Monday, August 28, 2017

அருணோதயம்

முகத்தை மறைத்தபடி துக்ளக் பத்திரிகை. உடனே ஒரு வசனம் - "இதுலே எல்லாரையும் திட்டி எழுதியிருக்காங்களே. நாம இதைப் படிச்சா நம்மளையும் எல்லாரும் திட்டுவாங்க. " பத்திரிகை தூக்கி எறியப்படுகிறது. இப்படித் தான் சோவின் கேரக்டர் படத்தில் அறிமுகமாகிறது. 5 மார்ச் 1971யில் வெளியான இப்படத்தை முக்தா சீனிவாசன் இயக்கியுள்ளார். டாக்டர் சிரஞ்சீவி என்ற கேரக்டரில் சோ நடித்துள்ளார்.

சிவாஜி படத்தின் நாயகன். அவருடைய அம்மா அஞ்சலி தேவி; தங்கை லட்சுமி. சிவாஜியுடைய மேலதிகாரிகளாக வி.எஸ்.ராகவனும் அவருடைய மகன் முத்துராமனும். முத்துராமனை லட்சுமி காதலிக்க, முத்துராமன் தங்கை சரோஜாதேவியை சிவாஜி காதலிக்கிறார். முத்துராமனுக்குத் தங்கையை மணமுடிக்க சம்மதிக்கிறார் சிவாஜி. அப்போது முத்துராமனைப் பற்றிய ஒரு ரகசியத்தைக் கண்டுபிடிக்கிறார். அது அவர் குடிகாரர் என்பதாகும். நண்பன் சோவின் யோசனையால் தாம் பெரிய குடிகாரராகவும், குடியால் தமக்குப் பெரிய வியாதி இருப்பதாகவும் நடிக்கிறார். அதை உண்மையென நம்பி முத்துராமன் குடியை விடுகிறார். ஆனால் இந்தப் பொய் படிப்படியாக சிவாஜிக்குக் கொலைகாரன் பட்டத்தையும், திருடன் பட்டத்தையும் வாங்கிக் கொடுக்கிறது. எல்லாரும் இவரை வெறுக்கின்றனர். ஒரு கட்டத்தில் இவர் முதலாளியின் வாரிசாகிறார். பல சம்பவங்களுக்குப் பிறகு எப்படி உண்மையை நிலை நாட்டுகிறார் என்பதே மீதி கதை.

சிவாஜி ஓவர் ஆக்டிங். சரோஜா தேவி குண்டாக ஆடாமல் அசையாமல் வருகிறார். அவர் சிவாஜிக்கு ஜோடி; நாயகி இல்லை. சோ மனோரமா மற்றும் நீலுவுடன் தனி டிராக்கில் காமெடி செய்கிறார். ரசிக்கும்படியாக இருந்தாலும் ஓஹோவென இல்லை. நீலு ரௌடியாக நல்ல நடிப்பு. சோவுக்கு முக்கிய வேடம்; ஆனால் அவர் எழுதிய கதை இல்லை; அவருடைய பலம் வசனங்கள். அது இதில் சொல்லிக் கொள்ளும்படி இல்லை.


இதைத் தவிர வி.கோபாலகிருஷ்ணன், குல தெய்வம் ராஜகோபால், வெண்ணிறாடை மூர்த்தி, கண்ணன், தேங்காய் சீனிவாசன் எனப் பெரிய நட்சத்திரப் பட்டாளம் படத்தில்.

Thursday, August 24, 2017

குமரிக் கோட்டம்

26 ஜனவரி 1971யில் வெளியான எம்.ஜி.ஆரின் வெற்றிப் படம். . நீலகண்டன் இயக்கம். சோவுக்கு முக்கியத்துவம் இல்லாத பாத்திரம். தவிர்த்திருக்க வேண்டிய படங்களில் ஒன்று.

கதை வழக்கமான மசாலா கதை. எம்.ஜி.ஆருடைய தந்தையும் வி.கே.ராமசாமியும் நண்பர்கள். பணம் வந்தவுடன் நட்பை மறந்து நண்பனை அவமானப்படுத்துகிறார் வி.கே.ஆர். எம்.ஜி.ஆர் அவரை மீண்டும் ஏழையாக்கி புத்தி புகட்டுவது தான் கதை.

வி.கே.ஆருடைய மகளாகவும், ஆட்டக்காரியாகவும் இரு வேடங்களில் ஜெயலலிதா. வில்லனாக மனோகர். எம்.ஜி.ஆருக்கு உதவும் பணக்காரராக அசோகன். அவருடைய மகளாக லட்சுமி. சோவுக்கு ஜோடியாக சச்சு. எல்லாரும் வந்து போகிறார்கள் இந்த வலுவில்லாத கதையில்.


எம்.ஜி.ஆருடைய நண்பனாக சோ. பாலு என்ற கதாபாத்திரம். சில காட்சிகளில் தோன்றி நம்மைச் சிரிக்க வைக்க முயற்சிக்கிறார். அவ்வளவு தான்.

Friday, August 18, 2017

என்று தணியும் இந்த சுதந்திர தாகம்?

நாடக உலகத்தில் முதன்முதலாக காலைக் காட்சி வைத்தது விவேகா பைன் ஆர்ட்ஸ் தான். 1970யில் முதலில் மேடையேறிய "என்று தணியும் இந்த சுதந்திர தாகம்" ஒரே நாளில் மூன்று வெவ்வேறு ஆடிட்டோரியத்தில் நான்கு காட்சிகள் நடந்து சாதனை படைத்தது. இக்கால கட்டத்தில், சஃபையர்  தியேட்டரில் ஒரு வருடம் முழுவதும் இந்த நாடகமும் சோவின் ஏனைய நாடகங்கள் மட்டுமே காலைக் காட்சிகளில் இடம்பெற்றன.

"முகமது பின் துக்ளக்கை" விடவும் பெரும் வரவேற்பைப் பெற்ற இந்நாடகத்துக்கு பிளாக்கில் டிக்கெட் விற்றன. சிவாஜி கணேசன் இந்நாடகத்தில் வரும் யமன் கேரக்டரில் நடிக்க ஆசைப்பட்டார்.

இந்திரா காந்தியையும், அவருடைய சோஷலிச கொள்கைகளையும் நையாண்டி செய்த இந்நாடகம், அக்கால கட்டத்தில் இந்திராவுடன் கூட்டணியில் இருந்த தி.மு.. தலைவர் கருணாநிதியைக் கோபம் கொள்ள வைத்தது. அவர் சோவைத் தாக்கி "நானே அறிவாளி" என்ற நாடகத்தை எழுதினார் எனக் கேள்வி.

ராஜா அண்ணாமலை மன்றத்தில் ஒரு முறை இந்நாடகம் அரங்கேறியது. அப்போது வேலை நிமித்தமாக சோவால் நேரத்துக்கு வர முடியவில்லை. அதனால் அவர் நடித்த நாரதர் வேடத்தை இன்னொரு நடிகர் ஏற்றார். ஆனால் ரசிகர்கள் ஒப்புக் கொள்ளவில்லை. கடைசியில் இரவு 8:30 மணிக்குச் சோவே வந்து நாடகம் திரும்பவும் ஆரம்பிக்கும் வரை எல்லா ரசிகர்களும் பொறுமையாகக் காத்திருந்தனர். நாடகம் முடியும் போது மணி இரவு 11. அது தான் சோவின் சக்தி. யார் ஒப்புக் கொண்டாலும் கொள்ளாவிட்டாலும், நாடக உலகின் முடி சூடா மன்னன் சோதான்.

இந்நாடகத்து எவ்வளவு இடையூறுகள் செய்ய முடியுமோ அத்தனை இடையூறுகளைச் சில காட்சிகள் செய்தன. மேடையில் முட்டை வீசப்பட்டது. அரங்கத்துக்குள் கலாட்டா நடந்தது. ஆனால் அவை எல்லாவற்றையும் மீறி இந்நாடகம் பெரும் வெற்றி பெற்றது.

இந்நாடகம் அந்தக் காலகட்டத்து அரசின் கொள்கைகளைக் கண்டித்து எழுதப்பட்டது என்றாலும் எந்தக் காலகட்டத்திலும் அதை ரசிக்கும்படியும் புரிந்து கொள்ளும்படியும் வைத்திருக்கும் நம் நாட்டு அரசியல்வாதிகளுக்கு நன்றி.

ஓர் அரசியல்வாதி தேவ லோகம் சென்று மக்களாட்சிக் கொள்கையைப் பரப்பி அனைத்து மேலுலக மக்கள் அறிவையும் மயக்கி அவர்களுக்குள் கலகத்தை உண்டு செய்து ஆட்சியைக் கைப்பற்றுவது தான் கதை. ஒரே அரசியல்வாதிகளால் சர்வ வல்லமை படைத்த தேவர்களை ஆட்டி வைக்க முடிகிறதென்றால், இத்தனை அரசியல்வாதிகளும் ஒரு சேர சக்தியில்லாத மக்கள் படும் பாடு அளவிட முடியாத கொடுமை என்பதை உணர்த்தும் நாடகம்.

நாரதராக சோ, அரசியல்வாதி நல்லதம்பியாக அம்பி, யமனாக நீலு - வசனங்கள் தூள்; Cho's satire at his best.

இந்திரனை ஜனாதிபதியாக்கி டம்மி ஆக்குவதன் மூலம் ஜனாதிபதியின் செயல்பாடுகளையும் அவர்களுக்கு இருக்கும் ஏட்டளவு உரிமைகைளையும் சோ கிண்டலடிக்கிறார். யமன் தேர்தலில் நிற்க குபேரன் செலவழிக்கிறான். கடைசியில் குபேரன் சொத்தெல்லாம் போய் குசேலனுக்கு இணையாகிறான். இது தான் சோஷலிசம் எனக் கிண்டலடிக்கிறார் ஆசிரியர். திலோத்தமை ஓரணியிலும், ரம்பை இன்னோர் அணியிலும் தேர்தல் பிரசாரம் செய்வது இக்காலத்து நடிகர்களைப் படம் பிடித்துக் காட்டுகிறது. குபேரன் சொத்தை நல்லதம்பி நாட்டுடமை ஆக்குகிறான்; விஷ்ணுவின் சங்கு, சக்கரத்தையும் அரசிடம் ஒப்படைக்க வேண்டுமென்கிறான்; இது இந்திரா காந்தியின் வங்கிகளை நாட்டுடைமையாக்கியதைச் சாடும் காட்சிகள். கடைசியில் காந்தியே வருகிறார். அவராலும் நாட்டைக் காப்பாற்ற முடியாது என ஆகிறது.


ஒரு காட்சியில் நேரு நாரதரிடம் கேட்கிறார், நாட்டின் இந்த கதிக்கு யார் காரணமென. நாரதரின் பதில் - "இந்திரா". நேரு அதிர்ச்சியடைய, தாம் இந்திரனை அழைத்ததாக நாரதர் சமாளிக்கிறார். இக்காட்சியில் ரசிகர்கள் எந்த அளவுக்கு ஆரவாரம் செய்திருப்பார்கள் எனக் கற்பனை செய்ய முடிகிறது.

Monday, August 14, 2017

சிநேகிதி

1970யில் வெளியான இப்படம் ஜி.ராமகிருஷ்ணன் இயக்கியது. சுமாரான படம். திரைக்கதை குளறுபடி. பல காட்சிகள் உணர்ச்சிகரமாக நடிக்க வேண்டிய காட்சிகளை நடிகர்கள் கோட்டை விட்டு விடுகின்றனர். க்ளைமாக்ஸ் காதில் பெரிய பூ சுற்றல் வேலை. 

சோ சுருளிராஜனுக்கு மகனாகவும் மனோரமாவுடைய காதலனாகவும் வருகிறார். நகைச்சுவைக் காட்சிகள் மட்டும் படத்தில் நன்றாக உள்ளன. சோவுடைய டிரேட் மார்க் அரசியல் வசனங்கள் இல்லை என்றாலும்  அவருடைய நகைச்சுவை ரசிக்கும்படியாகவே உள்ளது. 

பணக்கார பாரதி ஏழை சரோஜாதேவியைத் தன்னுடன் சிறு வயதிலிருந்தே வைத்துக் கொள்கிறார். இருவருமே தாய் தந்தை அற்றவர்கள். எஸ்.வி.சகஸ்ரநாமம் மேனேஜர் மற்றும் கார்டியன். அவர் செய்த குளறுபடியால் அவருடைய மகன் ரவிசந்திரனுடைய நண்பர் ஜெமினி கணேசன் சரோஜாதேவி என நினைத்து பாரதியைத் திருமணம் செய்து கொள்கிறார். இல்லறத்தில் ஈடுபாடு இல்லாமல் குடிக்கிறர். அவரைத் திருத்த சரோஜா அவரை விரும்புவதைப் போல நடிக்கிறார். இதற்கிடையே பாரதியின் மரணம், ரவிசந்திரனின் ஒரு தலைக்காதல், கடைசி காட்சிகளில் அர்த்தமின்றி மர்மப் படம் போல சில காட்சிகள் எனப் படம் நீள்கிறது.


எங்கள் தங்கம்

சில எம்.ஜி.ஆர். படங்கள் எல்லோருக்கும் பிடிக்கும். சில எம்.ஜி.ஆர். படங்கள் அவருடைய ரசிகர்களுக்கு மட்டும் பிடிக்கும்இப்படம் அவருடைய ரசிகர்களுக்கும் பிடித்திருக்காது என நினைத்தேன். ஆனால் இப்படம் ஒரு சூப்பர் ஹிட் படம் என்பதை அறிந்து அதிசயப்பட்டேன். ஒன்று இரண்டு பாடல்களைத் தவிர படத்தில் ரசிப்பதற்கு எதுவுமில்லை. இது முழுக்க முழுக்க தி.மு.. அரசு கொள்கை பிரசார படம். அண்ணாவின் மேடைப் பேச்சு, கலைஞரின் காட்சிகள், போதாததற்கு எம்.ஜி.ஆர். நடிகர் எம்.ஜி.ஆராகவே இன்னொரு வேடத்தில் தோன்றி தி.மு.. கொள்கைகளைப் பரப்புகிறார்.

1970 அக்டோபரில் வெளிவந்த இப்படத்தை முரசொலி மாறன் எழுதியுள்ளார். தயாரிப்பும் அவரே. இயக்கம் கிருஷ்ணன்-பஞ்சு. கலைஞர் ஆட்சிக் கொள்கையை விளக்க மாறன் தயாரித்த இப்படத்தில், பிற்காலத்தில் கொள்கையில் மாறுபாடு கொண்ட எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, சோ ஆகியோர் நடித்துள்ளனர்.

எம்.ஜி.ஆர். லாரி டிரைவர். ஆனால் பெரிய வீட்டில் நல்ல வசதியுடன் வாழ்கிறார். சென்னை சூட்டிலும் கோட்டு சூட்டு போட்டுக் கொண்டு அலைகிறார். என்ன லாஜிக்கோ?

எம்.ஜி.ஆருடைய கண் பார்வையற்ற தங்கையான புஷ்பலதாவை மானபங்க படுத்தும் .வி.எம்.ராஜன் மனம் திருந்தி அவரையே மணந்து கொள்கிறார். கொள்ளைக் கூட்டத்திடம் மாட்டிக்கொண்டு அவர் அவதிப்பட, திருட்டுப் பட்டத்தைத் தாம் சுமந்து கொண்டு உண்மையான குற்றவாளிகளைப் போலீசிடம் பிடித்துக் கொடுக்கிறார் எம்.ஜி.ஆர். இதுதான் கதையின் சுருக்கம்.
இப்படத்தில் எம்.ஜி.ஆர். கதா காலட்சேபம் செய்வதாக வரும் காட்சி இந்தியர்களை எதற்கும் லாயக்கற்றவர்கள் என பறைசாற்றுகிறது. சென்சார் இதை எப்படி அனுமதித்தனர்?

லாறி என்ற கதாபாத்திரத்தில் எம்.ஜி.ஆரின் நண்பராகவும், லாரி க்ளீனராகவும் சோ வருகிறார். தேங்காய் சீனிவாசனுடன் கூட்டு சேர்ந்து கொண்டு, மனோரமாவை ஜோடியாக வைத்துக் கொண்டு நம்மைச் சிரிக்க வைக்க முயற்சிக்கிறார். சோ தவிர்த்திருக்க வேண்டிய படம் இது.


அசோகன், மனோகர், வீ.எஸ். ராகவன் போன்ற நடிகர்களும் இப்படத்தில் உண்டு.  

தேடி வந்த மாப்பிள்ளை

1970 ஆகஸ்டில் பந்துலு இயக்கத்தில் வெளிவந்த இப்படம் முற்பகுதி நன்றாக இருந்தாலும் போகப் போக போர் அடிக்கிறது. வழக்கமான மசாலாக்  கதை.

எம்.ஜி.ஆருடைய தந்தையை யாரோ கொலை செய்து விட, அதைச் செய்தவர் மேஜர் சுந்தரராஜன் என எம்.ஜி.ஆர். அம்மா எம்.வி.ராஜம்மா நம்புகிறார். அவரைத் தேடி பட்டணம் வரும் எம்.ஜி.ஆர். அவருடைய மகளான ஜெயலலிதாவைக் காதலிக்கிறார். அவர் குற்றவாளி இல்லை எனத் தெரிந்து கொள்கிறார். இதற்கிடையே ஜெயலலிதாவுக்குத் தொலைந்து போன ஜோதி லட்சுமி அக்காவும், அவருடைய காதலரான சோவும். நடுவிலே அசோகன் புகுந்து குட்டையைக் கிளப்ப வழக்கம் போல கடைசியில் அவர் சிறை செல்ல, முடிவு சுபம்.


சோவுக்கு வாய்ப்பு படத்தில் குறைவு. அவர் தோன்றும் காட்சிகளில் நன்றாக நடித்திருந்தாலும், ஹை லைட்டாக எதுவுமில்லை. அவருடைய கேரக்டர் பெயர் கர்ப்பதன். பின்னாட்களில் கவர்ச்சி நடிகையாகக் கொடி கட்டிப் பறந்த ஜோதி லட்சுமி அவருக்கு ஜோடி. படத்தின் முடிவில் சோ ஒரு சி..டி. இன்ஸ்பெக்டர் என்பதை வெளிப்படுத்துகிறார்.

என் அண்ணன்

1970 மே-யில் வெளியான திரைப்படம். . நீலகண்டன் இயக்கம். எம்.ஜி.ஆர். ரசிகர்களுக்குப் பிடிக்கும் வகையில் எடுக்கப்பட்ட படம்.

பூச்சி என்ற முழு அசட்டு கேரக்டரில் சோ. நகைச்சுவையோ வசனங்களோ சொல்லிக் கொள்ளும்படி இல்லை. சோ நடிக்காமல் தவிர்த்திருக்க வேண்டிய படம் இது.

வழக்கமான மசாலாக் கதை. ஏழை எம்.ஜி.ஆர். தம்முடைய தங்கை விஜய நிர்மலாவைப் படிக்க வைக்கிறார். அவர் பணக்கார டாக்டர் முத்துராமனைக் காதலித்து மணந்து கொள்கிறார். அவர் மீது ஆசை வைத்திருந்த தேங்காய் சீனிவாசன் மூலம் எம்.ஜி.ஆர் தந்தை தான் தன்னுடைய கணவனைக் கொன்றவர் என்பதை அறிந்தவுடன், முத்துராமனுடைய தாயான எஸ்.என்.லட்சுமி மருமகளை விரட்டி விடுகிறார்.

தேங்காயைத் தாக்கி சிறை செல்லும் எம்.ஜி.ஆர். அங்கே தந்தையான டி.கே.பகவதியைச் சந்திக்கிறார். அவர் கொலை செய்யவில்லை என்பதை அறிகிறார்.

சிறையிலிருந்து வெளியே வரும் எம்.ஜி.ஆர். தம்முடைய காதலியான ஜெயலலிதாவுடன் சேர்ந்து கொலையாளிகள் யார் என்பதைக் கண்டுபிடித்து தந்தையை விடுதலையடைய வைக்கிறார். தங்கையும் அவர் கணவர் வீட்டில் ஏற்றுக் கொள்ளப் படுகிறார்.

நம்பியார் மற்றும் அசோகன் வில்லன்கள். சோ நம்பியாருடைய மகன். அவருக்கு ஜோடி கீதாஞ்சலி. பேபி ஸ்ரீதேவியும் படத்தில் உண்டு.


கே.வி.மகாதேவன் இசையில் பெரும்பாலான பாடல்கள் அருமை. அதிலும் "கடவுள் ஏன் கல்லானான் ", "நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ", "நீல நிறம் " ஆகிய பாடல்கள் குறிப்பிட தக்கவை.