Thursday, November 29, 2018

சாதல் இல்லையேல் காதல்

வரிக்கு வரி வார்த்தைக்கு வார்த்தை நகைச்சுவைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்துச் சோ எழுதிய நாடகம் இது. இவருடைய மற்றைய நாடகங்களில் உள்ள சமூகச் சீர்திருத்தக் கருத்தோ, அரசியல் நையாண்டியோ இதில் கிடையாது. லாஜிக் எதுவும் பார்க்காமல் வயிறு குலுங்கச் சிரிக்க வேண்டுமென்றால் இந்நாடகத்தைப் படிக்கலாம்.

இந்த நாடகத்தைக் கல்கி இதழில் தொடர்கதையாகச் சோ எழுதினார். 1964யில் இதை இவர் எழுதியிருக்கக் கூடும் என நினைக்கிறேன். முக்கியமாக, இந்த நாடகத்தை சோ மேடையேற்றவேயில்லை. பல வருடங்களுக்குப் பிறகு எஸ்.வி.சேகர் இதை மேடையேற்றினார்.

நாகராஜன் என்ற கல்லூரி மாணவன் மனம் போன போக்கில் எதையோ கிறுக்க, அதைப் பெரிய கவிதை என நம்பும் மாலதி என்ற மாணவி அவனைக் காதலிக்கிறாள். இரண்டு மாதங்களில் பத்தாயிரம் ரூபாய் சம்பாதித்துக் கொடுத்தால் மட்டுமே பெண்ணைக் கொடுப்பேன் என மாலதியுடைய சிற்றப்பா நிபந்தனை விதிக்கிறார்.

நாகராஜனுடைய நண்பன் சுரேஷ் அவனைத் தன்னுடன் பம்பாய்க்கு அழைத்துப் போகிறான். நாகராஜன் இறந்து விட்டதாக பொய்யான விளம்பரம் கொடுத்து, அவனை அவனுடைய தம்பியாக நடிக்க வைக்கிறான். இப்படி ஆள் மாறாட்டம் செய்து பணத்தைச் சம்பாதிக்க அவர்கள் செய்யும் முயற்சியும், அதனால் ஏற்படும் குழப்பங்களும், நாகராஜன் தான் சொன்ன பொய்யால் தான் உயிருடன் இருப்பதை நிரூபிக்கப் போராடுவது எனக் கதை நீளுகிறது. முழுவதும் காமெடி கலாட்டா.

கல்லூரி மாணவர்களின் செய்கைகள், கவிஞர்கள் எதையோ கிறுக்கி கவிதை எனச் சாதிப்பது, இளைஞர்களின் வெளிநாட்டு நாகரீக மோகம், இப்படி பல விஷயங்களையும் தமக்கே உரிய நகைச்சுவையுடன் விளாசித் தள்ளுகிறார் சோ.

No comments:

Post a Comment