Thursday, May 17, 2018

ஸ்ரீ தேவி கருமாரி அம்மன்

வியட்நாம் வீடு சுந்தரம் இயக்கத்தில் 1974, 13 நவம்பரில் வெளிவந்த இப்படம் கே.ஆர்.விஜயா நடித்த அம்மன் படம். இக்காலக்கட்டத்தில் வந்த சாமி படங்களைப் போல இதிலும் பல கிளைக் கதைகள்; பல நட்சத்திரங்கள். சுமாரான கதை-திரைக்கதை-காட்சி அமைப்பு.

ஜெமினி கணேசன், பேபி ஸ்ரீதேவி, வி.கோபாலகிருஷ்ணன், மேஜர் சுந்தர்ராஜன், வரலட்சுமி எனப் பலரும் நடித்துள்ளனர்.

தங்கவேலு, சுருளி ராஜன், மனோரமா நடித்துள்ள ஒரு பகுதியில் சிறு வேடத்தில் சோ. சந்தர்ப்பம் கிடைக்கும் போது இங்கும் அரசியல் பேசுகிறார். இவருக்கு இது தேவையில்லாத படம்.

Tuesday, May 15, 2018

சோ நடித்த ஆங்கிலப் படம்

முன்னாள் ஜனாதிபதி கிரியுடைய மைந்தர் சங்கர் கிரி பிரிட்டிஷ் கவுன்சிலுடன் சேர்ந்து ஒரு டாகுமெண்டரி படம் தயாரித்தார். Epistle எனப் படத் தலைப்பு. அவரும் அவருடைய மனைவி யமுனா கிரியுமே வசனகர்த்தாக்கள். இயக்குனர் யாரெனத் தெரியவில்லை. ஜி.எஸ்.கோபாலகிருஷ்ணன் இப்படத்தின் நாயகன்.

இப்படத்தில் நன்றாக ஆங்கிலம் பேசக்கூடிய பெண்ணைச் சங்கர் தேடினார். திரு. ஒய்.ஜி.பியுடைய மனைவியான ராஷ்மி அவர்கள் ஜெயலலிதாவை அவருக்கு அறிமுகப்படுத்தினார். அப்போது ஜெயா சிறுமி. அவருடைய தாயார் சந்தியா ஒய்.ஜி.பி. நாடகங்களில் நடித்து வந்தார்.

டாக்குமென்டரியாக ஆரம்பித்த படம் திரைப்படமாக வளர்ந்தது. இரண்டு நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு என நினைத்த ஜெயா தொடர்ந்து பல நாட்கள் விருப்பமின்றி படப்பிடிப்பில் கலந்து கொண்டார். கடைசியில் பிரிட்டிஷ் கவுன்சிலுக்கு இதில் எந்தச் சம்பந்தமும் இல்லை எனவும் ஆகி விட்டது.

1961யில் படப்பிடிப்பு முடிந்தது. ஆனால் வெளியிடப்படவில்லை. 1966யில் ஜெயா பிரபலமானவுடன் வெளிவந்தது. வந்த சுவடு தெரியாமல் படம் படு தோல்வி அடைந்தது.

ஒய்.ஜி.பியின் குழுவில் இருந்ததாலோ என்னவோ, இப்படத்தில் சோவும் ஒரு சிறிய பாத்திரத்தில் நடித்திருந்தார். நியாயமாக இதுதான் அவருடைய முதல் படம். பார் மகளே பார் 1963யில் தான் வெளிவந்தது. சோ இதை வெறும் டாகுமென்டரியாகவே நினைத்தார் என்று நினைக்கிறேன். இப்படத்தைப் பற்றி அவர் ஒரு முறையும் எதுவும் பேசியதில்லை. அதனால் நானும் அவருடைய திரைப்பட வரிசையில் இதை சேர்க்கவில்லை.

Sunday, May 13, 2018

தங்கப் பதக்கம்

செந்தாமரையின் நாடகத்தை சில மாற்றங்களுடன் சிவாஜி கணேசன் மேடையேற்றினார். பிறகு அவரே அதைத் திரைப்படமாகவும் எடுத்தார். அது தான் தங்கப் பதக்கம். பி. மாதவன் இயக்கத்தில் 1 மார்ச் 1974யில் இப்படம் வெளியானது.

மொத்தத்தில் நல்ல படம். போலீஸின் கம்பீரத்துடன், தந்தையின் பாசத்தையும் அருமையாக நடித்துக் காட்டுகிறார் சிவாஜி. இது கண்டிப்பாக அவருடைய சிறந்த படங்களில் ஒன்று. மற்ற நடிகர்களும் இயல்பான நடிப்பில் படத்துக்குப்  பலம் சேர்க்கிறார்கள்.

நேர்மையான போலீசுக்காரருக்கு நேர்மையற்ற திருட்டு மகன். அவனைக் கடைசி வரை திருத்த முடியாமல் போகிறது. கடைசியில் அவன் நாட்டுக்கே துரோகம் செய்யத் துணியும் போது, தனது கையாலேயே அவனை அந்த போலீஸ்காரர் சுட்டுக் கொள்கிறார்.

சிவாஜி காதல் காட்சிகளில் குழைவது அவருடைய கம்பீரத்தைக் குறைக்கிறது. செளத்ரி என்று தமிழ்நாட்டில் யாருக்குப் பெயர் இருக்கும்? அதையும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி அப்பெயரை உச்சரிக்கின்றனர். வில்லன் படிப்படியாக எப்படி உயர்ந்து நாட்டு ரகசியங்களை வெளிநாட்டுக்கு விற்கும்படி வளர்ந்தார்? எதுவும் நம்பும்படி இல்லை.

காமெடி தனி டிராக். சோவுக்கு இரண்டு வேடங்கள் - அண்ணனாக நேர்மையான போலீஸ் சுந்தரம், தம்பியாக அடாவடி அரசியல்வாதி வையாபுரி என்ற வைகை வளவன். அண்ணன் கேரக்டரைப் பற்றி சொல்ல ஒன்றும் இல்லை. வைகை வளவனாகப் பின்னி எடுக்கிறார் சோ. முக்கியமாக இப்படத்தில் எம்.ஜி.ஆரை நிறைய தாக்குகிறார்.

சோ இதில் அப்பாயிசம் என்ற கொள்கையை அறிமுகப்படுத்துகிறார். அது என்னவென புரியவில்லையே என்று ஒருவர் சொல்ல, அதுதான் அப்பாயிசம் என்கிறார் சோ. நியாயம், நேர்மை, நாணயம் என தி.மு.க.வின் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டையும் கிண்டலடிக்கிறார். தம்பியாக வரும் சோ அடிக்கடி அண்ணா என்று அழைக்கிறார். ஏன்டா அண்ணன் பெயரைக் கெடுக்கிறாய் என அண்ணனாக வரும் சோ கிண்டலடிக்கிறார். இப்படி படத்தில் நிறைய அரசியல் வசனங்கள்.  குறிப்பாக,மேடையில் அவர் பேசும் வசனங்கள் ஏ க்ளாஸ். சந்தேகமின்றி இது சோவுடைய முக்கியமான படம். பட்டையைக் கிளப்புகிறார்.

சோவுக்கு ஜோடியாக மனோரமாவும் புஷ்பமாலாவும் நடித்துள்ளனர்.

சிவாஜியைத் தவிர, கே.ஆர்.விஜயா, ஸ்ரீகாந்த், பிரமிளா, வி.கே.ராமசாமி, மேஜர் சுந்தர்ராஜன், மனோகர், சுருளி ராஜன் போன்றோரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.

எம்.எஸ். இசையில் பாடல்கள் எல்லாம் சூப்பர்.

Wednesday, May 2, 2018

ரோஷக்காரி

மஹாராஜபுரம் சந்தானத்தின் கணீரென்ற குரலில் பாசுரத்துடன் படம் ஆரம்பிக்கிறது. எஸ்.வி.சுப்பையாவின் தேர்ந்த நடிப்பும் நம்மை மறக்கச் செய்கின்றன. ஆனால் போகப் போக படம் தடம் புரண்டு போய் விடுகிறது. கதை, திரைக்கதை, இயக்கம் எல்லாமே மதுரை திருமாறன் தான். ஆனால் படத்தைப் பார்க்கும்போது, நல்ல கதையை, வேறு யாரோ கதை புரியாமல் இயக்கியதைப் போல உள்ளது. அழுத்தம் இல்லாத வசனம், யதார்த்தமற்ற காட்சிகள், நிலையில்லாத பாத்திரப் படைப்பு என்று படம் முழுக்க நிறைய ஓட்டைகள். முக்கியமாக படைத்தலைப்புக்கும் கதைக்கும் எந்த சம்பந்தமுமில்லை. சோவுடைய நகைச்சுவையும், அவர் எல்லாரையும் எடுத்தெறிந்து பேசும் பாணியும், முத்துராமன், சுப்பையா, மனோரமா ஆகியோரின் அருமையான நடிப்பும் படத்தில் உள்ள மிகச் சில நல்ல விஷயங்கள்.

சோவுக்கு ஏகாம்பரம் என்ற வக்கீல் குமாஸ்தா வேடம். ஹீரோ, வில்லன் எனப் பாகுபாடு இன்றி எல்லாரையும் வாரு வாரு வாருகிறார். அரசியல் பேசவில்லை என்றாலும் இப்படத்தில் இவருடைய வசனங்கள் அருமையாக ரசிக்கும்படி அமைந்துள்ளன.

ஏழை சுப்பையாவுடைய மகனும், போர்ட்டர் முத்துராமனுடைய மகனுமாகிய ரவிசந்திரன், கோடீஸ்வரப் பெண்ணான கே.ஆர்.விஜயாவைக் காதலித்து மணமுடிக்கிறார். அவரை ஏழை என்பதால் அவமானப்படுத்துகிறார் விஜயாவுடைய தகப்பனார் வி.எஸ்.ராகவன். அதனால் அவருடைய தொடர்போ பணமோ வேண்டாம் என ஒதுங்கி வாழ்கிறார் விஜயா. அவர் சாகும்போது எல்லா சொத்தையும் மாப்பிள்ளை பெயரில் எழுதி வைத்து விடுகிறார். பணம் ரவியின் மனத்தை மாற்றுகிறது. தீய பழக்கங்களுக்கு ஆளாகிறார்.  தந்தை,அண்ணன் மற்றும் மனைவியை ஒதுக்குகிறார். அவர் எப்படி மனம் திரும்பினார் என்பதே மீதி கதை.

வி.கோபாலகிருஷ்ணன், சி.ஐ.டி.சகுந்தலா, ராமதாஸ், தேங்காய் சீனிவாசன், சுருளிராஜன், சசிகுமார், குமாரி பத்மினி ஆகியோரும் படத்தில் நடித்துள்ளனர்.

இப்படம் 21 ஜூன் 1974யில் வெளிவந்தது.