Tuesday, July 25, 2017

மனம் ஒரு குரங்கு

1967யில் வெளியான படம். .டி.கிருஷ்ணஸ்வாமி டைரக்ஷன். செல்லப்பா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் சோ. கே.ஆர்.விஜயா கதாநாயகி; நாயகன் .வி.எம்.ராஜன்.

திரைக்கதை - சோ. சோவுடைய எழுத்தில் ஏற்கனவே சக்கை போடு போட்ட நாடகம்தான் படமாக எடுக்கப்பட்டது. 

டி.எஸ்.பாலையா பணக்காரர்; அவருடைய ஒரே மகன் சோ. இருவரும் திரையில் தோன்றும் காட்சிகள் நமது வயிற்றைக் குலுக்க வைக்கின்றன.
.வி.எம்.ராஜன் நாடகம் போடுகிறார்; காய்கறிக்காரியாக நடிக்கும் நடிகை கோபித்துக் கொண்டு போய் விட, அவள் இல்லாமலே நாடகத்தை நடத்துவதாகச் சவால் விடுகிறார் ராஜன். உண்மையான காய்கறிக்காரியான  கே.ஆர்.விஜயாவை நாடகத்தில் நடிக்க வைக்கிறார்.

விஜயா நடிப்பைப் பார்க்கும் ராஜனின் நண்பனான சோ விஜயாவைக் காதலிக்கிறார். பாலையா பார்த்து வைக்கும் அவருடைய பணக்கார நண்பருடைய மகளை நிராகரிக்கிறார். விஜயா காய்கறி விற்பவர் எனது தெரிந்த பிறகு, அந்தப் பணக்காரப் பெண்ணையே மணக்க சம்மதிக்கிறார்.

விஜயாவின் நடை உடை பாவனையை மாற்றி, அவர் வெளிநாட்டிலிருந்து திரும்பிய நவநாகரீக நங்கை போல காட்டுகிறார் ராஜன். அவர் திட்டப்படியே சோ மீண்டும் விஜயாவை மணக்க விரும்ப, விஜயா அவரை நிராகரிக்கிறார்.

இன்னும் சில மன மாற்றங்களும் நிராகரிப்புகளும் படத்தில் உண்டு. கடைசியில், விஜயா மனம் மாறி படங்களில் நடிக்கத் தொடங்குகிறார். அவர் மீது உயிரையே வைத்த முத்து ராமன் இதனால் அவரை விட்டுப் பிரிகிறார். ராஜன் மனம் சபலப்பட்டு விஜயாவை மணக்க விரும்புகிறார்; ஆனால் அவரை விஜயா நிராகரிக்கிறார்.

படம் எடுக்கப்பட்ட விதம் பிரமாதம். ராஜன் விஜயாவுக்கு நாகரீகமாக இருக்க கற்றுக் கொடுக்கும் காட்சிகள் மட்டும் சிறிதே நீளம். 'மனம் ஒரு குரங்கு' என்ற பாடலைத் தவிர மற்றவை மனத்தில் நிற்கவில்லை.


சோ படம் முழுவதும் அவ்வப்போது வந்து நம்மை சிரிக்க வைக்கிறார். அவருடைய சிறந்த படங்களில் இதுவும் ஒன்று என்பதில் ஐயம் இல்லை.

நான் யார் தெரியுமா?

'நான் யார் தெரியுமா?' - 1967யில் வெளியான இப்படம் சோவுடைய ஆறாவது படமாக இருக்க வேண்டும்.  

ஜெய்சங்கர் ஹீரோ. வி.வி.ரமணன் இயக்கம். பாரதி, பி.ராதிகா, ஓ.ஏ.கே.தேவர் போன்றோர் நடித்துள்ளனர். 

ஜெய்சங்கர் பாணி மசாலா கதை. ஜெய்யுடைய பரம்பரைச் சொத்தை அபகரிக்க வில்லன் கூட்டம் முயலும். அதிலிருந்து ஜெய் மீள்வதே கதை. ஜெய்யுடைய காதலி பாரதி. அவருடைய அண்ணன் சோ. அவருக்கு ஜோடி ராதிகா. எல்லாரும் ஜெய்க்கு உதவுவார்கள். சோ கோமாளித்தனமான வேடத்தில் வருகிறார்; ஓரிரு காட்சிகளில் பெண் வேடத்திலும் தோன்றுகிறார். சொல்லிக் கொள்ளும்படியான படமில்லை.

Monday, July 24, 2017

சரஸ்வதியின் செல்வன்

1967யில் மேடையேறிய "சரஸ்வதியின் செல்வன்" சோவுடைய ஆகச் சிறந்த நாடகங்களில் ஒன்று. கேலி, கிண்டல், நையாண்டி - Cho at his best!

எழுத்தாளர் தாசானு தாசன் என்ற கதாபாத்திரம் சோவுக்கு. அவரைத் தவிர யாருமே இந்தப் பாத்திரத்தில் நடிக்க முடியாது. இன்றைய கால கட்டத்தின் சென்னை வட்டார மொழியில் சொல்ல வேண்டுமென்றால் சும்மா எல்லாரையும் வஞ்சனையில்லாமல் கலாய் கலாய் எனக் கலாய்த்திருப்பார்.

தாசானு தாசன் ஒரு சினிமா கதையைச் சொல்ல, அந்த அபத்தமான லாஜிக் இல்லாத கதையில் வரும் எல்லாப் பாத்திரங்களுக்கும் உயிர் கொடுக்கிறாள் சரஸ்வதி. அவர்கள் மூலம் தமிழ்க் கொலை புரியும் எழுத்தாளனுக்குப் புத்தி புகுத்த நினைக்கிறாள் சரஸ்வதி. அந்தப் பாத்திரங்கள் இவர் மீது கொலை வழக்கு போடுகின்றனர். அதிலிருந்து அவர் எப்படி தப்பி வருகிறார் என்பதே மீதி கதை.


சினிமாவுக்கு கதை எழுதுபவர்கள், அதில் நடிப்பவர்கள், தயாரிப்பவர்கள் எனச் சகட்டு மேனிக்கு அனைவரையும் கிண்டலடித்திருப்பார் சோ. இதே கதை சற்று விரிவாக "சரஸ்வதியின் சபதம்" என்ற பெயரில் 80களின் இறுதியில் தூர்தர்ஷனில் வெளியாகி, பல பிரபல கதாநாயக நடிகர்கள் மற்றும் நகைச்சுவை நடிகர்களின் வயிற்றெரிச்சலை கட்டிக் கொண்டது என்பது உபரித் தகவல்.