Friday, February 9, 2018

சூரியகாந்தி

முக்தா சீனிவாசன் இயக்கிய இப்படத்தை முழுக்க முழுக்க ஜெயலலிதாவே தமது தோள்களில் தாங்குகிறார். இது ஒரு ஹீரோயின் சப்ஜெக்ட் படம். சூப்பர் ஹிட் படம். இப்போது பார்த்தாலும் சுவாரசியமாக உள்ளது. நடுத்தர வயது ஜெயலலிதா கொள்ளை அழகு; நடிப்பில் முந்தைய படங்களைக் காட்டிலும் மெருகு கூடியுள்ளது. க்ளைமாக்ஸ் காட்சிகள் மட்டும் சுமார்.

27 ஜூலை 1973 யில் இப்படம் வெளிவந்தது. ஜெயலலிதா, முத்துராமன், மேஜர் சுந்தர்ராஜன், சாவித்ரி, சோ, மனோரமா, சி.ஐ.டி. சகுந்தலா, மௌலி, வாசு, காத்தாடி ராமமூர்த்தி, காந்திமதி, வி.கோபாலகிருஷ்ணன், செந்தாமரை என எண்ணற்ற நடிகர்கள். பொதுவாக இத்தனை நடிகர்கள் இருந்தால் எல்லாருக்கும் அவ்வளவாக ஸ்கோப் இருக்காது. ஆனால் இப்படத்தில் எல்லாருக்கும் நடிக்க நல்ல வாய்ப்பு; இயக்குனர் எல்லாரையும் நன்றாகப் பயன்படுத்தியுள்ளார்.

ஒரு ஒண்டு குடித்தன வீட்டில் நடப்பதைப் போன்ற கதை. சுந்தர்ராஜன்-சாவித்ரி தம்பதியரின் மகனான முத்துராமன் ஜெயலலிதாவைக் காதலித்து மணமுடித்துக் கொள்கிறார். குடும்ப சூழ்நிலை காரணமாக வேலைக்குப் போகும் ஜெயா, கணவனை விட மிக அதிகமாகச் சம்பாதிக்கிறார். இதனால் முத்துராமனுக்குத் தாழ்வு மனப்பான்மை ஏற்படுகிறது. அதனால் அவர்களுக்கிடையே தோன்றும் சச்சரவே மீதி கதை.

ஊர் வம்பு பேசி அலையும் மஹாபலி என்ற பாத்திரத்தில் தோன்றும் சோ தமது நடிப்பாலும் வசனங்களாலும் கலக்கியுள்ளார். சி.ஐ.டி. சகுந்தலா சோவுக்கு ஜோடி. மனோரமாவும் படத்தில் உண்டு. மௌலியுடைய அக்காளாக வருகிறார். மௌலிக்கு இது முதல் படம்.

"நான் என்றால் அது அவளும் நானும்" என்ற பாடலை எஸ்.பி.பியுடன் சேர்ந்து ஜெயலலிதா பாடியுள்ளார். இப்பாட்டில் வரும் ஆங்கில வரிகளைப் பாடியதோடு மட்டுமின்றி அவரே அவற்றை எழுதியுமுள்ளார். இப்பாடல் மிகவும் பிரபலம். அதைப் போல மனோரமா பாடிய "தெரியாதோ நோக்கு" என்ற பாடலும் பிரபலமடைந்தது. டி.எம்.எஸ். பாடி கவிஞர் கண்ணதாசன் தோன்றும் "பரமசிவன் கழுத்திலுள்ள பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா" என்ற தத்துவப் பாடல் இன்றைக்குக் கூட எங்காவது ஒலித்துக் கொண்டிருக்கும். 

No comments:

Post a Comment