Tuesday, November 13, 2018

சாத்திரம் சொன்னதில்லை

சோவின் தலை சிறந்த நாடங்களில் ஒன்று. 1980யில் மேடையேறிய நாடகம்.

இது அரசியல் நாடகம் இல்லை. ஜாதி ஏற்றத் தாழ்வைப் பற்றிய சமூகப் பிரச்சினையின் அடிப்படையில் எழுதப்பட்ட நாடகம்.

சாரியார் என்ற பிராமணர் ஜாதிப் பாகுபாடு கூடாது என எல்லோருக்கும் சொல்லி வருவார். ஒரு தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பையனும், வேறொரு வகுப்பைச் சேர்ந்த பெண்ணும் காதலிக்கும் போது, அவர்களைச் சேர்த்து வைக்க இருவருடைய பெற்றோர்களுடனும் பேசிவிட்டு வருவார். இவரைச் சோதிக்க வேண்டும் என நினைக்கும் டாக்டர் ஒருவர், இவருடைய மகனும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவனும் ஒரே நாளில் ஒரே மருத்துவ மனையில் பிறந்த உண்மையை வைத்துக் கொண்டு, இரண்டு குழந்தைகளும் மாறி விட்டதாகக் கதை கட்டிவிடுவார். அதை உண்மை என நம்பும் சாரியார் அதுவரை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய தம்முடைய மக்கு மகனை வைய ஆரம்பிப்பார். தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவனைக் கொண்டாடுவார். ஒரு கட்டத்தில் அந்தத் திருமணம் நின்று விட, மனம் மகிழ்வார்; தம்முடைய மகன் இல்லை என அவர் நம்பும் தம்முடைய மகனுக்கே, அப்பெண்ணை மணமுடிக்க சம்மதிப்பார். அவர் பேசிய தர்ம நியாயங்கள் அவருடைய செய்கையில் இருக்காது. நியாய தர்மங்கள் பேசுபவர்கள் தமக்கு என்று வந்தால் வேறு விதத்தில் நடந்து கொள்வார்கள் என்பதே நாடகத்தின் மையக் கருத்து. கடைசியில், அந்த தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவன் இறந்து விட, அவன் தம்முடைய மகன் இல்லை என்ற உண்மை தெரிந்தும், அவனுக்காகக் காரியங்கள் செய்வார் மனம் திருந்திய சாரியார். 

No comments:

Post a Comment