Friday, September 7, 2018

துணைவி

வலம்புரி சோமநாதன் இயக்கத்தில் ஏப்ரல் 1981யில் வெளியான இப்படம் below average category. சோவுக்கு ஒரு சிறிய வேடம். எம்.என்.ராஜம் ஜோடி. அவ்வப்போது சிரிக்க வைக்க முயல்கிறார். ஆனால் நமக்குத் தான் சிரிப்பு வரவில்லை. இது இவருக்குத் தேவையில்லாத படம்.

சிவகுமார் சுஜாதா தம்பதியினர்க்கு மூன்று குழந்தைகள். சந்தோஷமாக வாழ்க்கை சென்று கொண்டிருக்கிறது. அப்போது அவருக்கு தேங்காய் சீனிவாசன் மூலம் மிரட்டல் வருகிறது. அதனால் அவர் தாம் வேலை செய்யும் வங்கியில் கருப்புப் பணத்தைக் கலக்கிறார். சுஜாதா தம்முடைய கணவர் ஏதோ தவறு செய்வதாக எண்ணி நான்கு  குழந்தைகளுடன் வெளியேறி, கூலி வேலை செய்து பிழைக்கிறார். வறுமையில் அவர்கள் வாடுவதைப் பார்த்துப் பொறுக்காத சிவகுமார், கைக் குழந்தையாக உள்ள கடைசி குழந்தையை, குழந்தை பாக்கியம் இல்லாத பணக்கார சோ வீட்டு வாசலில் வைத்து விட்டு வருகிறார். பிறகொரு சமயத்தில், வில்லன்களுடன் நடக்கும் கைகலப்பில் ஒரு கொலை நடக்க, சிவகுமார் சிறை செல்கிறார்.

சுஜாதாவிடம் வளரும் பையன் திருடனாகிறான்; பெண் முறை கேடான வழிகளில் சந்தர்ப்பவசத்தால் சிக்குகிறாள். இன்னொரு பெண் கண் பார்வை இழக்கிறாள். சோவிடம் வளரும் பையன் (சுதாகர்) நல்லவனாகவும், வல்லவனாகவும் ஆகிறார். இதற்கிடையே சிவகுமார் சிறையில் சகஸ்ரநாமத்திடம் சைவ தத்துவங்களைக் கற்கிறார். விடுதலையானவுடன் ஓர் ஆசிரமத்தில் சேர்கிறார். மரணப் படுக்கையில் இருக்கும் அந்த மடாதிபதி இவரையே புதிய மடாதிபதி ஆக்குகிறார்.

சாமியாரான சிவகுமார் எப்படி சுஜாதாவுடைய கெட்டுப் போன பெண்ணுக்குத் திருமணம் செய்து வைக்கிறார், சுதாகரை அவள் காதலியுடன் சேர்க்கிறார், சுஜாதாவின் சந்தேகங்களைப் போக்குகிறார், இன்னும் பல செய்கிறார் என்பது மீதி கதை. முடிவில் சிவகுமாரைக் குறி வைக்கும் தோட்டாவைத் தான் உள்வாங்கி தியாகியாகச் சாகிறார் அவர் துணைவி. மொத்தத்தில் இந்தக் கதையில் என்ன சொல்ல வருகிறார் என்பது இயக்குநருக்கே வெளிச்சம்.

வெண்ணிறாடை மூர்த்தி, சுருளி ராஜன், விஜய பாஸ்கர், மௌலி, கண்ணன் போன்றோரும் இப்படத்தில் நடித்துள்ளனர். 

No comments:

Post a Comment