Sunday, July 29, 2018

ஆறிலிருந்து அறுபது வரை

9 செப்டம்பர் 1979யில் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் வெளியான இப்படம் இன்றளவிலும் ரஜினியின் நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்த படமாகப் போற்றப்படுகிறது. நம்ப முடியாத, மிகவும் வேகமான கடைசி 10-15 நிமிடங்களைத் தவிர்த்தால் படம் நன்றாகவே உள்ளது. சோ அழகேசன் என்ற பெயரில் பத்திரிகையாளராகவும் ரஜினியின் நண்பனாகவும் வருகிறார். இவர் இவருடைய அக்மார்க் அரசியல் வசனங்களை அவ்வப்போது பேசுகிறார். ஆனால் அவருக்கு நகைச்சுவை வேடமில்லை; குணச்சித்திர வேடம். நிறைவாகச் செய்துள்ளார்.

ஆறு வயதில் தந்தை இறந்ததிலிருந்து குடும்பத்தைத் தாங்கிப் பிடிக்கிறார் ரஜினிகாந்த். காதல் தோல்வி, பணக் கஷ்டம், தாயின் மரணம் இவற்றுக்கிடையே தம்பி தங்கையைப் படிக்க வைக்கிறார். பெரும் பணக்காரனாகும் தம்பியும், பணக்காரனைத் திருமணம் செய்து கொள்ளும் தங்கையும் இவரைப் புறக்கணிக்கிறார்கள். வேலை இழக்கிறார். மனைவி படாபட் ஜெயலட்சுமியை நெருப்பில் பறிகொடுக்கிறார். வறுமையில் குடும்பமே தத்தளிக்கிறது. பின் கதை எழுதி பிரபலமாகி, பத்திரிகை தொடங்கி பணக்காரராகி, அவார்ட் வாங்குகிறார். அப்போது இவருடைய உடன் பிறப்புகள் சொந்தம் கொண்டாடுகின்றனர்.

பாடல்களும் அருமை. நடிகர்கள் அனைவரும் நிறைவாக நடித்துள்ளனர். தேங்காய் சீனிவாசன், சுருளிராஜன், ஜெயா, சங்கீதா, எல்.ஐ.சி. நரசிம்மன் எனப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே படத்தில் உள்ளது. நகைச்சுவைக் காட்சிகள் இல்லை; ஆனால் அது குறையாகத் தெரியவில்லை. 

நாடகமே உலகம்

கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் 18 மே 1979யில் வெளிவந்த இப்படம் எப்படி படத்தை மோசமாக எடுக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக விளங்கும் படமாகும். பெரிய இயக்குனர்கள் - பெரிய நடிகர்கள் - ஆனால் ஏன்  இப்படி ஒரு படம்?

கோடீஸ்வரர் சுந்தர்ராஜன்- எம்.என்.ராஜம் தம்பதியுடைய மகள்  கே.ஆர்.விஜயா இளகிய மனம் படைத்தவர். ஏழைகளுக்கு அள்ளித் தருபவர். ஒரு லட்சம் செலவழித்து தம்மிடம் வேலை பார்க்கும் ஜெயமாலினிக்குத் திருமணம் செய்து வைக்கிறார். அதனால் கோபம் கொள்ளும் சுந்தர்ராஜன் பெண்ணை வீட்டை விட்டு அனுப்பி விடுகிறார். அதே சமயம் தாம் அவருடைய சொந்தப் பெண் இல்லை என்ற உண்மையும் விஜயாவுக்குத் தெரிகிறது. தாம் உதவிய ஜெயமாலினி வீட்டிலேயே தங்குகிறார். அவர் வில்லன் நம்பியாருடன் சேர்ந்து கொண்டும் தம்முடைய கணவரான சரத்பாபுவைக் கொல்ல முயல்கிறார். அதை ஹீரோ மோகன்பாபு உதவியுடன் விஜயா தடுக்கிறார். இது தான் கதை. சோ ரத்தன் என்ற பெயரில் சேட் நம்பியாரின் வேலைக்காரராக வருகிறார். நகைச்சுவை சுத்தமாக எடுபடவில்லை. அவர் தோன்றும் காட்சிகளும் குறைவு.

மனோரமா, சி.ஐ.டி.சகுந்தலா, வெண்ணிறாடை நிர்மலா போன்றோரும் படத்தில் நடித்துள்ளனர். 

Thursday, July 26, 2018

சக்கப் போடு போடு ராசா

எஸ்.பி.முத்துராமன் இயக்கம். வெளியான தேதி 15 செப்டம்பர் 1978.

சுமாரான படம். சோ-மனோரமா தோன்றும் காட்சிகள் மட்டுமே படத்தில் ரசிக்கும்படி உள்ளன. ஐயாசாமி என்ற பெயரில் நெல்லைத் தமிழில் சோ விளாசித் தள்ளுகிறார். படம் முழுக்க அவர் வருகிறார். அதுவே படத்தின் பலம். இதில் அரசியல் பேசவில்லை; உடல் மொழியில் சிரிக்க வைக்கவில்லை; நெல்லைத் தமிழில் கிண்டலாகவும், யதார்த்தமாகவும், அப்பாவித்தனமாகவும் பேசியே நம்மைச் சிரிக்க வைத்து விடுகிறார்.

ஜெய்சங்கர்-ஜெயசித்ரா  ஹனிமூனுக்காக ஒரு ஹோட்டலில் தங்குகிறார்கள். அதன் முதலாளி மேஜர் சுந்தர்ராஜன் கொள்ளைக்காரர். அவரை அவருடைய கையாளான ஸ்ரீகாந்த் கொன்று விடுகிறார். அதைப் பார்க்கும் ஜெயசித்ரா போலீசில் சொல்ல, நிரூபணம் இல்லாததால் வில்லன்கள் தப்பிக்கின்றனர். பின்பு அவர்களே தேங்காய் சீனிவாசனைக் கொன்று அப்பழியை ஜெயசித்ரா மீது சுமத்துகின்றனர். ஜெய்சங்கர் எப்படி உண்மையைக் கண்டுபிடித்து தம்முடைய மனைவியை மீட்டார் என்பதே மீதி கதை.

கமல்ஹாசன், படாபட் ஜெயலட்சுமி, சுருளி ராஜன், தங்கவேலு, கண்ணன், வெண்ணிறாடை மூர்த்தி, உசிலை மணி, எஸ்.எஸ்.சந்திரன், டைப்பிஸ்ட் கோபு, அசோகன் போன்றோரும் படத்தில் நடித்துள்ளனர்.