியல்வாதிகளால் சர்வ வல்லமை படைத்த தேவர்களை ஆட்டி வைக்க முடிகிறதென்றால், இத்தனை அரசியல்வாதிகளும் ஒரு சேர சக்தியில்லாத மக்கள் படும் பாடு அளவிட முடியாத கொடுமை என்பதை உணர்த்தும் நாடகம்.

நாரதராக சோ, அரசியல்வாதி நல்லதம்பியாக அம்பி, யமனாக நீலு - வசனங்கள் தூள்; Cho's satire at his best.

இந்திரனை ஜனாதிபதியாக்கி டம்மி ஆக்குவதன் மூலம் ஜனாதிபதியின் செயல்பாடுகளையும் அவர்களுக்கு இருக்கும் ஏட்டளவு உரிமைகைளையும் சோ கிண்டலடிக்கிறார். யமன் தேர்தலில் நிற்க குபேரன் செலவழிக்கிறான். கடைசியில் குபேரன் சொத்தெல்லாம் போய் குசேலனுக்கு இணையாகிறான். இது தான் சோஷலிசம் எனக் கிண்டலடிக்கிறார் ஆசிரியர். திலோத்தமை ஓரணியிலும், ரம்பை இன்னோர் அணியிலும் தேர்தல் பிரசாரம் செய்வது இக்காலத்து நடிகர்களைப் படம் பிடித்துக் காட்டுகிறது. குபேரன் சொத்தை நல்லதம்பி நாட்டுடமை ஆக்குகிறான்; விஷ்ணுவின் சங்கு, சக்கரத்தையும் அரசிடம் ஒப்படைக்க வேண்டுமென்கிறான்; இது இந்திரா காந்தியின் வங்கிகளை நாட்டுடைமையாக்கியதைச் சாடும் காட்சிகள். கடைசியில் காந்தியே வருகிறார். அவராலும் நாட்டைக் காப்பாற்ற முடியாது என ஆகிறது.


ஒரு காட்சியில் நேரு நாரதரிடம் கேட்கிறார், நாட்டின் இந்த கதிக்கு யார் காரணமென. நாரதரின் பதில் - "இந்திரா". நேரு அதிர்ச்சியடைய, தாம் இந்திரனை அழைத்ததாக நாரதர் சமாளிக்கிறார். இக்காட்சியில் ரசிகர்கள் எந்த அளவுக்கு ஆரவாரம் செய்திருப்பார்கள் எனக் கற்பனை செய்ய முடிகிறது.