Friday, September 7, 2018

துணைவி

வலம்புரி சோமநாதன் இயக்கத்தில் ஏப்ரல் 1981யில் வெளியான இப்படம் below average category. சோவுக்கு ஒரு சிறிய வேடம். எம்.என்.ராஜம் ஜோடி. அவ்வப்போது சிரிக்க வைக்க முயல்கிறார். ஆனால் நமக்குத் தான் சிரிப்பு வரவில்லை. இது இவருக்குத் தேவையில்லாத படம்.

சிவகுமார் சுஜாதா தம்பதியினர்க்கு மூன்று குழந்தைகள். சந்தோஷமாக வாழ்க்கை சென்று கொண்டிருக்கிறது. அப்போது அவருக்கு தேங்காய் சீனிவாசன் மூலம் மிரட்டல் வருகிறது. அதனால் அவர் தாம் வேலை செய்யும் வங்கியில் கருப்புப் பணத்தைக் கலக்கிறார். சுஜாதா தம்முடைய கணவர் ஏதோ தவறு செய்வதாக எண்ணி நான்கு  குழந்தைகளுடன் வெளியேறி, கூலி வேலை செய்து பிழைக்கிறார். வறுமையில் அவர்கள் வாடுவதைப் பார்த்துப் பொறுக்காத சிவகுமார், கைக் குழந்தையாக உள்ள கடைசி குழந்தையை, குழந்தை பாக்கியம் இல்லாத பணக்கார சோ வீட்டு வாசலில் வைத்து விட்டு வருகிறார். பிறகொரு சமயத்தில், வில்லன்களுடன் நடக்கும் கைகலப்பில் ஒரு கொலை நடக்க, சிவகுமார் சிறை செல்கிறார்.

சுஜாதாவிடம் வளரும் பையன் திருடனாகிறான்; பெண் முறை கேடான வழிகளில் சந்தர்ப்பவசத்தால் சிக்குகிறாள். இன்னொரு பெண் கண் பார்வை இழக்கிறாள். சோவிடம் வளரும் பையன் (சுதாகர்) நல்லவனாகவும், வல்லவனாகவும் ஆகிறார். இதற்கிடையே சிவகுமார் சிறையில் சகஸ்ரநாமத்திடம் சைவ தத்துவங்களைக் கற்கிறார். விடுதலையானவுடன் ஓர் ஆசிரமத்தில் சேர்கிறார். மரணப் படுக்கையில் இருக்கும் அந்த மடாதிபதி இவரையே புதிய மடாதிபதி ஆக்குகிறார்.

சாமியாரான சிவகுமார் எப்படி சுஜாதாவுடைய கெட்டுப் போன பெண்ணுக்குத் திருமணம் செய்து வைக்கிறார், சுதாகரை அவள் காதலியுடன் சேர்க்கிறார், சுஜாதாவின் சந்தேகங்களைப் போக்குகிறார், இன்னும் பல செய்கிறார் என்பது மீதி கதை. முடிவில் சிவகுமாரைக் குறி வைக்கும் தோட்டாவைத் தான் உள்வாங்கி தியாகியாகச் சாகிறார் அவர் துணைவி. மொத்தத்தில் இந்தக் கதையில் என்ன சொல்ல வருகிறார் என்பது இயக்குநருக்கே வெளிச்சம்.

வெண்ணிறாடை மூர்த்தி, சுருளி ராஜன், விஜய பாஸ்கர், மௌலி, கண்ணன் போன்றோரும் இப்படத்தில் நடித்துள்ளனர். 

Wednesday, September 5, 2018

கழுகு

ஓர் ஆங்கிலப் படத்தின் அதிகாரப்பூர்வமற்ற ரீமேக் தான் இப்படம். எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் 6 மார்ச் 1981யில் வெளியான இப்படம் ரஜினியின் முக்கியமான வெற்றி படங்களில் ஒன்று.

சோவுக்குப்  பத்திரிகையாளர் வேடம். ராமசாமி எனப் பெயர். குணச்சித்திர வேடம்; இடைவேளைக்குப் பிறகுதான் வருகிறார். எஸ்.பி.முத்துராமன் நட்பின் காரணமாகச் சோ நடித்த படம் என நினைக்கிறேன். இவருடைய பாத்திரத்தைப் பற்றி பெரிதாகச் சொல்ல எதுவுமில்லை.

ரஜினி ரசிகர்களுக்குப் பிடிக்கும்படியான மசாலாப் படம். ரஜினி ரதியைக் காதலித்துக் கை பிடிக்கிறார். சொகுசு பஸ்ஸில், நண்பர்களையும் சேர்த்துக் கொண்டு மனைவியுடன் ஹனிமூன் போகிறார். ஒரு காட்டில் நர பலி கொடுப்பதைப் பார்க்கிறார். பல போராட்டங்களுக்குப் பிறகு நர பலி கொடுக்கும் கூட்டத்தை ஒழித்துக் கட்டுவதே மீதி கதை.

இளையராஜா இசையில் பாடல்கள் எல்லாம் அருமை.

தேங்காய் சீனிவாசன், வி.கே.ராமசாமி, சுருளி ராஜன், சுமலதா, ஒய்.ஜி.மகேந்திரன், சங்கிலி முருகன் போன்றோரும் படத்தில் நடித்துள்ளனர். 

Sunday, September 2, 2018

கடவுளின் தீர்ப்பு

ஜூலை 1981யில் வெளியான இப்படத்தை இயக்கியவர் விந்தன். விஜயபாபு, சங்கீதா என மிகவும் அறியப்படாதவர்கள் நாயகன்-நாயகி.

ஜாதிக் கொடுமைச் சாடும் கதைக்களம். ஆனால் நடிகர்களின் சுமார் நடிப்பு, சுமாரான இசை மற்றும் திரைக்கதை, பலமற்ற வசனம் ஆகிய காரணங்களால் படம் நன்றாக இல்லை. படத்தின் ஒரே பலம் சோ. அவர் குணச்சித்திர வேடத்தில் வருகிறார். சிற்சில இடங்களில் மறைமுகமாக அரசியலைச் சாடுகிறார். மற்றபடி அவருடைய வாடிக்கையான கேலி, கிண்டல் இதில் கிடையாது. இருந்தாலும் அவர் தோன்றுகின்ற காட்சிகள் பார்க்கும்படி இருக்கின்றன. அதற்குக் காரணம் அவருடைய நிறைவான நடிப்பு. சங்கரன் ஐயர் என்பது அவருடைய கதாபாத்திரப் பெயர். தாழ்த்தப்பட்ட குலத்தைச் சேர்ந்த எம்.பானுமதியைத் திருமணம் செய்து கொள்வதால், அவரை ஊரார் கோவிலில் பூஜை செய்வதிலிருந்து விலக்குகிறார்கள். ஜாதிக் கொடுமைக்கு எதிராக வாதிடும் வேடம் அவருக்கு.

மேஜர் சுந்தர்ராஜனுடைய மகளான சங்கீதா தாழ்த்தப்பட்ட குலத்தைச் சேர்ந்த விஜயபாபுவைக் காதலிக்கிறார். அதனால் விளையும் எதிர் வினைகளைத் தாண்டி அவர்கள் எப்படி ஒன்று சேர்ந்தார்கள் என்பதே கதை.

விஜயகுமாரி, காந்திமதி, சுருளிராஜன், ஸ்ரீகாந்த் போன்றோரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.