Sunday, February 18, 2018

ஷண்முகப் ப்ரியா

1973யில் வெளியான இப்படத்தைப் பற்றி இன்று யாருக்கும் தெரியவில்லை. ஆனால் இது ஒரு முக்கியமான படமாக நான் கருதுகிறேன். என்.பாஸ்கரன் எழுத்தில், கே.கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில், சோ முக்கியமான வேடத்தில் நடித்த இப்படம் நாத்திகவாதத்தை நேரிடையாகவும் தைரியமாகவும் எதிர்க்கிறது. தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி நடை பெற்றுக்  கொண்டிருந்த சமயத்தில் அந்தக் கட்சியின் கொள்கைகள் விமர்சிக்கப்படுகின்றன.

மேலுகிலும் பூவுலகிலும் நடப்பதைப் போன்ற கதை. சோவுக்கு நாரதர் வேண்டும். கேட்கவா வேண்டும்? பிய்த்து  உதறுகிறார். அரசியல் நையாண்டிக்கு குறைவில்லாத வசனங்கள். சில உதாரணங்கள் -

"கலகம் செய்கிறேனா? கலகங்கள், கழகங்கள் இவற்றோடு எனக்குச் சம்பந்தமே கிடையாது."

பிள்ளையாரின் பிறந்த நாளில் கலந்து கொள்ளும் முருகனிடம் "பிறந்த நாள் - அண்ணனுக்கு? பிழைக்கும் வழி தெரிந்து கொண்டாய்."

"உன் கலகத்தை தெய்வங்களுடன் நிறுத்திக் கொள்; மனிதர்களிடம் காட்டாதே. அவர்கள் தாங்க மாட்டார்கள்." எனச் சொல்லும் முருகனுக்குப் பதில் - "அவர்களுக்கு எதையும் தாங்கும் இதயம் உண்டு."

இன்னும் ஒரு காட்சியில் அவர் விஷ்ணுவை "நாராயணா, ஆபத்பாந்தவா " எனப் பல பெயர்கள் சொல்லி அழைத்து கடைசியில் "கருணாநிதியே" என முடிக்கிறார்.

பூலோகத்தில் நாத்திகவாதம் அதிகரித்து வருவதாக நாரதர் சொல்ல, பக்தி மார்க்கத்துக்கு ஆபத்தில்லை என முருகன் சொல்ல, அதைச் சோதித்துப் பார்க்க இருவருமே பூமிக்கு வருகிறார்கள். முருகனாக சிவகுமார். நாரதாராக வரும் சோ நாத்திகரான முத்துராமனையும் ஆத்திகரான ஜெயந்தியையும் மணமுடிக்கும்படியான சூழலை உருவாக்குகிறார். பல போராட்டங்களுக்குப் பின் ஜெயந்தி தம்முடைய கணவரை எப்படி ஆத்திகராக மாற்றினார் என்பதே கதை.

மேஜர் சுந்தர்ராஜன்-சுகுமாரி முத்துராமனுடைய பெற்றோர்கள். ஜெயந்தியுடைய தந்தையாக வி.எஸ்.ராகவன், மனோரமா-சுருளிராஜன், வில்லனாக தேங்காய் சீனிவாசன் மற்றும் பலர் நடித்த படம் இது.

No comments:

Post a Comment