Saturday, July 14, 2018

உண்மையே உன் விலை என்ன? திரைப்படம்

1974யில் மேடையேற்றப்பட்ட "உண்மையே உன் விலை என்ன" என்ற நாடகத்தின் படமாக்கம். 30 ஏப்ரல் 1976யில் வெளியானது. கதை-வசனம்-இயக்கம் சோ.

ஒரு பாதிரியார்; அவரிடம் பாவ மன்னிப்பு கோர ஒருவன் வருகிறான். ஒரு பெண்ணின் கற்பைக் காப்பாற்ற அவன் செய்த கொலை தவறில்லை எனக் கருதும் பாதிரியார் அவனை மறைத்து வைக்கிறார். ஆனால் எப்போதும் உண்மை மட்டுமே பேசுகிறார்; அதனால் போலீசில் மாட்டிக் கொள்கிறார். அவரை விடுவிக்க ஒரு வக்கீல் வருகிறார். பொய் பேச மறுத்து, அந்த வக்கீலுக்கும் பெரிதாகப் பாதிரியார் ஒத்துழைக்கவில்லை. இந்த நிலையில் அதிர்ஷ்டவசமாக உண்மை என்ன என்பதற்கு சில சாட்சிகளும் ஆவணங்களும் கிடைக்கின்றன. கொல்லப்பட்டவனுடைய தந்தை அரசியல்வாதி. அவர் எல்லாரையும் விலை பேசி உண்மையை வாங்கி விடுகிறார். பாதிரியாருக்கு உதவியாக இருந்த வக்கீல், நண்பர், பாதிக்கப்பட்ட பெண் என எல்லாருமே விலை போகிறார்கள். ஆனால் கடைசியில் வேறு ரூபத்தில் உண்மை வெளிவருகிறது. அதை ஊருக்கு எல்லாம் தெரிய வாய்த்து அரசியல்வாதியின் கையால் இறந்து போகிறார் பாதிரியார்.

மேலே கொடுக்கப்பட்டது தான்  நாடகத்தின் மூலக்கதை. படத்தில் சில மாற்றங்கள். அரசியல்வாதிக்குப் பதிலாக பெரும் பணக்காரர். பத்திரிகையாசிரியர், அவருடைய மகள், பத்திரிகை நிருபர் எனச் சில புதிய பாத்திரங்கள். அந்த இரண்டு பாத்திரங்களும் பாதிரியாருக்கு உதவியாக வருகின்றனர். வக்கீலுடைய மகனை ஏன் பணக்காரரால் விலைக்கு வாங்க முடியவில்லை என்பதிலும் சில மாற்றங்கள். அவருடைய காதலியாக பத்திரிகையாசிரியர் மகள். இருவரும் திருமணம் செய்து கொள்கின்றனர். அதுவும் நாடகத்தில் கிடையாது. இதைத்தவிர க்ளைமாக்ஸும் சில மாற்றங்களுக்கு உட்பட்டுள்ளது. கோர்ட்டில் பாதிரியார் சுடப்படுகிறார், நாடகத்தில் வருவதைப் போல சர்ச்சில் அன்று.

பாதிரியாராக முத்துராமன். அமைதியான முகம்; சாந்தமான நடிப்பு. அப்படியே ஒரு உண்மையான பாதிரியைப் பார்ப்பதைப் போலவே உள்ளது. வில்லனாக அசோகன். வக்கீலாக சோ. சத்தியநாராயணா எனப் பெயர். தெலுங்கும் தமிழும் கலந்து பேசுகிறார்; நம்மை வயிறு நோக அடிக்கிறார். அவருடைய மனைவியாக சுகுமாரியும் மகனாக ஸ்ரீகாந்தும் நடித்துள்ளனர். பாதிக்கப்படும் பெண்ணாக சி.ஐ.டி.சகுந்தலாவும் அவருடைய கணவராக தேங்காய் சீனிவாசனும். கொலை செய்யும் டிரைவராக விஜயகுமார், பத்திரிகை ஆசிரியர் நீலு, அவருடைய மகள் பத்மப்ரியா, முக்கிய பாத்திரத்தில் நிருபராக மனோரமா, விஜயகுமாருக்கு அடைக்கலம் கொடுக்கும் முருகன் பக்தராக வி.கே.ராமசாமி என எல்லா நடிகர்களும் நிறைவாக நடித்துள்ளனர்.

நாடகத்தின் பாணியில் இருந்தாலும் நல்ல படம். 

No comments:

Post a Comment