Sunday, January 1, 2017

சோவின் முதல் திரைப்படம்

விவேகா ஃபைன் ஆர்ட்ஸில் பிசியாக இருந்து கொண்டே சோ ஒய்.ஜி.பி.யின் நாடகங்களிலும் நடித்து வந்தார். "The Whole Truth" என்ற நாடகம் அநேகமாக ஜெயலலிதாவின் முதல் நாடகமாக இருக்க வேண்டும். அதில் சோவுக்கு வில்லன் வேடம். இது திருமதி ஒய்.ஜி.பி.யின் ஆங்கில நாடகம். "Under Secretary" என்ற நாடகத்தில் சந்தியா,  ஜெயலலிதா ஆகியோருடன் சோ நடித்தார். அடாவடியான நகைச்சுவைப் பாத்திரம் சோவுக்கு. அது மக்களிடையே மிகவும் பிரபலமடைந்தது.

பட்டு எழுதிய ஒய்.ஜி.பி.யின் "பெற்றால் தான் பிள்ளையா" என்ற நாடகத்தில் மாடசாமி என்ற கதாபாத்திரத்தில் சோ புகுந்து விளையாடினார். அந்த நாடகத்தின் வெற்றி டைரக்டர் பீம்சிங்கையும் நடிகர் திலகம் சிவாஜியையும் அதைத் திரைப்படமாக எடுக்க வைத்தது. மாடசாமி என்ற கதாபாத்திரத்தில் சோ தான் நடிக்க வேண்டும் என பிடிவாதமாக இருந்து அதை நடத்தியும் காட்டினார் சிவாஜி. இப்படித்தான் சோவுடைய சினிமா பிரவேசம் நடந்தது.

"பார் மகளே பார்" படத்தைப் பற்றி சிறிது பார்ப்போமா?

சிவாஜி கணேசன் ஹீரோ. பெரிய பணக்காரர் - தொழிலதிபர். பணத்திமிரில் யாரையும் மதிக்காத கேரக்டர். சிவாஜி தம்முடைய பார்வை, நடை, உடை, பாவனை அனைத்திலும் திமிர்த்தனத்தையும் அலட்சியத்தையும் அருமையாக வெளிப்படுத்தியிருப்பார்.

சௌகார் ஜானகி சிவாஜிக்கு ஜோடி. கணவனுக்குப் பயந்த பெண்மணி வேடம். நிறைவான நடிப்பு.

பிரசவ ஆஸ்பத்திரியில் சௌகார் ஜானகிக்கு ஒரு பெண் குழந்தை பிறக்கும். அதே நேரத்தில் ஒரு டான்ஸருக்கும்  அந்த ஆஸ்பத்திரியில் ஒரு பெண் குழந்தை பிறக்கும். குழந்தையை அங்கேயே விட்டுவிட்டு அந்த டான்ஸர்  எங்கோ ஓடி விடுவார். எதிர்பாரா விபத்தில் நர்ஸ் இறந்து விட, யார் சௌகார் ஜானகியின் குழந்தை என யாருக்கும் தெரியாது. சிவாஜியின் கோபத்துக்குப் பயந்து இரண்டுமே ஜானகியுடைய குழந்தைகள்தான் என சிவாஜியிடம் பொய் சொல்வார்கள்.

இந்த உண்மை டாக்டர், ஜானகி, சிவாஜியின் நண்பர் வி.கே. ராமசாமி ஆகியோருக்கு மட்டுமே தெரியும்.

சில காலத்துக்குப் பிறகு, தமது தங்கை குழந்தையைத் தேடி வரும் எம்.ஆர். ராதாவும் ஜானகியின் வேண்டுகோளுக்கிணங்க  உண்மையை வெளிப்படுத்தாமல் அங்கேயே தங்கி இரு குழந்தைகளையும் பார்த்துக் கொள்வார். யதார்த்தமான நடிப்பு ராதாவுக்கு. கேலி, கிண்டல், எதுவுமின்றி இப்படத்தில் அடக்கி வாசித்து இருப்பார்.

இரு பெண்களும் வளர்வார்கள் - அவர்கள் பாத்திரத்தை விஜய குமாரியும் புஷ்பலதாவும் ஏற்றிருப்பார்கள். விஜய குமாரி முத்துராமனைக் காதலிப்பார். விசாரித்துப் பார்த்து, முத்துராமன் பெரிய பணக்காரர் என்ற ஒரே காரணத்தால் திருமணத்துக்குச் சம்மதிப்பார் சிவாஜி.

தொழிலில் நொடிந்த ராமசாமிக்கு சிவாஜி உதவி புரிய மாட்டார். பல வருடங்களுக்கு முன்பு தங்கள் பெண்களில் ஒருத்தியை ராமசாமியுடைய மகனுக்குத் திருமணம் செய்து கொடுக்க தாம் கொடுத்த வாக்குறுதியை ஜானகி நினைவு படுத்துவார். அதை சிவாஜி உதாசீனப்படுத்துவார்.

விஜயகுமாரியின் நிச்சயதார்த்த விழாவில் ஒரு கோபத்தில் எல்லோர் முன்பாக இரண்டு பெண்களில் ஒருத்தி சிவாஜியுடைய மகள் இல்லை என்ற உண்மையை ராமசாமி சொல்லி விடுவார். அதன் பின் பல குழப்பங்கள் - திருப்பங்கள். விஜயகுமாரி திருமணம் நின்று விடும். அவர் புஷ்பலதாவுக்கு நன்மை செய்ய தாம்தான் நாட்டியக்காரியுடைய மகள் என உண்மையை அறிந்து கொண்டதாக ஒரு கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறி விடுவார்.

இதற்கிடையே ராமசாமியுடைய மகனான ஏ.வி.எம். ராஜனைத் தான் தான் மணப்பேன் என புஷ்பலதா அடம் பிடிப்பார். அது சிவாஜிக்குப் பிடிக்காது.
சிவாஜி ஜானகியுடன் பேசுவதை நிறுத்தி விடுவார். யார் தம் மகள் என்பதை அறிய முடியாமல் தவிப்பார். நடக்கின்ற சம்பவங்களுக்கு ஏற்ப சில சமயம் விஜயகுமாரியையும் மற்ற சில சமயத்தில் புஷ்பலதாவையும் தமது மகள் என நம்புவார். பல சம்பவங்களுக்குப் பிறகு, விபத்தில் அடிபட்ட அவருக்கு இரு பெண்களுமே ரத்தம் கொடுப்பர். பணம் பெரியதில்லை - உறவே பெரியது என மனம் திருந்தும் சிவாஜி இருவரையுமே தமது மகள்களாக ஏற்றுக் கொள்வார்.

சிவாஜியிடம் வேலை செய்பவர் கருணாநிதி. அவருடைய மைத்துனன் வேடம் சோவுக்கு. மெக்கானிக் மற்றும் டிரைவர். ஜோடி கருணாநிதியடைய மகளாக வரும் மனோரமா. சில காட்சிகளில் மட்டுமே வந்தாலும் சோ தோன்றும் போதெல்லாம் கலகலப்பாக இருக்கும். அவர் பேசும் சென்னைத் தமிழ் கலக்கல்.


பீம்சிங் இயக்கிய இந்தப் படம் 1963யில் வெளியானது.

Wednesday, December 7, 2016

சம்பவாமி யுகே யுகே

மஹா விஷ்ணு ஊழலை ஒழிக்க மனிதனாக அவதரிக்கிறார். ஒரு குறிப்பிட்ட வயதுக்குப் பின் அவர் அவதாரம் என்பதை அவருக்கு நாரதர் உணர்த்துகிறார். அப்போதிருந்து கடவுளும் ஊழலை ஒழிக்கப் படாத பாடு படுகிறார். ஆனால் கடைசி வரை அவரால் அதை ஒழிக்க முடியவில்லை; மாறாக அவருக்குப் பைத்தியக்காரப் பட்டம்தான் கிடைக்கிறது.

பீதாம்பரம் என்ற கேரக்டரில் சென்னை தமிழ் பேசி சோ கலக்குவார். கான்ட்ராக்டரின் செகரக்டரி - ஊழலின் மொத்த உருவம். நடுவில் கொலை செய்யப்படுகிறார். அந்தப் பழி கடவுள் மீது விழுவது தான் கதையின் கடைசிப் பகுதிகள்.

எப்போதுமே பகவத் கீதை பேசும் கேரக்டர் தாம் செய்யும் தவறுகளுக்கு ஏதாவது காரணங்கள் கண்டு பிடிப்பது அல்லது எல்லாவற்றையும் கடவுளைக் காரணம் காட்டுவது, ஒரு கட்டத்தில் கடவுளே ஊழலுக்கு எதிராக வெல்ல முடியாமல் நடந்த தவறுக்கு ஏதோ காரணம் கண்டுபிடித்து சமாதானம் அடைவது, அலுவலக  அதிகாரி, வேலை செய்யாத அரசு அலுவலர்கள், ஆபிஸ் பைல்களை விற்று காசாக்கும் பியூன், ஊழல் வாதிகளிடமே தம் சாமர்த்தியத்தால் உள் குத்து மூலம் சம்பாதிக்கும் சோ கேரக்டர் எனப் பல சுவாரசியமான பாத்திரங்களும் சம்பவங்களும் இந்நாடகத்தில் உண்டு.


பக்தவத்சலம் முதல்வராக இருந்த போது மேடை ஏற்றப்பட்ட நாடகம். முதலில் லைசன்ஸ் கொடுக்க அரசு மறுத்து அதன் பின் சோ கோர்ட் போய் நியாயம் நிலை நாட்டி எந்த வசனத்தையும் கட் செய்யாமல் மேடை ஏற்றினார்.

Thursday, December 1, 2016

சோவின் அடுத்தடுத்த நாடகங்கள்

If I get it? என்ற முதல் நாடகத்துக்குப் பிறகு சோ எழுதிய அடுத்த நான்கு நாடகங்களுக்கும் ஆங்கிலத் தலைப்பே வைக்கப்பட்டது. அந்த நாடகங்கள் - Don't Tell Anybody, Why Not?, Wait and See  மற்றும் What for?.

Why Not?, What for? மற்றும்  Wait and See ஆகிய நாடகங்களை இயக்கியவர் கே.பாலச்சந்தர். Why Not? நாடகத்தில் பாலசந்தர் ரிகர்சலில் நீக்கிய சில காட்சிகளை மேடையில் சோ புகுத்திவிட்டார். Wait and See நாடகத்தில் சில நகைச்சுவை காட்சிகளைப் புகுத்தும்படி பாலசந்தர் வற்புறுத்தப்பட்டார். இதனாலெல்லாம் அவருக்குச் சங்கடங்கள் உருவானது. அவர் விவேகா ஃபைன் ஆர்ட்ஸிலிருந்து தம்மை விலக்கிக் கொண்டார்.


Why Not? கூடு விட்டு கூடு பாய்வதைப் பற்றிய கதை. இந்நாடகத்தில் ஒரு புதுமை. கூடு விட்டு கூடு பாய முடியுமா என நாடகப் பாத்திரம் ஒன்று வினவ, ஏன் முடியாது என்று ஆடியன்ஸுக்கு மத்தியில் இருந்து இன்னொரு பாத்திரம் தோன்றுவதைப் போல ஒரு காட்சி அமைக்கப்பட்டிருந்தது.

விவேகா ஃபைன்  ஆர்ட்ஸின் நாடகங்களை என்எஸ்நடராஜன் என்பவரும்திருஎஸ்வீவெங்கட்ராமன் அவர்களும் டைரக்ட் செய்து வந்தனர்பிறகுகேபாலசந்தர் Why Not?, Wait and See மற்றும் What for? நாடகங்களை இயக்கினார்அவருடைய பாணிக்கும்சோவின் குழுவிலிருந்த நடிகர்களின் பாணிக்கும் ஒத்து வராததால்அவர் ஒதுங்கிக் கொண்டார்பிறகுசோ அவர்களே நாடகங்களை எழுதுவதோடு மட்டுமின்றி இயக்கவும் செய்தார்அவர் எழுதி இயக்கிய முதல் நாடகம் பாலசந்தர் பாதியிலேயே விலகிய "What for?". மேடையேறிய ஆண்டு 1962. 

டி. கே. சண்முகம் அவர்கள் ஒரு மேடையில் சோ ஆங்கிலத் தலைப்பு வைப்பதைத் தவிர்க்க வேண்டும் எனக் கருத்து தெரிவித்தார். இள வயது சோ அப்போது ஏட்டிக்குப் போட்டி என்ற மனோபாவத்தில் இருந்தார். அதனால் அந்த மேடையிலேயே இனி ஆங்கிலத் தலைப்பு வைப்பதில்லை என்று கூறி, தம்முடைய அடுத்த நாடகத்தின் தலைப்பையும் அங்கேயே அறிவித்தார். அது 'கோ வாடிஸ்' என்ற லத்தீன் மொழித் தலைப்பு. அதன் பொருள் 'எங்கே போகிறாய்?'.


இதற்கிடையே சோ ஒய். ஜி. பி. யின் நாடகங்களிலும் நடித்து வந்தார். ஜெயலலிதாவின் தாயார் சந்தியாவும், சித்தி  வித்யாவதியும் அந்த நாடகக் குழுவில் நடித்து வந்தனர். அப்போது அவர்களுடன் சிறுமியான ஜெயலலிதாவும் வருவார். அப்போதிலிருந்தே சோவுக்கு ஜெயலலிதாவுடன் நட்பு உருவாகியது.

இந்த நாடகங்கள் முதலில் மேடையேறிய வருடங்கள்:

If I get it? - 1957
Don't Tell Anybody - 1958
Why Not? - 1959
Wait and See - 1961
What for? - 1962
கோ வாடிஸ் (Quo Vadis?) - 1962