Wednesday, January 25, 2017

கலைஞர் வசனத்தில் சோ

மறக்க முடியுமா? - கலைஞர் வசனத்தில் சோ நடித்த படம் இது. இது சோ நடித்த மூன்றாவது படமாக இருக்க வேண்டுமென நினைக்கிறேன். முரசொலி மாறன் இயக்கம். டி.கே.ராமமூர்த்தி இசை. 1966 ஆகஸ்டில் வெளியான படம். கலைஞரின் அறிமுக உரையுடன்  படம் ஆரம்பிக்கிறது.

இப்படத்தைப் பற்றி அறியாதவர்கள் கூட இதில் இடம் பெற்ற புகழ்பெற்ற பாடலான "காகித ஓடம் கடலலை மேலே " என்ற பாடலைக் கண்டிப்பாகக் கேட்டு ரசித்திருப்பர்.

முதல் அரை மணி நேரமும் கடைசி அரை மணி நேரமும், சோக மயம்  - ஓவர் டோஸ். நடுவிலே சுமார் இரண்டு மணி நேரப் படம் ஓரளவுக்குப் பரவாயில்லை.

சகஸ்ரநாமம் பரம ஏழை; மனைவியை இழந்தவர். அவருக்கு ஒரு மகள், சிறிய மகன் மற்றும் ஓர் ஆண் கைக்குழந்தை. அவர்கள் ஏழ்மையில் படும் துயரம் மட்டுமே அரை மணி நேரத்துக்குப் போகிறது. ஒரு விபத்தில் கண்களை இழந்து விடுகிறார் சகஸ்ரநாமம். தாம் இல்லையெனில் தம்முடைய குழந்தைகளை யாராவது அனாதை ஆசிரமத்தில் சேர்த்து விடுவார்கள் என நினைத்து அவர் வீட்டை விட்டு வெளியேறி விடுகிறார்.

பல துன்பங்களுக்கு இடையே மூன்று சிறுவர்களும் பிரிந்து விடுகின்றனர். வளர்ந்த பிறகு அந்தப் பாத்திரங்களை தேவிகா, எஸ்.எஸ்.ஆர். மற்றும் சோ ஏற்று நடித்துள்ளனர்.

தேவிகா பணக்கார மேஜர் சுந்தர்ராஜன் வீட்டில் வளர்கிறார். அவருடைய மகனான முத்துராமனைக் காதலிக்கிறார்.

எஸ்.எஸ்.ஆர். கடவுள் வேடங்களில் நடிக்காததால் லட்சிய நடிகர் எனப் பெயர் வாங்கியவர். இப்படத்தில் அவர் நாடக நடிகராக வருகிறார். பகவான் கிருஷ்ணனாக வேடம் புனைகிறார். இதைப் பற்றி இதற்கு முன்பு யாராவது குறிப்பிட்டுள்ளார்களா எனத் தெரியவில்லை.

உணர்ச்சிகரமாக மட்டுமே நடித்து நாம் பார்த்துப் பழகிய எஸ்.எஸ்.ஆர். இப்படத்தில் கலகல பேர்வழி. நன்றாகவே நடித்துள்ளார்  - அலட்டல் இல்லாத நடிப்பு. நாடகக் கம்பெனியின் முதலாளி மகளைக் கல்யாணம் செய்து கொள்ளப் பிடிக்காமல் அங்கிருந்து தப்பி ஓடி வந்து ஒரு பணக்காரர் வீட்டில் சரணடைகிறார். அங்கே அவருடைய மகளான காஞ்சனாவைக் காதலித்து அங்கேயே செட்டிலாகி விடுகிறார்.

சோ தவிர்த்திருக்க வேண்டிய படம் இது. வலுவான வசனங்கள் இல்லை. சிறிய வேடம்தான். தேவையற்ற ஒரு சண்டைக்காட்சி மற்றும் பாடல் காட்சி. இப்படத்தில் அவர் நகைச்சுவை நடிகரில்லை; ஆனால் சோ பேசும் சீரியஸ் வசனங்கள் அவ்வளவாக மனத்தில் பதியவில்லை. மொத்தத்தில் ரத்னம் என்ற அரைகுறை கேரக்டர் சோவுக்கு.

தேவிகாவைத் திருமணம் செய்து கொள்ளும் முத்துராமன் ஒரு விபத்தில் இறந்து விடுகிறார். தம்முடைய பச்சைக் குழந்தைக்கு வைத்தியம் செய்ய பணமின்றி தவிக்கிறார் தேவிகா.

திருட்டுப் பட்டம் சுமத்தப்பட்ட எஸ்.எஸ்.ஆர். சோவுடன் சேர்ந்து குடி, சூது எனத் தீய பழக்கங்களுக்கு அடிமையாகிறார்.

தேவிகா குடியிருக்கும் வீட்டம்மாள் குழந்தையைக் காப்பாற்ற பணத்துக்காக தேவிகாவை ஓரிரவு முறை தவறி நடக்க வற்புறுத்துகிறார். போதையில் எஸ்.எஸ்.ஆர். பணம் கொடுத்து உள்ளே வர, காகித ஓடம் பாடல் மூலம் தேவிகா எஸ்.எஸ்.ஆர். தம்முடைய தம்பி என்பதை அறிந்து உயிரை மாய்த்துக் கொள்கிறார்.

தேவிகா சாவதற்கு முன்பாக அவர்தான் தம்முடைய தமக்கை என்பதை அறியும் சோ, குழந்தையைக் காப்பாற்ற ஒரு குருட்டுப் பிச்சைக்காரனிடம் திருடி போலீசில் மாட்டிக் கொள்கிறார். அந்தப் பிச்சைக்காரன்தான் தம்முடைய தந்தை என்பதை அறிந்து கொண்டு அவரைக் கூட்டிக் கொண்டு வருவதற்கு முன்பாகவே, தேவிகா இறந்து விடுகிறார்.


மாறன் இயக்கிய, கருணாநிதி எழுதிய கதையில் இத்தனை சென்டிமென்டுகளா? முத்துராமன் இறப்பதற்கு முன்பு அவர் இறப்பதை உணர்த்த எத்தனை செண்டிமெண்ட் வசனங்கள்? மூட நம்பிக்கை எனப் பேச்சுக்கு இப்படத்தில் இடமில்லையா?

No comments:

Post a Comment