Showing posts with label Rajinikanth. Show all posts
Showing posts with label Rajinikanth. Show all posts

Sunday, September 22, 2019

இறைவன் கொடுத்த வரம்

ரஜினிகாந்துடன் சோ சேர்ந்து நடித்த முதல் படமிது. 1978, 22 செப்டம்பரில் வெளியான இப்படத்தை ஏ பீம்சிங் இயக்கியிருந்தார்.

விஜயகுமாரும் ரஜினியும் நாயகர்கள். படாபட் ஜெயலட்சுமியும் சுமித்ராவும் நாயகிகள். ஸ்ரீகாந்த், எம்.பானுமதி போன்றோரும் நடித்திருந்தனர்.

சோவின் கேரக்டர் பெயர் ராஜா.

ரஜினிகாந்த் என்ற கதாபாத்திரத்தில்  ரஜினிகாந்த் நடித்துள்ளார். பல பெண்களை ஏமாற்றித் திருமணம் செய்யும் கேரக்டர். விஜயகுமாருடைய தங்கையான சுமித்ராவைத் திருமணம் செய்தவுடன் போலீஸ் அவரைக் கைது செய்துவிடுகிறார்கள். இதற்கிடையே வழுக்கைத் தலையுடன் இருக்கும் சோவை விருப்பம் இல்லாமல் திருமணம் செய்யும் சுமித்ராவுடைய தோழி ஜெயலட்சுமி இச்சம்பவத்துக்குப் பிறகு கணவனுடன் ஒட்டுதலாக இருக்கிறார். ஸ்ரீகாந்த் சுமித்ராவை மறுமணம் செய்கிறார். துரதிர்ஷ்டவசமாக அவர் விபத்தில் இறந்துவிடுகிறார். இதற்கிடையே விஜயகுமாருக்குத் திருமணம் நடக்க, கணவன் இழந்த செய்தியை மறைக்கும் சுமித்ரா ஒரு கட்டத்துக்குப் பிறகு உண்மையை வெளிப்படுத்துகிறார். சோவின் உதவியால் ஒரு கல்லூரியில் ஆசிரியையாக வேலைக்குப் போகிறார் சுமித்ரா. அங்கே மாணவராக ரஜினி சேர்கிறார். கடைசியில் உடல் நலமின்றி சுமித்ரா இறக்க, ரஜினி அவருக்குக் குங்குமமிட்டுச் சுமங்கலியாக அனுப்பி வைக்கிறார்.

பீம்சிங் இறந்த பிறகு வெளியான இப்படம், அவருடைய மோசமான படங்களில் ஒன்று. 

Friday, December 7, 2018

அதிசயப் பிறவி

நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட இப்படத்தில், சோ நடித்திருக்கவில்லை என்றால் ரசிப்பதற்கு எதுவுமே இருந்திருக்காது. சோ தோன்றும் காட்சிகளைத் தவிர படம் சுத்த அறுவை. இப்படத்தின் நாயகன் ரஜினிகாந்த். அவருடைய ரசிகர்களுக்கே இப்படம் பிடிக்கவில்லை என்பதால்தான் வெற்றி பெறவில்லை.

சித்திரகுப்தனின் தவறான கணக்கால் நாயகனின் உயிர் பிரிந்து விட, அதனால் அவன் எம லோகத்தில் அட்டகாசம் செய்கிறான். யமன் அவனுக்குத் துணையாக விசித்திரகுப்தனை அனுப்புகிறான். விசித்திரகுப்தனின் உதவியால் தன்னைப் போலவே உள்ள உருவத்தின் உடலில் நாயகன் புகுந்து விடுகிறான். பின் அதனால் தோன்றும் குழப்பங்களும் அவற்றை எப்படி அவன் சமாளித்தான் என்பதுமே கதை.

எமனாக வினுசக்கரவர்த்தி, சித்திரகுப்தனாக வி.கே.ராமசாமி, விசித்திரகுப்தனாக சோ. காமெடி கலாட்டாவுக்குக் கேட்கவா வேண்டும்? அரசியலை அவ்வப்போது  தாக்கி சோ அகத்தளம் செய்கிறார்.

கனகா, ஷீபா, நாகேஷ், ஜெய்கணேஷ் போன்றோரும் படத்தில் உண்டு. எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் இப்படம் 15 ஜூன் 1990யில் வெளிவந்தது. 

குரு சிஷ்யன்

எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் 13 ஏப்ரல் 1988யில் வெளியான இப்படம் நகைச்சுவைக் காட்சிகள் நிறைந்த நல்ல படம். வில்லன் ரவிச்சந்திரனுடைய பார்ட்னராக சோ தோன்றுகிறார். நகைச்சுவை வில்லன் வேடம் அவருக்கு. எம்.ஜி.ஆர். மறைந்து நான்கு காட்சிகள் தேர்தலில் போட்டியிட்ட நேரம். சோவுக்குச் சொல்லவா வேண்டும்? அரசியலை வெளுத்து வாங்குகிறார். படம் முழுக்க அவர் யோசிக்கும் போது கைகளை உதய சூரியன், இரட்டை இலை மற்றும் கை சின்னங்களைக் காட்டி எதுவும் உருப்படாது என்பதை அவர் பாணியில் சைகை காட்டுவார். அரசியல் புரியும் ரசிகர்கள் இக்காட்சிகளைக் காணும் போதெல்லாம் வயிறு குலுங்கச் சிரிப்பார்கள்.

ரஜினிகாந்த் - பிரபு நாயகர்கள்; வழக்கமான பழி வாங்கும் மசாலாக் கதை; ஆனால் சண்டை, பாடல் காட்சிகளைத் தவிர நகைச்சுவையே பிரதானமாக உள்ளதால் எல்லாரும் விரும்பும் படமாக இது அமைந்து விட்டது. கெளதமி அறிமுகமான படம். சீதா, வினு சக்கரவர்த்தி, பாண்டியன், ராதாரவி, செந்தாமரை, மனோரமா போன்றோரும் படத்தில் நடித்துள்ளனர். இளையராஜா இசையில் அருமையான பாடல்கள். 

Tuesday, December 4, 2018

மனிதன்

எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் 21 அக்டோபர் 1987யில் வெளிவந்த இப்படத்தில் சோவுக்கு அவர் இஷ்டம் போல அரசியல் பேச நல்ல வாய்ப்பு. அரசியலில் சுயேட்சையாகப் போட்டியிடும் வினு சக்கரவர்த்திக்கு ஓட்டு சேகரிக்கும் கதாபாத்திரம் என்பதால் சோவுடைய அரசியல் காமெடிக்கு இப்படத்தில் பஞ்சமில்லை. அவர் தோன்றும் எல்லாக் காட்சிகளும் ரசிக்கும்படி உள்ளன. புரோக்கர் பொன்னம்பலம் என்பது அவருடைய கதாபாத்திரப் பெயர்.

அமாவாசையில் பிறந்ததால் திருடன் பட்டம் கட்டப்படும் சிறுவன், சந்தர்ப்ப வசத்தால் கொலைகாரனாகி சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் படித்து வெளியே வருகிறான். பணக்காரப் பெண்ணைக் காதலிக்கிறான்; ஏழைகளுக்கு வக்காலத்து வாங்குகிறான்; வில்லன்களைப் பந்தாடுகிறான். வழக்கமான 80களின் மசாலாப் படம்.

ரஜினிகாந்த், ரூபிணி, சோ, ரகுவரன், விணுசக்கரவர்த்தி, செந்தில், ஜெய் கணேஷ், மாதுரி, ஸ்ரீ வித்யா எனப் பெரிய நட்சத்திரப் பட்டாளம் படத்தில் உள்ளது.

சந்திரபோஸ் இசையில் பாடல்கள் எல்லாம் சூப்பர். 

Wednesday, September 12, 2018

நான் மகான் அல்ல

ரஜினிகாந்தின் மிகவும் பிரபலமான படங்களில் ஒன்று. 14 ஜனவரி 1984 யில் வெளியானது. இயக்கம் - எஸ்.பி.முத்துராமன்.

சோவுக்கு முக்கியமான வேடம். படம் முழுக்க ரஜினியுடன் வருகிறார்; அவருக்குப் பக்கபலமாக உள்ள கேரக்டர். ஹரி சந்திர ரெட்டி எனப் பெயர். தெலுங்கு கலந்த தமிழில் அவர் மாட்லாடி நம்மை வயிறு நோகச் செய்கிறார். உன்னிப்பாகக் கவனித்தால் ஒரு சில இடங்களில் அவர் அரசியலைத் தாக்குவதைக் கவனிக்கலாம். ரசிக்கும்படியான நகைச்சுவை.

வக்கீல் ரஜினி ஒரு பெண்ணைக் கற்பழிக்கும் சத்யராஜுக்குத் தண்டனை வாங்கித் தருகிறார். அதனால் சத்யராஜுடைய தந்தையான நம்பியாரும் அவர் நண்பர்களும் ரஜினிக்குப் பல தொல்லைகள் தருகின்றனர்; அவர் சிறை செல்கிறார்; வேலை இழக்கிறார்; தாயையும் பறி கொடுக்கிறார். வில்லன்களை அவர் எப்படி பழி வாங்குகிறார் என்பதே கதை.

அக்காலத்திய சராசரி மசாலாப் படம். தாயை மற்றவர்கள் கொலை செய்ய, அங்கு வரும் ரஜினி முகத்தில் இஞ்சு அளவு கூட உணர்ச்சி இல்லை. பாடல்களும் சுமார். படம் ரஜினி ரசிகர்களுக்குப் பிடித்திருந்ததாலே நன்றாக ஓடியுள்ளது.

ராதா கதாநாயகி. செந்தாமரை, வி.கே.ராமசாமி, சங்கிலி முருகன், விஜயகுமாரி எனப் பல முன்னணி நட்சத்திரங்கள் படத்தில் உண்டு. 

Saturday, September 8, 2018

அடுத்த வாரிசு

எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் 7 ஜூலை 1983யில் வெளிவந்த இப்படம் ரஜினிகாந்தின் முக்கியமான படங்களில் ஒன்று. வழக்கமான மசாலாக் கதை. சோவுக்கு ரஜினியின் வேலையாள் வேடம்; ராமன் எனப் பாத்திரப் பெயர். ரசிக்கும்படியான நகைச்சுவை என்றாலும் அவருடைய அரசியல் வசனங்கள் இல்லாததால் மிகவும் பிரமாதம் எனச் சொல்ல முடியாது.

ஜமீனின் தொலைந்து போன பெண்ணுக்குப் பதிலாக ஒரு போலியான பெண்ணைத் தயார் செய்ய வில்லனுக்கு உதவுகிறார் ரஜினி. கடைசியில் அவரே ஜமீனின் உண்மையான வாரிசு எனத் தெரிகிறது. வில்லன்களிடமிருந்து நாயகியையும் ஜமீன் சொத்தையும் ரஜினி மீட்டெடுப்பதே க்ளைமாக்ஸ்.

ஸ்ரீதேவி நாயகி. ஆனந்தன், மனோரமா, ஜெய்சங்கர், வி.கே.ராமசாமி, செந்தாமரை, ரவீந்திரன், சில்க், வி.கோபாலகிருஷ்ணன், எஸ். வரலட்சுமி போன்றோரும் படத்தில் நடித்துள்ளனர். இளையராஜா இசையில் பெரும்பாலான பாடல்கள் அருமை. 

Wednesday, September 5, 2018

கழுகு

ஓர் ஆங்கிலப் படத்தின் அதிகாரப்பூர்வமற்ற ரீமேக் தான் இப்படம். எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் 6 மார்ச் 1981யில் வெளியான இப்படம் ரஜினியின் முக்கியமான வெற்றி படங்களில் ஒன்று.

சோவுக்குப்  பத்திரிகையாளர் வேடம். ராமசாமி எனப் பெயர். குணச்சித்திர வேடம்; இடைவேளைக்குப் பிறகுதான் வருகிறார். எஸ்.பி.முத்துராமன் நட்பின் காரணமாகச் சோ நடித்த படம் என நினைக்கிறேன். இவருடைய பாத்திரத்தைப் பற்றி பெரிதாகச் சொல்ல எதுவுமில்லை.

ரஜினி ரசிகர்களுக்குப் பிடிக்கும்படியான மசாலாப் படம். ரஜினி ரதியைக் காதலித்துக் கை பிடிக்கிறார். சொகுசு பஸ்ஸில், நண்பர்களையும் சேர்த்துக் கொண்டு மனைவியுடன் ஹனிமூன் போகிறார். ஒரு காட்டில் நர பலி கொடுப்பதைப் பார்க்கிறார். பல போராட்டங்களுக்குப் பிறகு நர பலி கொடுக்கும் கூட்டத்தை ஒழித்துக் கட்டுவதே மீதி கதை.

இளையராஜா இசையில் பாடல்கள் எல்லாம் அருமை.

தேங்காய் சீனிவாசன், வி.கே.ராமசாமி, சுருளி ராஜன், சுமலதா, ஒய்.ஜி.மகேந்திரன், சங்கிலி முருகன் போன்றோரும் படத்தில் நடித்துள்ளனர். 

Sunday, July 29, 2018

ஆறிலிருந்து அறுபது வரை

9 செப்டம்பர் 1979யில் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் வெளியான இப்படம் இன்றளவிலும் ரஜினியின் நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்த படமாகப் போற்றப்படுகிறது. நம்ப முடியாத, மிகவும் வேகமான கடைசி 10-15 நிமிடங்களைத் தவிர்த்தால் படம் நன்றாகவே உள்ளது. சோ அழகேசன் என்ற பெயரில் பத்திரிகையாளராகவும் ரஜினியின் நண்பனாகவும் வருகிறார். இவர் இவருடைய அக்மார்க் அரசியல் வசனங்களை அவ்வப்போது பேசுகிறார். ஆனால் அவருக்கு நகைச்சுவை வேடமில்லை; குணச்சித்திர வேடம். நிறைவாகச் செய்துள்ளார்.

ஆறு வயதில் தந்தை இறந்ததிலிருந்து குடும்பத்தைத் தாங்கிப் பிடிக்கிறார் ரஜினிகாந்த். காதல் தோல்வி, பணக் கஷ்டம், தாயின் மரணம் இவற்றுக்கிடையே தம்பி தங்கையைப் படிக்க வைக்கிறார். பெரும் பணக்காரனாகும் தம்பியும், பணக்காரனைத் திருமணம் செய்து கொள்ளும் தங்கையும் இவரைப் புறக்கணிக்கிறார்கள். வேலை இழக்கிறார். மனைவி படாபட் ஜெயலட்சுமியை நெருப்பில் பறிகொடுக்கிறார். வறுமையில் குடும்பமே தத்தளிக்கிறது. பின் கதை எழுதி பிரபலமாகி, பத்திரிகை தொடங்கி பணக்காரராகி, அவார்ட் வாங்குகிறார். அப்போது இவருடைய உடன் பிறப்புகள் சொந்தம் கொண்டாடுகின்றனர்.

பாடல்களும் அருமை. நடிகர்கள் அனைவரும் நிறைவாக நடித்துள்ளனர். தேங்காய் சீனிவாசன், சுருளிராஜன், ஜெயா, சங்கீதா, எல்.ஐ.சி. நரசிம்மன் எனப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே படத்தில் உள்ளது. நகைச்சுவைக் காட்சிகள் இல்லை; ஆனால் அது குறையாகத் தெரியவில்லை.