Friday, February 23, 2018

வீட்டுக்கு வந்த மருமகள்

சோ நடித்த பல தேவையற்ற படங்களில் இதுவும் ஒன்று. 1973 யில் வெளிவந்த இப்படத்தை அறிமுக இயக்குனரான  ஆர்.விட்டல் இயக்கியுள்ளார். சோவுக்குப் பெண்டாட்டிக்குப் பயந்த அசட்டுப் பாத்திரம். நகைச்சுவை சொல்லும்படியாக இல்லை; அசடு வழிகிறது. சாம்பு என்பது கதாபாத்திரப் பெயர். மனோரமா ஜோடி.

பல நட்சத்திரங்கள் இருந்தும் நல்ல திரைக்கதையோ வசனங்களோ இல்லாததால் படம் சோபிக்கவில்லை. ஏ.வி.எம். ராஜன் பணக்கார மாமியாரான ஜி.வரலட்சுமியிடம் அவமானப்பட்டு வீட்டை விட்டு வெளியேறுகிறார். மனநிலை பாதிக்கப்பட்டு பல வருடங்களுக்குப் பிறகே திரும்புகிறார். அவருடைய மூத்த மகளான மனோரமா தம்முடைய பாட்டியைப் போல திமிர் பிடித்தவராக இருக்கிறார். மகன் ரவிசந்திரனும் மகள் நிர்மலாவும் நல்ல மனம் படைத்தவர்கள். நிர்மலா ஏழையான முத்துராமனைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டாலும், வரலட்சுமியால் புகுந்த வீட்டுக்குப் போக முடியாமல் தவிக்கிறார். ரவிசந்திரனுடைய காதலியான லதா வீட்டுக்குள் புகுந்து தம்முடைய அடாவடித்தனத்தால் பாட்டியைத் திருத்தி, நிர்மலாவையும் புகுந்த வீட்டுக்கு அனுப்புவதே கதை.

லதா தான் தலைப்புக்கேற்ற நாயகி என்றாலும், அவரை விட நிர்மலாவுக்கு ஸ்கோப் அதிகம். அதைப் போல நாயகன் ரவிசந்திரனைவிட அவருடைய அப்பாவான ராஜனுக்குக்  காட்சிகள் அதிகம். வி.எஸ்.ராகவன், காந்திமதி, தேங்காய் சீனிவாசன், எம்.என். ராஜம் எனப் பெரிய பட்டாளமே படத்தில் உள்ளது.

பாடகி வாணி ஜெயராம் அறிமுகமானது இப்படத்தில் தான்.

No comments:

Post a Comment