Showing posts with label Novel. Show all posts
Showing posts with label Novel. Show all posts

Monday, December 9, 2019

சர்க்கார் புகுந்த வீடு

சோவுடைய அரசியல் நகைச்சுவை நாவலிது. எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில் எழுதியுள்ளார்.

ஒரு வீட்டில் ஒண்டுக் குடித்தனத்தில் குடியிருக்கும் ஐந்து குடும்பங்களின் பொறுப்புகளை அரசு ஏற்றுக் கொள்வதால் ஏற்படும் குளறுபடிகளைப் பற்றிய கதை. சோவுடைய "சட்டையர்" அபாரம். அனைத்து அரசியல்வாதிகளையும் ரசிக்கும்படி கிண்டலடிக்கிறார். இந்தக் கதையைப் படிக்கும் நமக்கு இது சோவுடைய கற்பனையா அல்லது உண்மையில் நடந்ததா எனச் சந்தேகம் வருமளவுக்கு அரசியல்வாதிகளின் குணாதிசயங்களின் அடிப்படையில் சோ இதை எழுதியுள்ளார்.

அக்கால அரசியல் புரிந்தவர்கள் வயிறு வலிக்கச் சிரிக்க வேண்டிய அளவு சரக்குள்ள புத்தகம். ஆனால் சற்றே நீண்ட நாவல்.  

Wednesday, October 16, 2019

அடுத்த ஆட்சி நமதே

தமிழக முதல்வராக விரும்பும் ஒன்பது அரசியல்வாதிகளுக்கும் வாயுதாசன் என்ற பெயரில் தாயத்து அனுப்பி சில வழிமுறைகளைப் பின்பற்றும்படி எழுதுகிறார்கள் ஜக்கு, கந்தசாமி, மற்றும் ஆர்.என்.ஆர். அரசியல்வாதிகள் அதை உண்மை என நம்பி அடிக்கும் கூத்தே முழுக்கதை.

ஜக்கு மூலம் மெட்ராஸ் பாஷையில் புகுந்து விளையாடுகிறார் சோ. தைரியமாக எல்லா அரசியல்வாதிகளையும் அவர்களுடைய உண்மையான குணாதிசயங்களையும் விமர்சிக்கிறார். இக்கதையைப் படிக்கும் நாம் அந்த அரசியல்வாதிகள் அனைவரும் சோ சொல்லியபடியே உண்மையில் நடக்கக் கூடியவர்கள் என்பதை மிகவும் சுலபமாக உணர முடிகிறது.

சோவைத் தவிர யாருக்கும் இந்த அளவு அரசியல்வாதிகளை நேரிடையாக நையாண்டி செய்யும் தைரியம் கிடையாது. வயிறு குலுங்கச் சிரிக்கும் நாம் நம்முடைய மற்ற வேலைகளை மறந்து இக்கதையை முழுவதுமாகப் படித்து முடிப்பதிலேயே ஈடுபடுவோம்.  

யார் பெறுவார் இந்த அரியாசனம்?

ஜானகி முதல்வராக சில காலம் இருந்ததற்குப் பிறகு, தமிழகத்தில் கவர்னர் ஆட்சி நடந்து கொண்டிருந்தது. தேர்தலில் வென்று அடுத்து யார் முதல்வர் ஆவார்கள் எனக் குழப்பம் நீடித்தது. அந்தக் காலகட்டத்தில் நடப்பதாகக் கற்பனைக்கதை இது. வயிறு வலிக்க நகைச்சுவையும்  அரசியல்வாதிகளை நேரிடையாகவே கேலி செய்யும் சோவின் தைரியமும் இந்தப் புத்தகத்தை சோவின் சிறந்த படைப்பாக்குகின்றன.

இறந்த காலத்தில் நடந்த அரசியல் செய்திகளைப் புட்டு புட்டு வைக்கும் பழைய ஓலைச் சுவடி கிடைக்கிறது. அதில் அடுத்த முதல்வர் யார் என்பதைக் கூறும் ஓலைச் சுவடி ஓரிடத்தில் ஒளித்து வைக்கப்பட்டுள்ளதாக எழுதி உள்ளது. அதைக் கண்டுபிடிக்க முதல்வராக விரும்பும் அரசியல்வாதிகளின் ரகசிய செயல்களும் கோமாளித்தனங்களுமே முழுக்கதை. 

Sunday, March 10, 2019

யாரோ இவர் யாரோ?

1967யில் கல்கி இதழில் சோ எழுதிய நகைச்சுவைத் தொடர் இது.

ரவி கதாநாயகன். தன் முடைய முறைப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதின் மூலம் தன் முடைய குடும்பத்துக்கும் தன்னுடைய மாமாவின் குடும்பத்துக்கும் உள்ள பகை மறையும் என நம்பி சென்னை வருகிறான். அவனுடன் முத்து என்ற அசட்டுக் கிராமத்தானும் வருகிறான். ரேஸ் பைத்தியமான மாமன் மனத்தை கபடம் செய்து மயக்கி, அவர் மகளைக் காதலிக்க வைக்கிறான் ரவி. முத்து தான் காதலிக்கும் பெண்ணுக்காக மிருக வைத்தியனாக வேஷம் போடுகிறான். அந்தப் பெண் வீட்டிலுள்ள நகையைத் திருட ஒரு கும்பல் முயன்று வருகிறது. அவர்கள் முத்துவைப் பயமுறுத்தி தங்கள் திட்டத்துக்குப் பயன்படுத்தி வருகின்றனர். பல ஆள் மாறாட்டங்களுக்குப் பிறகு, எல்லாப் பிரச்சினைகளும் தீர்ந்து சுபமாகக் கதை முடிகிறது.


வயிறு வலிக்கச் சிரிக்க வேண்டுமானால் இந்தப் புத்தகத்தைப் படிக்கலாம். தம்முடைய உடல் மொழியால் சிரிக்க வைப்பது என்பது வேறு. ஆனால் எழுத்தின் மூலமே மற்றவர்களைச் சிரிக்க வைக்க மிகுந்த நகைச்சுவை உணர்வும் திறனும் தேவை. அவை சோவிடம் நிரம்பி இருந்தன.

இதே கதை 1969யில் சில மாற்றங்களுடன் "ஆயிரம் பொய் " என்ற பெயரில், சோ  திரைக்கதை வசனம் எழுத, முக்தா சீனிவாசன் இயக்கத்தில் வெளி வந்தது.