Friday, April 27, 2018

சிவகாமியின் செல்வன்

புகழ் பெற்ற "ஆராதனா" என்ற இந்திப் படத்தின் ரீமேக். 26 ஜனவரி 1974யில் வெளிவந்த இப்படத்தை இயக்கியவர் சி.வி.ராஜேந்திரன்.

சோவுக்கு இதில் சிகாமணி என்ற பாத்திரம். கதாநாயகி வீட்டில் வேலையாளாக வருகிறார். கௌரவ வேடம். நகைச்சுவை சுமார் ரகம்.

விமானப் படையில் வேலை செய்யும் சிவாஜி வாணிஸ்ரீயைக் காதலிக்கிறார். திருமணத்துக்கு முன்பே வாணிஸ்ரீ கர்ப்பம் தரிக்கிறார். ஒரு விபத்தில் சிவாஜி இறந்து விட, அவருடைய கனவான மகனையும் விமானப் படையில் சேர்க்கவேண்டும் என்பதை நிறைவேற்ற வாணிஸ்ரீ பாடுபடுகிறார். மகனை வேறொரு வீட்டில் வளர்க்கும் சூழ்நிலை. ஒரு கட்டத்தில் தம்மிடம் தவறாக நடந்து கொள்ளும் மனோகரை அவருடைய மகனான சிறுவன் கொன்று விடுகிறான். அந்தப் பழியைத் தாமே ஏற்றுக் கொண்டு ஜெயில் சென்று பல வருடங்கள் பின் திரும்புகிறார் வாணிஸ்ரீ. அவர் எப்படி தம்முடைய மகனைச் சந்தித்தார், அவருக்கு வாணிஸ்ரீதாம் தம்முடைய தாய் என்ற உண்மை எப்படி விளங்கியது என்பது மீதி கதை.

வாணிஸ்ரீயுடைய மகனாகவும் சிவாஜியே நடித்துள்ளார். இப்படத்தைப் பொறுத்தவரை வாணிஸ்ரீயுடைய நடிப்புதான் எல்லாரையும்விடச் சிறப்பாக உள்ளது. அவருடைய கதாபாத்திரத்துக்கே முக்கியத்துவம். ஏ.வி.எம்.ராஜன், ஸ்ரீகாந்த், எம்.என்.ராஜம், லதா, ரங்காராவ் போன்றோரும் படத்தில் நடித்துள்ளனர்.

நல்ல படம்; அங்கங்கே சில குறைகளும் உண்டு. எம்.எஸ். விஸ்வநாதன் இசையில் பாடல்கள் நன்றாக உள்ளன.

Sunday, April 22, 2018

தாய்ப் பாசம்

1974 நவம்பரில் வெளியான இப்படத்தை பி.வி.ஸ்ரீனிவாசன்  இயக்கியுள்ளார். மிகவும் சுமாரான படம்.

சோ சோமு என்ற  கேரக்டரில்  வருகிறார். இவரும் தேங்காய் சீனிவாசனும் படம் முழுக்கவே வருகிறார்கள், சிவகுமாருடைய நண்பர்களாக. ஆனால் இவர்களுடைய நகைச்சுவை இம்மியளவு கூட நன்றாக இல்லை. சோவுடைய பலம் வசனங்கள்; அவர் இப்படத்தில் தம்முடைய உடல் மொழியில் நம்மைச் சிரிக்க வைக்க முயல்கிறார்; சகிக்கவில்லை.

பிரம்மச்சாரியாக இருக்க விரும்பும் சிவகுமார் அடாவடிப் பெண்ணான பிரமிளாவைத் திருமணம் செய்து கொள்கிறார். அவர்களுடைய குழந்தை விபத்தில் இறந்து விடுகிறது. அதை மனைவியிடமிருந்து மறைத்து அக்குழந்தையைப் போலவே இருக்கும் இன்னொரு குழந்தையைத் தம்முடைய குழந்தை எனப் பொய் சொல்லி வளர்க்கிறார். கடைசியில் இறந்து போனது இவர்கள் குழந்தை இல்லை எனத் தெரிந்து படம் சுபமாக முடிகிறது.

சுமார் கதை; அழுத்தமில்லாத நடிப்பு; மனத்தில் பதியாத பாடல்கள்; காதில் பூ சுற்றும் திரைக்கதை; சோ எதற்காக இப்படி ஒரு படத்தில் நடிக்க வேண்டும்?

வாசு, தங்கவேலு, உசிலை மணி ஆகியோரும் படத்தில் தோன்றுகின்றனர். 

Friday, April 20, 2018

பிள்ளை செல்வம்

நவம்பர் 1973யில் வெளியான இப்படம் வி. ராமசந்திர ராவ் என்ற தெலுங்கு இயக்குனரால் இயக்கப்பட்டது. சுமாரான படம். மாஸ்டர் ராமு என்ற குழந்தை நட்சத்திரம் தான் கதாநாயகன்.

1973யில் யாரெல்லாம் பிரபலமாக இருந்தார்களோ அவர்கள் எல்லோருமே இப்படத்தில் நடித்திருப்பர். அவ்வளவு பெரிய நட்சத்திரக் கூட்டம். சோமு என்ற கேரக்டரில் சோ வருகிறார்; வக்கீல் மற்றும் ஜெய்சங்கருடைய நண்பர். ஜோடி மனோரமா. சந்திரபாபு, நாகேஷ், தங்கவேலு, மனோரமா, பகோடா காதர் எனப் பல நகைச்சுவை நடிகர்கள் இருந்தாலும் சோவுக்கு மட்டுமே நகைச்சுவைக்கு வாய்ப்பு. சந்திரபாபு இரண்டு காட்சிகளிலும், தங்கவேலு 4-5 காட்சிகளிலும் தோன்றுகின்றனர். நாகேசுக்கு  சீரியஸ் பாத்திரம். மனோரமா நகைச்சுவை எடுபடவில்லை. சோவும் சில காட்சிகளில் தான் வருகிறார் என்றாலும், அவர் தோன்றும் காட்சிகளில் கலகலப்புக்குப் பஞ்சமில்லை. "யாகாவாராயினும் நாகாக்க காவாக்கால் சோ காப்பர் சொல்லிழுக்குப் பட்டு " என 2000 வருடங்களுக்கு முன்பே தம்மைப் பற்றி வள்ளுவர் கூறியுள்ளார் என அவர் பேசும் ஒரு வசனம் ஒரு சாம்பிள்.

ரங்காராவ் தேவிகா தம்பதி மிகப் பெரிய பணக்காரர்கள். ஜெய்சங்கர் ரங்காராவுடைய தம்பி; மனோகர், சுகுமாரி எனப் பலரும் சொந்தக்காரர்கள் என்ற பெயரில் இவர்கள் வீட்டில் குடியிருந்து கொண்டு, இவர்களுக்குக் குழி பறிப்பார்கள். பல வருடங்களுக்குப் பிறகு தேவிகா கருவுற, அவர் கருவைக் களைக்க பல முயற்சிகளை இவர்கள் மேற்கொள்வார்கள். ஆனாலும் குழந்தை பிறந்து விடும். அது தான் மாஸ்டர் ராமு. அக்குழந்தைக்கு பெரும் வியாதி வந்து தாக்க, சிகிச்சைக்காக வெளிநாடு கொண்டு செல்வார் தாய் மாமன் நாகேஷ். வழியில் விமானம் விபத்துக்குள்ளாக நாகேஷ் இறந்து விடுவார். பையன் தனியாகக் காட்டில் மாட்டிக் கொள்வான். அவன் எப்படி தப்பி வந்தான், வஞ்சகர்களின் சூழ்ச்சிகள் எப்படி முறியடிக்கப் பட்டன என்பதே மீதி கதை.

சுகுமாரி வில்லத்தனமான வேடம்; மனோரமாவுக்கு தாய்; வித்தியாசமாக உள்ளது. அசோகன், குமாரி பத்மினி, கண்ணன், வி.எஸ். ராகவன், மேஜர் சுந்தர்ராஜன் எனப் பலரும் நடித்துள்ளனர். ஆனால் யாருக்குமே பெரிதாகத் திறமையை வெளிப்படுத்த வாய்ப்பில்லை. 

Friday, April 13, 2018

ஒரே சாட்சி

கதை சுமார்; திரைக்கதை அதை விட சுமார்; அழுத்தமில்லாத வசனம்; மிகையான நடிப்பு - இவை எல்லாவற்றையும் கலந்து செய்த கலவைதான் "ஒரே சாட்சி". 30 மே 1974யில் வெளிவந்த இப்படத்தை கே.விஜயன் இயக்கியுள்ளார்.

சோ 3-4 காட்சிகளில் மட்டுமே வருகிறார். ஒரு சில காட்சிகளில் நகைச்சுவை நன்றாக உள்ளது. சிறிதளவு அரசியலும் மறைமுகமாகப் பேசுகிறார். ரங்கன் என்ற போட்டோகிராஃபர் கதாபாத்திரம். மனோரமா ஜோடி.

கதையின் நாயகன் ஏ.வி.எம்.ராஜன். ஏழையான அவர் குடும்பம் போலீஸ் அதிகாரியான மேஜர் சுந்தர்ராஜன் தயவில் வாழ்கிறது. பி.ஆர்.வரலட்சுமியைக் காதலிக்கிறார் ராஜன். அவரிடம் தகாத முறையில் நடக்க முயலும் மனோகருடன் சண்டையிடுகிறார்; அவரைக் கொன்று விட்டதாக நினைத்து பயந்து வாழ்கிறார். அதைப் பார்த்த அவர் தம்பியான சிறுவனும் பயத்தில் ஊரை விட்டு ஓடி விடுகிறான். ஒரு சந்தர்ப்பத்தில் போலீசிடம் மாட்டி நீதி மன்றத்தில் வழக்கு நடக்கிறது. அவருக்காக வாதாடும் வி.கோபாலகிருஷ்ணன் கடைசியில் முன் விரோதம் காரணமாக தான் தான் மனோகரைக் கொன்றதாக உண்மையை ஒப்புக் கொள்கிறார்.

எம்.என்.ராஜம், குலதெய்வம் ராஜகோபால், காந்திமதி, நீலு, சி.ஐ.டி.சகுந்தலா எனப் பலரும் நடித்துள்ளனர் இப்படத்தில். சங்கர்-கணேஷ் இசை அமைத்து உள்ளனர். பாடல்கள் எதுவும் மனத்தில் பதியும்படி இல்லை. 

Tuesday, April 10, 2018

அன்பைத் தேடி

முதல் காட்சி சோவுடைய வசனத்தில் ஆரம்பித்து, முடியும்போதும் சோ நகைச்சுவையில் முடியும். முக்தா சீனிவாசன் படம் என்பதால் சோவுக்கு முழு சுதந்திரம். அவர் தம்முடைய பாணியில் அரசியல்வாதிகளை நன்றாகக் கிண்டலடிக்கிறார். கிட்டத்தட்ட படம் முழுக்க வரும் சோவுடைய நகைச்சுவை சற்று கூட அலுப்பு தட்டவில்லை. விருந்தாளி மாமா என எல்லாரும் கூப்பிடுவார்கள், அவர் ஒரு விருந்தாளியாக சிவாஜி வீட்டில் வந்து உட்கார்வதால். ஆனால் அவர் கடைசி வரை தங்களுக்கு என்ன உறவு என அந்த வீட்டில் உள்ளவர்களுக்குப் புரியாது.

பிற்பகுதி சற்று சுமார் என்றாலும் மொத்தத்தில் படம் பார்க்கும்படி உள்ளது. சிவாஜியின் உணர்ச்சிகரமான நடிப்பும், ஜெயலலிதாவின் அருமையான நடிப்பும் படத்துக்கு மிகப் பெரிய பலம். பகல் கனவு கண்டு தன்னையே மறந்து எதையாவது போட்டு உடைத்து விடுவார் சிவாஜி. அதனால் அவர் எந்த வேலையிலும் நிலையாக இருக்க மாட்டார். ஒரு கட்டத்தில் இந்த கனவால் தம்முடைய அக்காள் மகளைத் தொலைத்து விடுவார். அப்பெண் இறந்து விட்டாள் என எல்லாரும் நம்பி இவரை ஒதுக்கிவிடுவார்கள். ஜெயலலிதாவைத் திருமணம் செய்து கொண்டு பிறக்கும் குழந்தையை அக்காளுக்குக் கொடுத்து விடும் முடிவுடன் சிவாஜி இருப்பார். அதற்கிடையே வில்லனால் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் குழந்தை கிடைத்து விட, சுபமாகப் படம் முடியும்.

சிவாஜியுடைய அக்காவாக விஜயகுமாரி, அவருடைய கணவராக மேஜர் சுந்தர்ராஜன், வில்லனாக மனோகரும் ஸ்ரீகாந்தும், நகைச்சுவைக்கு சோவும் மனோரமாவும் நடித்துள்ளனர். 

Thursday, April 5, 2018

யாருக்கும் வெட்கமில்லை

"A woman cannot become a prostitute, all by herself. For becoming a prostitute, a woman requires the cooperation of several men. This society creates a prostitue, and then condemns its own creation."

"Confusion can come only to persons who are capable of thinking. Persons who refuse to think, will never get confused. Our society is not confused; it is never confused; never."

மேலே நான் கொடுத்த வசனங்கள் சாம்பிளுக்கு மட்டுமே. இதைப் போல பல கூர்மையான வசனங்கள் - முக்கியமாக சமூகச் சீர்கேடுகளைப் பற்றி - அரசியலைப் பற்றியல்ல. அரசியலுக்கே சோ முக்கியத்துவம் கொடுக்கிறார் எனச் சொல்பவர்கள் இந்நாடகத்தைப் பார்க்க வேண்டும். 1973யில் மேடையேறிய இந்நாடகம் சோ எழுதி இயக்கிய சிறந்த நாடகங்களில் ஒன்று.

ஒரு கயவனால் ஏமாற்றப்பட்டு, சந்தர்ப்ப வசத்தால் விபச்சாரியாகும் ஒரு பெண்ணை முதல் கேசுக்காக அலையும் வக்கீல் ஒருவன் பெயிலில் எடுத்து, தன்னுடைய வீட்டில் தற்காலிகமாக வசிக்க வைக்கிறான். அவளை ஏமாற்றிய கயவன் அந்த வக்கீலுடைய அண்ணன்தான் என்ற உண்மை பிறகே தெரிகிறது. இந்தப் பெண் யார் என்பதை அறிந்தவுடன், அந்த வீட்டார் அவளிடம் நடந்து கொள்ளும் முறை, அவளிடம் தகாத முறையில் நடந்து கொள்ளும் ஆண்கள் என கதை போகிறது. ஒரு விபச்சாரியை உருவாக்கும் ஆண்கள், மனத்தால் தூய்மையில்லாத ஆண்கள் எப்படி அவளை மட்டும் குற்றம் சொல்ல முடியும், ஏன் ஆண்கள் தவறுக்குத் தண்டிக்கப் படவில்லை என நாடகம் அலசுகிறது. குற்றம் செய்யாதவர் யாராவது இருந்தால் விபச்சாரி மீது கல்லெறியவும் எனச் சொன்ன ஏசு நாதரின் கூற்றைப் பிரதிபலிக்கும் நாடகம்.

இந்நாடகத்தில் ராவுத்தர் என்ற வேடத்தில் சோ வருகிறார். நாயகிக்கு வக்காலத்து வாங்கி அவள் சார்பாக பேசி, நியாயத்தை நிலைநாட்ட முயலும் கதாபாத்திரம். ஆனை மணாளன் என்ற அரசியல்வாதியாக நீலு; அவர் தோன்றும் காட்சிகளில் மட்டும் சில அரசியல் வசனங்கள் வருகின்றன.