Tuesday, March 6, 2018

பொன்வண்டு

ஊரெல்லாம் தமிழ் தமிழனு பேசிட்டு உங்க தங்கச்சியை மட்டும் இங்கிலிஷ் பள்ளிக்கூடத்துல அனுப்பறீங்களே?

சோ - ஊருக்கு தான் உபதேசம்; நமக்கில்லை.

மத்தியில் ஆட்சி செய்த இந்திரா காந்தியையும் தி.மு.க.வையும் வசனத்துக்கு வசனம் சோ கிண்டலடிக்கிறார். சில காட்சிகளிலேயே அவர் தோன்றினாலும் அரசியல் வசனங்களால் நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறார். அவருடைய கதாபாத்திரத்தின் பெயர் சிக்கல் சிங்காரபாலன். சினிமா கதாசிரியராக வருகிறார்; அவ்வப்போது சினிமாக்காரர்களையும் கிண்டலடிக்கிறார். சச்சு அவருக்கு ஜோடி; ஜெயசித்ரா தங்கை.

என்.எஸ்.மணியம் எழுதி இயக்கி 28 செப்டம்பர் 1973யில் வெளிவந்த இப்படம் ஒரு முழு நீள நகைச்சுவைப் படம். பணக்காரரான அசோகனுடைய மகன் ஜெய்சங்கர்; பெரும் ஊதாரி. ஒரு கட்டத்தில் பத்தாயிரத்தைச் சம்பாதித்துக் காட்டு எனத் தந்தை சவாலிட, ஜெய்சங்கர் வேலை தேடி அலைகிறார். சினிமா ஹீரோவுக்கு ஆளைத் தேடும் கதாசிரியர் சோ, இயக்குனர் சுருளிராஜன், தயாரிப்பாளர் தேங்காய் சீனிவாசன், பைனான்சியர் மனோரமா ஆகியோரிடம் திமிராகப் பேசி வாய்ப்பை இழக்கிறார். பின் சந்தர்ப்பவசத்தால் அவர்களுடைய தங்கை, பெண், அக்காள் மகளென உறவுப் பெண்களிடம் நல்ல பெயர் சம்பாதித்து, சில தில்லு முல்லுகள் செய்து சினிமா வாய்ப்பைப் பெறுகிறார். நான்கு இளம் பெண்களும், போதாததற்கு வயதான பெண்மணியான மனோரமாவும் ஜெய்சங்கரைக் காதலிக்கின்றனர். சினிமா வாய்ப்பை இழக்கக் கூடாது என்பதால் நால்வரையும் காதலிப்பதைப் போல நடித்து, படம் முடிந்தவுடன் அவர்களிடமிருந்து ஜெய் எப்படி தப்பிக்கிறார் என்பதே க்ளைமாக்ஸ்.

கலகலப்பான படம். போர் அடிக்காமல் போகிறது. பாரதி, உஷா நந்தினி, சுபா, ஜெயசித்ரா ஆகியோர் நாயகியர். அதைத் தவிர சச்சு, எம்.என்.ராஜம், வெண்ணிறாடை மூர்த்தி, ஸ்ரீ காந்த், ஜெயகுமாரி எனப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே படத்தில் உண்டு. 

Friday, February 23, 2018

வீட்டுக்கு வந்த மருமகள்

சோ நடித்த பல தேவையற்ற படங்களில் இதுவும் ஒன்று. 1973 யில் வெளிவந்த இப்படத்தை அறிமுக இயக்குனரான  ஆர்.விட்டல் இயக்கியுள்ளார். சோவுக்குப் பெண்டாட்டிக்குப் பயந்த அசட்டுப் பாத்திரம். நகைச்சுவை சொல்லும்படியாக இல்லை; அசடு வழிகிறது. சாம்பு என்பது கதாபாத்திரப் பெயர். மனோரமா ஜோடி.

பல நட்சத்திரங்கள் இருந்தும் நல்ல திரைக்கதையோ வசனங்களோ இல்லாததால் படம் சோபிக்கவில்லை. ஏ.வி.எம். ராஜன் பணக்கார மாமியாரான ஜி.வரலட்சுமியிடம் அவமானப்பட்டு வீட்டை விட்டு வெளியேறுகிறார். மனநிலை பாதிக்கப்பட்டு பல வருடங்களுக்குப் பிறகே திரும்புகிறார். அவருடைய மூத்த மகளான மனோரமா தம்முடைய பாட்டியைப் போல திமிர் பிடித்தவராக இருக்கிறார். மகன் ரவிசந்திரனும் மகள் நிர்மலாவும் நல்ல மனம் படைத்தவர்கள். நிர்மலா ஏழையான முத்துராமனைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டாலும், வரலட்சுமியால் புகுந்த வீட்டுக்குப் போக முடியாமல் தவிக்கிறார். ரவிசந்திரனுடைய காதலியான லதா வீட்டுக்குள் புகுந்து தம்முடைய அடாவடித்தனத்தால் பாட்டியைத் திருத்தி, நிர்மலாவையும் புகுந்த வீட்டுக்கு அனுப்புவதே கதை.

லதா தான் தலைப்புக்கேற்ற நாயகி என்றாலும், அவரை விட நிர்மலாவுக்கு ஸ்கோப் அதிகம். அதைப் போல நாயகன் ரவிசந்திரனைவிட அவருடைய அப்பாவான ராஜனுக்குக்  காட்சிகள் அதிகம். வி.எஸ்.ராகவன், காந்திமதி, தேங்காய் சீனிவாசன், எம்.என். ராஜம் எனப் பெரிய பட்டாளமே படத்தில் உள்ளது.

பாடகி வாணி ஜெயராம் அறிமுகமானது இப்படத்தில் தான்.

Sunday, February 18, 2018

ஷண்முகப் ப்ரியா

1973யில் வெளியான இப்படத்தைப் பற்றி இன்று யாருக்கும் தெரியவில்லை. ஆனால் இது ஒரு முக்கியமான படமாக நான் கருதுகிறேன். என்.பாஸ்கரன் எழுத்தில், கே.கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில், சோ முக்கியமான வேடத்தில் நடித்த இப்படம் நாத்திகவாதத்தை நேரிடையாகவும் தைரியமாகவும் எதிர்க்கிறது. தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி நடை பெற்றுக்  கொண்டிருந்த சமயத்தில் அந்தக் கட்சியின் கொள்கைகள் விமர்சிக்கப்படுகின்றன.

மேலுகிலும் பூவுலகிலும் நடப்பதைப் போன்ற கதை. சோவுக்கு நாரதர் வேண்டும். கேட்கவா வேண்டும்? பிய்த்து  உதறுகிறார். அரசியல் நையாண்டிக்கு குறைவில்லாத வசனங்கள். சில உதாரணங்கள் -

"கலகம் செய்கிறேனா? கலகங்கள், கழகங்கள் இவற்றோடு எனக்குச் சம்பந்தமே கிடையாது."

பிள்ளையாரின் பிறந்த நாளில் கலந்து கொள்ளும் முருகனிடம் "பிறந்த நாள் - அண்ணனுக்கு? பிழைக்கும் வழி தெரிந்து கொண்டாய்."

"உன் கலகத்தை தெய்வங்களுடன் நிறுத்திக் கொள்; மனிதர்களிடம் காட்டாதே. அவர்கள் தாங்க மாட்டார்கள்." எனச் சொல்லும் முருகனுக்குப் பதில் - "அவர்களுக்கு எதையும் தாங்கும் இதயம் உண்டு."

இன்னும் ஒரு காட்சியில் அவர் விஷ்ணுவை "நாராயணா, ஆபத்பாந்தவா " எனப் பல பெயர்கள் சொல்லி அழைத்து கடைசியில் "கருணாநிதியே" என முடிக்கிறார்.

பூலோகத்தில் நாத்திகவாதம் அதிகரித்து வருவதாக நாரதர் சொல்ல, பக்தி மார்க்கத்துக்கு ஆபத்தில்லை என முருகன் சொல்ல, அதைச் சோதித்துப் பார்க்க இருவருமே பூமிக்கு வருகிறார்கள். முருகனாக சிவகுமார். நாரதாராக வரும் சோ நாத்திகரான முத்துராமனையும் ஆத்திகரான ஜெயந்தியையும் மணமுடிக்கும்படியான சூழலை உருவாக்குகிறார். பல போராட்டங்களுக்குப் பின் ஜெயந்தி தம்முடைய கணவரை எப்படி ஆத்திகராக மாற்றினார் என்பதே கதை.

மேஜர் சுந்தர்ராஜன்-சுகுமாரி முத்துராமனுடைய பெற்றோர்கள். ஜெயந்தியுடைய தந்தையாக வி.எஸ்.ராகவன், மனோரமா-சுருளிராஜன், வில்லனாக தேங்காய் சீனிவாசன் மற்றும் பலர் நடித்த படம் இது.