Tuesday, July 25, 2017

நான் யார் தெரியுமா?

'நான் யார் தெரியுமா?' - 1967யில் வெளியான இப்படம் சோவுடைய ஆறாவது படமாக இருக்க வேண்டும்.  

ஜெய்சங்கர் ஹீரோ. வி.வி.ரமணன் இயக்கம். பாரதி, பி.ராதிகா, ஓ.ஏ.கே.தேவர் போன்றோர் நடித்துள்ளனர். 

ஜெய்சங்கர் பாணி மசாலா கதை. ஜெய்யுடைய பரம்பரைச் சொத்தை அபகரிக்க வில்லன் கூட்டம் முயலும். அதிலிருந்து ஜெய் மீள்வதே கதை. ஜெய்யுடைய காதலி பாரதி. அவருடைய அண்ணன் சோ. அவருக்கு ஜோடி ராதிகா. எல்லாரும் ஜெய்க்கு உதவுவார்கள். சோ கோமாளித்தனமான வேடத்தில் வருகிறார்; ஓரிரு காட்சிகளில் பெண் வேடத்திலும் தோன்றுகிறார். சொல்லிக் கொள்ளும்படியான படமில்லை.

Monday, July 24, 2017

சரஸ்வதியின் செல்வன்

1967யில் மேடையேறிய "சரஸ்வதியின் செல்வன்" சோவுடைய ஆகச் சிறந்த நாடகங்களில் ஒன்று. கேலி, கிண்டல், நையாண்டி - Cho at his best!

எழுத்தாளர் தாசானு தாசன் என்ற கதாபாத்திரம் சோவுக்கு. அவரைத் தவிர யாருமே இந்தப் பாத்திரத்தில் நடிக்க முடியாது. இன்றைய கால கட்டத்தின் சென்னை வட்டார மொழியில் சொல்ல வேண்டுமென்றால் சும்மா எல்லாரையும் வஞ்சனையில்லாமல் கலாய் கலாய் எனக் கலாய்த்திருப்பார்.

தாசானு தாசன் ஒரு சினிமா கதையைச் சொல்ல, அந்த அபத்தமான லாஜிக் இல்லாத கதையில் வரும் எல்லாப் பாத்திரங்களுக்கும் உயிர் கொடுக்கிறாள் சரஸ்வதி. அவர்கள் மூலம் தமிழ்க் கொலை புரியும் எழுத்தாளனுக்குப் புத்தி புகுத்த நினைக்கிறாள் சரஸ்வதி. அந்தப் பாத்திரங்கள் இவர் மீது கொலை வழக்கு போடுகின்றனர். அதிலிருந்து அவர் எப்படி தப்பி வருகிறார் என்பதே மீதி கதை.


சினிமாவுக்கு கதை எழுதுபவர்கள், அதில் நடிப்பவர்கள், தயாரிப்பவர்கள் எனச் சகட்டு மேனிக்கு அனைவரையும் கிண்டலடித்திருப்பார் சோ. இதே கதை சற்று விரிவாக "சரஸ்வதியின் சபதம்" என்ற பெயரில் 80களின் இறுதியில் தூர்தர்ஷனில் வெளியாகி, பல பிரபல கதாநாயக நடிகர்கள் மற்றும் நகைச்சுவை நடிகர்களின் வயிற்றெரிச்சலை கட்டிக் கொண்டது என்பது உபரித் தகவல்.

Sunday, April 23, 2017

Is God dead?

இது சோவின் அருமையான நாடகங்களில் ஒன்று. கேலி, கிண்டல், sarcasm - Cho at his best in this play! 1967 யில் முதன் முதலாக மேடையேறிய நாடகம்.

டி.பி.க்கு மருந்தைத் தற்செயலாக கண்டுபிடிக்கும் டாக்டர் அதன் மூலம் புகழும் விருதும் சம்பாதிக்க வழி செய்து கொள்கிறார். அந்த புகழில் பங்கு பெற கடைசி வரை முயற்சி செய்யும் உதவி டாக்டர், கடைசியில் பலர் உயிர் இழக்க காரணம் தெரிந்து இருந்தும் வெளிநாடு சென்று படிக்கும் வாய்ப்பை லஞ்சமாகப் பெற்று நேர்மையின்றி நடந்து கொள்கிறார். பணம், புகழ், போலி கௌரவம் போன்ற காரணங்களுக்காக மட்டும் சமூக சேவை செய்யும் பெண்மணி டாக்டருடன் தாம் இணைந்து நடத்திய மருத்துவ காம்பில் பலர் இறக்க, அதிலிருந்து தப்பிக்க ஊரை விட்டு ஓடி விடுகிறார். தாம் கண்டுபிடித்த மருந்துக்காக கிடைக்கும் புகழ், விருதுகளை மகிழ்வுடன் ஏற்றுக் கொள்ளும் டாக்டர் அதே மருந்தால் எல்லாரும் இறப்பதை அறிந்தவுடன் சாமர்த்தியமாக பழியை ஏற்றுக் கொள்ள மறுக்கிறார். டாக்டர் தான் குற்றவாளி என்பதைக் கண்டுபிடித்ததும் டாக்டர்கள் பெயர் கெட்டு விடும் என்ற காரணத்தால் அதை மறைக்கின்றனர் டாக்டர்கள் குழு. டாக்டர் தான் குற்றவாளி என்பதைத் தெரிந்திருந்தும், அதைப் பற்றி தாம் சேரி மக்களிடம் சொன்னால், அவர்களுக்கு இறைவனிடம் இருக்கும் நம்பிக்கை பொய்த்து விடும் என்பதால் மௌனம் சாதிக்கிறார்.

இப்படி நேர்மையின்றி நடந்து கொள்ளும் மக்களைக் காட்டியே ஆசிரியர் கேள்வி கேட்கிறார் - இறைவன் இறந்து விட்டானா என்று. இறைவன் இருக்கிறானா இல்லையா என கேள்வி எழுப்பவில்லை. அவன் உண்டு; ஆனால் உலகத்தில் நடக்கும் அநியாயத்தை எல்லாம் பார்த்தால் அவன் தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது என ஆசிரியர் சொல்கிறார் - மைக்கேல் என்ற நாத்திகனாக இருந்து டாக்டர் செய்யும் சேவையை உண்மை என நம்பி கடவுள் மீதும் நம்பிக்கை கொண்டவனாக மாறும் கேரக்டர் மூலம்.


சீரியஸான சப்ஜெக்ட் என்றாலும் நாடகம் முழுக்க சீரியஸாக நகரவில்லை. டாக்டர் தோன்றும் காட்சிகளில் அவர் பேசும் வசனங்களில் கிண்டலும், நகைச்சுவையும் கொட்டிக்  கிடக்கின்றன