Saturday, December 8, 2018

ஜட்ஜ்மென்ட் ரிஸர்வ்ட்

சோ எழுதி இயக்கிய நல்ல நாடகங்களில் ஒன்று. 1977யில் மேடையேறியது. இதை அவருடைய ஆகச் சிறந்த நாடகம் எனச் சொல்ல முடியாது.

ஓர் ஆண் ஒரு பெண்ணைக் கற்பழித்து விடுகிறான். அவனுக்குத் தண்டனை வாங்கித் தர ஒரு சமூகச் சேவகி, ஒரு கல்லூரிப் பேராசிரியர், ஒரு பத்திரிகை ஆசிரியர், ஒரு சினிமா டைரக்டர்  ஆகியோர் முயல்கிறார்கள். அவர்கள் நாடும் வக்கீல் அந்த ஆண் சில ஆண்டுகளுக்கு முன் தம்முடைய பெண்ணின் மானத்தைக் காத்தவன் என்பதால் அவன் இத்தவற்றைச் செய்திருக்க மாட்டான் என நம்புகிறான். ஆனால் அந்த ஆளே குற்றம் செய்ததை ஒப்புக் கொள்கிறான்.

வக்கீலுடைய மகள் குடும்ப மானம் பறி போகும் என்பதால் தந்தை பேச்சைக் கேட்டு குற்றம் சாட்டப்பட்டவனுக்கு ஆதரவாக சாட்சி சொல்ல மறுத்து விடுகிறாள். அதனால் மனம் வெறுத்துப் போகிறான்  வக்கீல். தவறு செய்திருந்தாலும் அந்த ஆசாமியைக் காப்பாற்ற தீர்மானிக்கும் வக்கீல் சமூகம், பத்திரிகை, சினிமா போன்றவற்றின் மீது பழி சுமத்தி அவனை விடுவிக்க முடிவு செய்கிறான்.

வக்கீல் பிறகு அப்படிச் செய்வது சரியாக இருக்காது எனத் தீர்மானிக்கிறான். இதற்கிடையே குற்றம் சாட்டப்பட்டவனே குற்றத்தை ஒப்புக் கொண்டு தண்டனை வாங்குகிறான்.

ராஜ்ய சபா எம்.பி. சீட்டுக்காகச்  சமூகச் சேவை செய்வதாகக் காட்டிக் கொள்கிறாள். இந்தக் கதையை எழுதி பிரசுரித்துப் பணம் பண்ணுகிறார் பத்திரிகையாளர். சினிமா இயக்குனர் இக்கதையைப் படமாக்கி பல லட்சங்கள் சம்பாதிக்கிறார். இப்படி எல்லாருமே பணம் அல்லது பதவிக்காக அப்பெண்ணுக்கு உதவுவதைப் போல நடிக்கிறார்கள். யாருமே அப்பெண்ணின் கதி என்ன என்பதை யோசித்துக் கூட பார்ப்பதில்லை. குற்றம் செய்தவன் பணம் வாங்கிக் கொண்டே (சினிமா இயக்குனரிடமிருந்து) குற்றத்தை ஒப்புக் கொள்கிகிறான். அவன் தப்பித்துக் கொண்டால் கதையில் சாரம் இருக்காது என இயக்குனருக்குப் பயம்.

வக்கீல் குமாஸ்தா ஜெகதீஷாக சோ. நக்கல் பிடித்த கேரக்டர். தம்முடைய நகைச்சுவையான ஆனால் கூரிய வசனங்களால் மற்ற கதாபாத்திரங்களின் அவலங்களைச் சாடுகிறார். இந்த நாடகத்தின் மிகப் பெரிய பலமே சோ பேசும் வசனங்கள். போலியான சமூகச் சேவகர்கள், மற்றவர்களின் துன்பத்தை வெட்கமோ பரிதாபமோ இல்லாமல் பணம் செய்யும் கதாசிரியர்கள் மற்றும் சினிமாக்காரர்கள், தம்முடைய மகன் மாட்டிக் கொண்டாலும் பரவாயில்லை தம்முடைய பெயர் கெடக் கூடாது என நினைக்கும் தந்தைமார்கள் எனப் பலதரப்பட்டவர்களையும் சோ இந்நாடகத்தின் மூலம் சாடுகிறார்.

ஆனால் மற்ற பாத்திரங்கள் பேசும் வசனங்கள் சொல்லும்படியாக இல்லை. குறிப்பாக குற்றம் செய்தவனுடைய தந்தை மற்றும் கல்லூரிப் பேராசிரியர் ஆகியோருடைய பாத்திரங்கள் சரியாக அமைக்கப் படவில்லை.

எத்தனை உண்மைச் சம்பவங்கள் கதைகளாகவும் சினிமாவாகவும் வருகின்றன. அவற்றை எழுதுபவர்களுக்கும்  இயக்குபவர்களுக்கும் அச் சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்களைப் பற்றி அக்கறை இல்லை என்பதே நிதர்சனம். அதைப் போல பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களே காசை வாங்கிக் கொண்டு, அவர்களுடைய கதையை விற்பதையும்  பார்க்கிறோம். 40 ஆண்டுகளுக்குப் பிறகும் சோ எழுதிய இந்நாடககத்தில் சுட்டி காட்டப்பட்டுள்ள அவலங்கள் இச்சமூகத்தில் இருப்பது வேதனைக்கும் வெட்கத்துக்கும் உரியவை.

No comments:

Post a Comment